முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 20, 2018

கஜா புயல் நிவாரணம்; ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் குடிநீர் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம்,- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1.14 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பிய வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ்   கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அதன்பின்னர்அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் துயர் துடைக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பங்களிப்பு செய்திடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக 2 குழுக்களாக மொத்தம் 40 மர அறுவை இயந்திரங்களுடன், 80 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


அதேபோல நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 6 மர அறுவை இயந்திரங்களுடன் 6 பணியாளர்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் மீட்புப் பணிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 6 குழுக்களாக 30 மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர ஆவின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 265 கிலோ பால் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திட ஏதுவாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 11 டேங்கர் லாரிகளில் 1,14,500 லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.  மேலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இ;வ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)