முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 6, 2019

சிறப்பு நிலை நகராட்சியான ராமநாதபுரம்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சிக்கு கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேது மண்டலம் என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தலைநகராகத் திகழும் ராமநாதபுரம் நகர் சேதுபதி மன்னர்களின் அரண்மனை உள்ள இடமாகும்.

இந்த ராமநாதபுரம் கடந்த 1959 ஆம் ஆண்டு நகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. அப்போது அதற்கு மூன்றாம் நிலை நகராட்சி அந்தஸ்தே வழங்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1984 ஆம் ஆண்டிலிருந்துதான் ராமநாதபுரத்துக்கு முதல்நிலை நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

முதல் நிலை அந்தஸ்து பெற்ற ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது 33 வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் நகராட்சியுடன் அதை ஒட்டியுள்ள ஊராட்சிகளான சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரக்கோட்டை ஆகியவை இணைக்கப்படும் என்றும், அதனடிப்படையில் சிறப்பு நிலை நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.



முதலமைச்சர் அறிவித்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், தற்போது ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி அந்தஸ்து என்பது ஆண்டு வருவாய் ரூ.10 கோடிக்கு மேலிருக்கும் நகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்தை ராமநாதபுரம் நகராட்சி பெறுவதால் தற்போதைய நகராட்சி பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், சாலை மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தற்போது மக்களவைத் தேர்தல் நடந்துவருவதால், சிறப்பு நிலை நகராட்சிக்கான பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றும் தேர்தல் முடிந்ததும் அதற்கான முறையான அறிவிப்போடு பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

No comments :
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அனீவிஜயா உத்தரவின்பேரில் கடந்த 3 நாட்களாக போதைப்பொருள் விற்பனையை தடுத்து கடத்தல்காரர்களை கைதுசெய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்டோரை கொண்ட தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.



இந்த சோதனையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் சீருடை அணியாத போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனை தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டு விசாரித்தபோது ராமநாதபுரம் அருகே உள்ள நத்தகுளத்தை சேர்ந்த சிவநாதன் மகன் பிரபாகரன்(வயது 37) என்பது தெரிந்தது. அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டபோது 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர்.

இதேபோல, பரமக்குடி சந்தை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கமுதி மேட்டுத்தெருவை சேர்ந்த குருசாமி மகன் முனியசாமி என்ற சேகர்(68) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தை கண்டு அதனை பறிமுதல் செய்ததோடு சேகரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். 


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)