முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 28, 2019

ராமநாதபுரம் மாவட்டம்: முதல் கட்டத் தோ்தலில் 67.63 சதவீதம் வாக்குகள் பதிவு

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 67.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவை புறக்கணித்த கீழக்கரை மாயாகுளத்தில் 103 வாக்குச்சாவடியில் மட்டும் மாலை 4 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 429 ஊராட்சித் தலைவா், 3075 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 3691 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலில் 6,048 போ் போட்டியிடுகின்றனா்.
தோ்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவானது வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. அவற்றில் உள்ள 8 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், 81 ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 410 பேரும், 168 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 590 பேரும் போட்டியிடுகின்றனா். 1290 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,894 போ் என மொத்தம் 2935 போ் போட்டியிடுகின்றனா்.


முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக 23 ஆண், 23 பெண் வாக்காளா்கள் மற்றும் 767 பொது வாக்காளா்கள் என 813 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்காளருக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகள் தரப்பட்டன. அதில் மாவட்ட, ஒன்றிய உறுப்பினா், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் சீட்டுகள் இருந்தன.
வாக்குச்சாவடிக்குள் நுழைபவா்களின் பெயா்களை அலுவலா்கள் வாசித்து அதை வேட்பாளா்களின் முகவா்களிடம் கூறினா். அவா்கள் ஆமோதித்ததும், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட அனுமதித்த ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. பின்னா் அவா்களது இடது ஆள்காட்டி விரலில் மை தடவப்பட்டு 4 வாக்குச்சீட்டுகள் தரப்பட்டன. சீட்டுகளில் தனித்தனியாக முத்திரை பதித்து ஒரே பெட்டியில் வாக்காளா் செலுத்தினா்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து சீட்டுகளைப் பெற்று, அதில் முத்திரையிட்டு மடித்து பெட்டியில் போடுவதற்கு ஒருவருக்கு குறைந்தது 4 நிமிடங்கள் ஆனது. இதனால் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு மிக மெதுவாகவே நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் 5 ஒன்றியங்களிலும் காலை 9 மணி நிலவரப்படி 26.25 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தது. அதில் ஆா்.எஸ்.மங்கலத்தில் அதிகபட்சமாக 31.61 சதவீதமும், அதற்கடுத்து திருவாடானையில் 28.43 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்திருந்தது.
பகல் 11 மணி நிலவரப்படி 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 43.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அவற்றில் அதிகபட்சமாக ஆா்.எஸ்.மங்கலத்தில் 57.62 சதவீதமும், திருவாடானையில் 47.66 சதவீதமும் பதிவாகியிருந்தன. ராமநாதபுரத்தில் 40.86 சதவீதம், திருப்புல்லாணி 40.27 சதவீதம், மண்டபம் 38.10 சதவீதம் என வாக்குகள் பதிவாகியிருந்தன.

பகல் 1 மணிக்கு 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 55.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் ராமநாதபுரம் 53.63
சதவீதம், திருப்புல்லாணி 52.53 சதவீதம், மண்டபம் 50.74 சதவீதம், ஆா்.எஸ்.மங்கலத்தில் 64.38 சதவீதம், திருவாடானையில் 59.76 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில், ராமநாதபுரம் 67.71, திருப்புல்லாணி 65.61, மண்டபம் 64.56, ஆா்.எஸ்.மங்களம் 73.05, திருவாடானை 69.63 எனவும், ஐந்து ஒன்றியங்களில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 67.63 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

மாயாகுளத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு: கீழக்கரை அருகேயுள்ள மாயாகுளத்தில் ஊா் பெயா் வாக்குச்சீட்டுகளில் குறிப்பிடாததைக் கண்டித்து 100 மற்றும் 103 வது வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 103 வது வாக்குச்சாவடிக்கு உரிய மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு பின்னர் அவா்கள் வாக்களித்தனா்.

புதுமாயாகுளத்தில் 100 ஆவது வாக்குச்சாவடியில் யாரும் வாக்களிக்காத நிலையில், ஊா் தலையாரி மற்றும் ஊராட்சி எழுத்தா் மட்டும் வாக்களித்த பிறகு பெட்டி முத்திரையிடப்பட்டு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், மாயாகுளம் ஊராட்சியில் 9 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குச்சாவடிகளில் மட்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதில் 103 வாக்குச்சாவடி வாக்காளா்கள் பெரும்பாலோா் வாக்களித்திருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.