முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 14, 2018

ராமநாதபுர வாகன நெரிசலுக்கு விமோசனம் எப்போது?!!

No comments :


ராமநாதபுரத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி கொண்டே செல்வதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள் துவங்கும்போது தேவையான பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்திய பின்புதான் நகராட்சி அனுமதியளிக்க வேண்டும். 


ஆனால் ராமநாதபுரத்தில் அக்ரகாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, சாலைதெருக்களில் இதை ஆய்வு செய்யாமல் அதிகளவில் கடைகள் திறக்க அனுமதிப்பாக புகார் எழுந்துள்ளது. இதனால் கடைகளுக்கு வருபவர்கள் ரோட்டில்  பார்க்கிங் செய்கின்றனர். இதன் காரணமாக இந்த சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 

சாலைகளை கடந்து செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே புதிதாக திறக்கப்படும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்துள்ளனவா என ஆய்வு செய்த பின்பே அனுமதியளிக்க வேண்டும்; இதுவரை முறையாக  பார்க்கிங் வசதி செய்யாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என,
  நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

TNPSC குரூப்-2; 1,199 பணியிடங்களுக்கான அறிவிப்பு!!

No comments :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மொத்தம் 1,199 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு வி்ண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சில பணிகளுக்கு 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.




விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். 9-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். செப்டம்பர் 11-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நவம்பர் 11-ந் தேதி நடைபெறும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்!!

No comments :
முதுகுளத்தூர்-சாயல்குடி புதிய சாலையின் நடுவில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்யாமல் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலை  பொறியாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாயல்குடி-தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் கடலாடி-முதுகுளத்தூர் சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. 

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், மின்வாரிய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் காவிரி குழாய் இடம் மாறி செல்கிறது. சாலையின் குறுக்கே குழாய் இருப்பதால், போக்குவரத்து செல்ல செல்ல புதிய சாலை நாசமடைந்து, குழாயும் சேதமடைந்து விட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி சாலையோரம் பெருகி வருகிறது. 

நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சாலையின் வழியே வாலிநோக்கம் அரசு உப்பளத்திலிருந்து உப்புகளை ஏற்றி அதிக பாரத்துடன் லாரிகள் வருவதால், உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சக்கரம் சிக்கிவிடும் அபாயத்தில், பேருந்துகளை இச்சாலையில் இயக்க முடியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளம் தெரியாமல் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த அவலநிலை நீடிப்பது குறித்து, பொதுமக்கள் காவிரி கூட்டுக்குடிநீர் உதவிபொறியாளர், மாநில நெடுஞ்சாலைதுறை உதவிபொறியாளருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.
 

பொதுமக்கள் கூறுகையில், ‘‘இரண்டு உதவி பொறியாளர்களும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கடலாடி-முதுகுளத்தூர் புதிய சாலையில் உடைந்து ஓடும் காவிரி குடிநீர் குழாயை சரிசெய்து, சாலையை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)