முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 26, 2022

குப்பை கூடமாக காட்சி தரும் ராமநாதபுரம் மருத்துவமனை வளாகம்!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பொருள்கள் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகம் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு தினமும் சுமார் 700 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் 562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவர்களின் எண்ணிக்கை 62 லிருந்து 108 ஆகவும், செவிலியர்களின் எண்ணிக்கை 160 லிருந்து 233 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே பழுதடைந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆங்காங்கே குப்பை போல குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் தற்போது 350-க்கும் மேற்பட்ட இரும்புக் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் ஆடைகளைத் தூய்மையாக்கும் நீராவி இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.

 

ரத்தச் சுத்திகரிப்புப் பிரிவு அருகே குவிக்கப்பட்ட பழைய பொருள்களால் சிறுநீரக நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிக்கு அடியில் குவிக்கப்பட்டுள்ள பழைய பொருள்களால் தொட்டியின் தூண்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இரும்புக் கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் துருப்பிடித்ததால் அவை கழிவு நீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதாகவும், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய அரசின் சிறப்பு நிதி ரூ.6 கோடி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நிதியை சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிக்கு செலவிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே குப்பைகளால் சுகாதாரச்சீர்கேடு அடைந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, பழைய பொருள்களை அப்புறப்படுத்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

செய்தி & படம் : தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.