(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2020

பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி!!

No comments :

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இம்மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வை 6,525 மாணவர்கள், 7.506 மாணவியர் என மொத்தம் 14,031 பேர் எழுதினர். அவர்களில் 5,916 மாணவர்கள், 7.149 மாணவியர் என மொத்தம் 13,065 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 90.67 சதவீதம், மாணவியர் 95.24 சதவீதம். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 30 மாற்றுத்திறன் மாணவ, மாணவியரில் 25 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் 83.3 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 92.30 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்தது. 




பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:

மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,019 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 4.459 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் மாணவியர் 92.17 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.40 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளியில் 86.08 சதவீதம் பேரும், அரசிடம் பாதி உதவி பெறும் பள்ளிகளில் 95.33 சதவீதம் பேரும், தனியார் பள்ளிகளில் 99.25 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளில் 6 பள்ளிகளில் முழுமையான தேர்ச்சியும், 21 பள்ளிகளில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலான தேர்ச்சியும் உள்ளது. அரசு உதவி பெறும் 18 பள்ளிகளில் 2 பள்ளிகள் முழுத் தேர்ச்சியும், 9 பள்ளிகள் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளன. 

முழுமையான தேர்ச்சி எனும் அடிப்படையில் பாதி அரசு உதவி பெறும் 15 பள்ளிகளில் 3 பள்ளிகளும், 45 தனியார் பள்ளிகளில் 37 பள்ளிகளும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்ச்சியில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையில் பாதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, தனியார் பள்ளிகள் 4 என தேர்ச்சியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை காலை வெளியிட்டார்.

 அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி உடனிருந்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் இணையம் மூலமே அந்தந்தப் பள்ளிகளுக்கும், செல்லிடப்பேசி குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டன.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment