முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 1, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் சுமார் 120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 120 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. கடந்த மே மாதம் மீண்டும் உள்ளூர் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, அதையடுத்து வெளிமாவட்ட போக்குவரத்தும் மண்டல அளவில் தொடங்கியது. இதன் பின்னர் கரோனா தீநுண்மித் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது.

 


தற்போது உள்ளூர் போக்குவரத்துக்கு அரசு மீண்டும் அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 120 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பேருந்தில் செல்ல அனுமதிக்கப்படுவர் என போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர்கள் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பயணிகள் பேருந்துக்குள் ஏறுவதற்கு முன்னர் நடத்துனர் தரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நடத்துநர்கள் தெர்மாமீட்டர் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்படும் முன்பு கிருமிநாசினி தெளித்து பேருந்தை சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பேருந்து நிலையங்கள், நிறுத்தங்களை தூய்மைப்படுத்தும் பணியும் திங்கள்கிழமை தொடங்கியது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.