முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 18, 2020

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும் 24 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சேரும் மாணவ, மாணவிகளை மாற்றுச்சான்று இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்க்கை முடிந்த ஒருவாரத்தில் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை பெற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில் 9 ஆம் வகுப்பில் சேருவோருக்கு மாற்றுச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இணையவழி மாணவர் சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களில் நடப்பாண்டில் இணையதளம் - வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட திறன்மேம்பாட்டு மைய உதவி இயக்குநரும், ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வருமான எம்.ரமேஷ்குமார் திங்கள்கிழமை கூறியதாவது-

 

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி மையங்களும், கீழக்கரை உள்ளிட்ட 4 இடங்களில் தனியார் மையங்களும் உள்ளன.

அரசு மற்றும் தனியார் மையங்களில் அரசு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்காக 970 இடங்கள் உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களும் தொழிற்பயிற்சி மையங்களில் சேரலாம். பட்டம் முடித்தவர்களும் விரும்பிய தொழிற்பயிற்சியை இங்கு பெறும் வசதி உள்ளது.

 

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கி வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக அரசு தொழிற்பயிற்சி மையங்களில் விண்ணப்பம் இணையம் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு அதன் மூலமே கலந்தாய்வும் நடத்தப்படவுள்ளது. கலந்தாய்வின் போதுமாணவ, மாணவியர் விரும்பிய தொழிற்பிரிவை தேர்வு செய்து சேரலாம். தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இணைய வசதி இல்லாத மாணவ, மாணவியர் நேரிலும் வந்து உதவும் பிரிவில் கணினி வழியாக விண்ணப்பத்தை தரவிரக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கலாம். அரசு விலையில்லா பொருள்கள் அனைத்தும் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும் என்றார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தில் (பேட்டரி) இயங்கும் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்தவர்களுக்கு மின்கலத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இரண்டு கால்களும் செயலிழந்து, இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

 

கல்வி பயிலுவோர், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோரும், இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே பயன்பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

இதேபோல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வருமானம் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளன.

 

ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.