முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க முன்வைப்பு நிதி வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். 


திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். மேலும், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவராகவும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். 
சொந்தக் கட்டடம் அல்லது சொந்த இடம் வைத்திருக்க வேண்டும். நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டிற்கு அரசு மானியமாக ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும். 

ஆகவே, இந்தத் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி!!

No comments :

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இம்மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வை 6,525 மாணவர்கள், 7.506 மாணவியர் என மொத்தம் 14,031 பேர் எழுதினர். அவர்களில் 5,916 மாணவர்கள், 7.149 மாணவியர் என மொத்தம் 13,065 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 90.67 சதவீதம், மாணவியர் 95.24 சதவீதம். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 30 மாற்றுத்திறன் மாணவ, மாணவியரில் 25 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் 83.3 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 92.30 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்தது. 




பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:

மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,019 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 4.459 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் மாணவியர் 92.17 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.40 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளியில் 86.08 சதவீதம் பேரும், அரசிடம் பாதி உதவி பெறும் பள்ளிகளில் 95.33 சதவீதம் பேரும், தனியார் பள்ளிகளில் 99.25 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளில் 6 பள்ளிகளில் முழுமையான தேர்ச்சியும், 21 பள்ளிகளில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலான தேர்ச்சியும் உள்ளது. அரசு உதவி பெறும் 18 பள்ளிகளில் 2 பள்ளிகள் முழுத் தேர்ச்சியும், 9 பள்ளிகள் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளன. 

முழுமையான தேர்ச்சி எனும் அடிப்படையில் பாதி அரசு உதவி பெறும் 15 பள்ளிகளில் 3 பள்ளிகளும், 45 தனியார் பள்ளிகளில் 37 பள்ளிகளும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்ச்சியில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையில் பாதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, தனியார் பள்ளிகள் 4 என தேர்ச்சியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை காலை வெளியிட்டார்.

 அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி உடனிருந்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் இணையம் மூலமே அந்தந்தப் பள்ளிகளுக்கும், செல்லிடப்பேசி குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டன.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி நிவாரணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: 

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு தலா ரூ. 1000 (ஆயிரம்) நிவாரணமாக அவரவர் வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகிறது. 



ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 28,937 பேரில் இதுவரை 17,226 பேருக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண நிதி பெறாதவர்கள், தங்களின் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்பு கொள்ளவேண்டும். 

நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி எண் 04567-231410 என்பதைத் தொடர்பு கொள்ளலாம். அங்கும் உதவி மறுக்கப்படும் பட்சத்தில் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மைய தொலைபேசி எண் 1800 425 0111 என்பதைத் தொடர்பு கொள்ளலாம். 

பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் கட்செவியஞ்சல் மற்றும் விடியோ வசதி செல்லிடப்பேசி எண் 97007 99993 என்பதில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.