(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 3, 2019

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதியின்மை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிக்கின்றனர்.


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் 800க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகளுக்கு உதவியாளர்களாக உறவினர்கள் உடன் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.


இதனை முறையாக பாராமரிக்காததால் பழுதடைந்து செயல்படாமல்உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினமும் வெளியில் உள்ள கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். வேறு வழியின்றி ஏழை மக்கள் பணம் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் வீரராகவ ராவ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மூடப்பட்ட கட்டண கழிப்பறை:

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும்வெளி நோயாளிகள், உள் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், நோயாளிகளை பார்க்க வருவோர் பயன்படுத்துவதற்காக மருத்துவமனை வளாகத்தில் நவீன கட்டண கழிப்பறை செயல்பட்டு வந்தது. இது கடந்த ஆறு மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் அவசரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதில் பெண்களின் நிலை பரிதாபம்.


இயங்காத பேட்டரி கார்:


முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா தொகுதி வளர்ச்சி திட்ட நிதியில் பேட்டரி கார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நடக்க முடியாமல் வரும் நோயாளிகளை அவர்களுக்கு உரிய வார்டுகளின் வாசல் வரை இதில் கொண்டு விட்டனர். இந்த பேட்டரி காரும் பல மாதங்களாக பழுதாகி பயன்பாடில்லாத நிலையில் உள்ளது. இதனால் வயதான, நடக்க முடியாத நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் இது போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment