முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 6, 2018

ஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு ஐந்திணை மரபணு பூங்காவில் எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிபிரம்பு கிராமத்தில் 10 ஏக்கரில் 7 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா தோட்டக்கலைத் துறை சார்பில் மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பூங்கா நடைபாதையில் கற்கள் பெயர்ந்து, தண்ணீர் தேங்கி, பாசி படிந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
இங்கு அமைக்கபட்டிருக்கும் குடில்களின் மேற்கூரை சேதமடைந்து கந்தலாகிப் போனது. 

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு பயணிகள் வருகையை அதிகப்படுத்த மக்களை கவரும் வகையில் பூங்காவை
சிரமைத்து, நவீனப்படுத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்!!

No comments :
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின் தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. காலையில் ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன.

ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார். 

சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து என்ஜின் மட்டும் 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர். அதன் பின்னர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரெயில் பெட்டிகளும் மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக மானாமதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:– பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டு விட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். புதிய பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார். 

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. மண்டபம் வரை ரெயில்கள் இயக்கப்படுவதால் ரெயில்களில் வரும் பயணிகள் இறங்கி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பஸ்களில் சென்றுவருகின்றனர். ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படும் வரை மண்டபத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)