முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 4, 2018

மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வழங்கி உள்ளது. 
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற முகவரியில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை இயக்குனர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக வேலைநாட்களில் நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 5–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை துணை இயக்குனர், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை - மங்களேஸ்வரி மினி பஸ் சேவை நிறூத்தம்!!

No comments :
கீழக்கரையிலிருந்து மங்களேஸ்வரி நகர் வழியாக சென்று கொண்டிருந்தமினி பஸ் சேவை கடந்த சில நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் மினிபஸ்சை நம்பியுள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

கீழக்கரையில் இருந்து 500 பிளாட், மாலாகுண்டு, இந்திராநகர், திருவள்ளுவர் நகர், சின்னமாயாகுள், முத்துராஜ் நகர், பாரதிநகர், பெரிய நைனார் அப்பா தர்கா வழியாகபுல்லந்தை மங்களேஸ்வரி நகர் வரை மினி பஸ்சின் வழித்தடம் உள்ளது. பள்ளி, கல்லுாரி நேரங்களில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிக பயனுள்ளதாக உள்ளது.



கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றி அடைத்துக்கொண்டு, மினிபஸ் செல்லும் வழித்தடங்களில் டிக்கெட் போட்டு ஏற்றி வருவதால், அதிருப்தியடைந்த மினி்பஸ் நிர்வாகத்தினர் சேவையை நிறுத்தியுள்ளனர்.

மினிபஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு கூறியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியில்லாமல் மினிபஸ் செல்லும் வழித்தடத்தில், அதிகளவு விபத்து ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடரவே செய்கிறது.
பஸ்சில் குறைவான வருவாயை ஈட்டுவதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மின் பஸ் இயங்கும், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து!!

No comments :
கீழக்கரை அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். மாணவி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 59 பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போதுதூத்துக்குடியிலிருந்து உப்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும்-அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன. 



இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும் பவித்ரா(17), முனிஸ்வரி (16), பிரியதர்ஷினி(13), மகேஸ்வரி (16) உள்பட உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய மாணவியை உள்பட பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)