முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 17, 2019

ராமநாதபுர மாவட்டத்ட்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட தணிக்கையின்போது முறையான ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:- 

இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அரசு பொது கட்டிடங்களில் உள்ள அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரச் சின்னங்களையும், தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் போன்றவற்றை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 17,945 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


இதில் அரசு பொதுக் கட்டிடங்களில் 12,677 விளம்பரங்களும், தனியார் கட்டிடங்களில் 5,268 விளம்பரங்களும் அடங்கும். உரிய கால அவகாசம் வழங்கியும் முறையே விளம்பரங்களை அகற்றாமல் இருந்த வகையில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் மேற்கொண்ட தணிக்கையின் மூலம் 15 நிகழ்வுகளில் மொத்தம் ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம், பொருட்கள் முறையான ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

குறிப்பாக ரூ.15 லட்சத்து 9 ஆயிரத்து 850 மதிப்பிலான இந்திய பணமும், ரூ.28 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் வெளிநாட்டு பணமும் அடங்கும். இதுதொடர்பாக சுங்கத்துறை மற்றும் வருமானவரி துறை ஆகிய துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நிதி விடுவிப்பு குழு முறையே ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணமானது சம்பந்தப்பட்ட நபரிடம் திரும்ப வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)