(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 8, 2020

ராமநாதபுரம் நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு "சீல்"!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாத பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.


ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்ட செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை நகராட்சி நிர்வாகம் வட்டியுடன் நபார்டு வங்கிக்கு செலுத்தி வருகிறது. அத்துடன், குடிநீர் விநியோகத்திற்கான பராமரிப்பிற்காக மாதா மாதம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.10 லட்சம் நகராட்சி செலுத்துகிறது.


அத்துடன், மக்களுக்கான ரோடு வசதி, தெரு விளக்கு வசதிகளுடன், நகராட்சி ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.நகராட்சி செலவினத்தை சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை வரிகள், நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் இருந்து பெறப்படும் வாடகை வசூல் மூலம் ஈடு செய்யப்படுகிறது.



நகராட்சிக்கான சிறப்பு நிதி வழங்கப்படாத நிலையில், வரி வசூல் மூலம் நகராட்சியில் நலத் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அலுவலர்கள் கூறுகின்றனர். நகராட்சியில் கடந்தாண்டு நிலுவைத் தொகையுடன் ரூ.17 கோடி வருவாய் பாக்கி வர வேண்டி உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக சொத்து வரி உள்ளிட்டவை மூலம் ரூ.7 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.


குடிநீர் கட்டண வரியாக ரூ1.50 கோடியும், பாதாள சாக்கடை இணைப்பு வரியாக ரூ.1.60 கோடியும்,தொழில் வரி ரூ.25 லட்சமும் நிலுவை உள்ளது.நகராட்சியில் நடப்பு ஆண்டு வருவாய் 60 சதவீதம் வந்துள்ளதாகவும், நிலுவைத் தொகை 40 சதவீதம் வர வேண்டியுள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடல் பகுதியில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத 10 க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment