முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 13, 2018

கஜா புயல் வருகை, ராமநாதபுர மாவட்டத்தில் தயார் நிலையில் மீட்புக்குழு - கலெக்டர்

No comments :
தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது வலுப்பெற்று கடும்புயலாக மாறி உள்ளது. இதற்கு தற்போது கஜா(யானை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ள இந்த கஜா புயல் நாகபட்டிணத்தில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கஜா புயல் முதலில் கடலூருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போதைய கணக்கீட்டின்படி கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வருகிற 15–ந் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

இதன்காரணமாக இந்த பகுதியில் பலத்த புயல்காற்றுடன் மழை பெய்யும் என்றும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. கஜா புயல் வலுவிழக்க வாய்ப்பில்லை என்றும் அதிக வலுவடைந்து அதிதீவிர புயலாகத்தான் மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. 15–ந் தேதி முற்பகலில் பாம்பனுக்கு இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கஜா புயலை எதிர்கொள்வது தொடர்பாகவும், மாவட்ட மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இதன்முடிவில் கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

வானிலை ஆய்வு மையம் கஜா புயல் தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து முதல்–அமைச்சர் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் 24 மணி நேர தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட 15 மண்டல அளவிலான குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.

39 தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதியில் தீவிரமாக கண்காணிக்கவும், உடனடி தேவைகளை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க வசதியாக 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பகுதிகளில் 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன. இதற்கான பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உணவு, தண்ணீர், கழிப்பறை, ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 5 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுஉள்ளனர். அதிக புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வெட்டி அகற்றும் எந்திரம், 141 ஜே.சி.பி. எந்திரங்கள், 52 பொக்லைன்கள் தயார்நிலையில் வைக்கபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை பாதுகாக்கவும், தேவையான வசதிகள் செய்யவும் முழுஅளவில் தயாராக உள்ளது.


எனவே, மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மீனவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும். மீனவர்கள் தற்போதைய நிலையில் கடலுக்கு செல்லவில்லை. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த சமயத்தில் பாம்புகள் தொந்தரவை தவிர்க்க பாம்பு பிடிப்பவர்கள் 21 பேர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாடுகளை பிடித்து பாதுகாக்க 132 பேர் தயாராக உள்ளனர். 72 அதிதீவிர பயிற்சி போலீசார் 24 மணி நேர தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் மணல் மூடைகள்அ னைத்து பகுதிகளிலும் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)