(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 6, 2020

அனுமதி பெற்று வந்தாலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு

No comments :

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர்-மரிச்சுக்கட்டி சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று வாகனங்களில் வருபவர்கள் பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வாகனங்களில் வரும் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


மேலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாணி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். 


எனவே வெளிமாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருபவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் முறையாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment