முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 4, 2018

தீபாவளி பலகாரங்கள் விற்பனைக்கு கட்டாயமாக உரிமம் பெற வேண்டும், புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது பண்டிகை காலம் தொடங்கிஉள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 மற்றும் விதிகள் 2011-ன் கீழ் உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.


மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், உணவு பாதுகாப்பு துறையை 94440 42322 என்ற எண்ணிலோ அல்லது ராமநாத புரம் மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண்- 04567 231170-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக ”காவலன்" செயலி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக காவல்துறையில் காவலன் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுஉள்ளது. பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் உதவி கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பெண்கள் மற்றும் முதியோர்கள் தனியாக செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது செல்போன்களில் உள்ள இந்த செயலியை தொட்டால் போதும், சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று, அடுத்த 5 வினாடிகளில் மீண்டும் அவரது அலைபேசிக்கு அழைப்பு வரும். மேலும், அந்த நேரத்தில் இருந்து செல்போனில் ஜி.பி.எஸ். தானாக இயங்க ஆரம்பித்து, அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒலி, ஒளியுடன் செயல்பட தொடங்கிவிடும்.



பாதிக்கப்பட்ட நபர் பேச முடியாத சூழ்நிலையில் இருக்கும்பட்சத்தில் ஜி.பி.எஸ். உதவியுடன் சம்பந்தப்பட்ட இடம் அறிந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்கிருந்து போலீசார் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள் அளிக்கப்படும். மேலும், இந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசிக்கு தங்களது இருப்பிடம் மற்றும் வரைபடம் பகிரப்படும். இணைய இணைப்பு வசதியில்லாத இடங்களில் மேற்படி செயலியை உபயோகித்தாலும், கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி குறுஞ்செய்தி எச்சரிக்கை மூலம் தகவல் சென்றடையும்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் முக்கியத்துவம், நன்மைகள், பயன்படுத்தும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கோகுலகிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காளசுவரன், செய்யது அம்மாள் பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த செயலி பற்றி எடுத்துரைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)