(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 6, 2020

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு, ராமநாதபுர மாவட்ட எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது!!

No comments :

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில், 11 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். மீதமுள்ள 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இந்தநிலையில், கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கபம், சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அவர், ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கபம் பரிசோதிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை வந்த பரிசோதனையின் முடிவில், மூதாட்டிக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மூதாட்டி வசித்து வந்த கீழக்கரை புதுகிழக்குத் தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், சிறப்பு சுகாதாரக் குழுவினர் அத்தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment