முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 10, 2021

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கம்!!

No comments :

1½ ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-ராமேசுவரம் இடையே நேற்று முதல் மீண்டும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த பின்னர் படிப்படியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 

 

ராமேசுவரத்தில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரெயில் போக்குவரத்து மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடங்கப்படவில்லை. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் அக்டோபர் 7-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

 


காலை 5.40 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து 12 பெட்டிகளுடன் மதுரைக்கு அந்த ரெயில் புறப்பட்டது. பாம்பன் ரெயில்வே தூக்கு பாலத்தை கடந்து மெதுவாக பாலத்தில் சென்றபடி மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று காலை 9.30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது.

 

இதேபோல் மதுரையிலிருந்து மாலை 6.10 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட பயணிகள் இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது.

 

கிட்டத்தட்ட 1½ ஆண்டுக்கு பின்னர் மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதுபோல் ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலையும் வழக்கம்போல் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.