முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 15, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி; நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மற்றும் தனியாருக்குச் சொந்தமான மழலையர், தொடக்க மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதனடிப்படையில் 156 பள்ளிகளில் 1,999 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. விதிமுறைப்படி நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் 1173 பேர் மட்டுமே நுழைவு வகுப்பில் சேர்ந்துள்ளனர். ஆகவே, தற்போது 118 பள்ளிகளில் 826 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டியுள்ளது.




காலியிடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு, சிறப்புப் பிரிவு, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தொழில் செய்வோரது குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிவடைந்தோர் குழந்தைகள் ஆகியோர் சேர்க்கப்படுவர். இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (அக்.12) தொடங்கியுள்ள நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை வரையில் 11 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

 

எல்கேஜியில் சேர கடந்த ஜூலையில் 3 வயது முடிவடைந்தும், ஒன்றாம் வகுப்பில் சேர கடந்த ஜூலையில் 5 வயது நிரம்பியவராகவும் இருத்தல் அவசியம். மாவட்ட முதன்மைக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் வட்டார வளமையத்திலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெற அக்-23க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தீபாவளிப் பண்டிகைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு விற்பனை கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 


விண்ணப்பம் செய்வோர் வெடிபொருள் சட்டம், விதிகளை முறையாகக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களின் பிரதிகள்-5,

கடையின் வரைபடம், மனுதாரரின் மார்பளவு வண்ண புகைப்படங்கள்-2,

மனுதாரர் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும்

நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்தியதற்கான நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

 

பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும்

வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும்

உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது

ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் வரும் 23 ஆம் தேதி மாலைக்குள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.