முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 4, 2022

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான வைரம் பறிமுதல்; ஒருவர் கைது!!

No comments :

ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்படாத 160 கிராம் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கீழக்கரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இருந்து ராமநாதபுரம் வழியாக விற்பனைக்காக விலை உயர்ந்த சிலை, வைரம் முதலியவை கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சரவணன் ஆகியோர் ரெயில்வே கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் புகைபிடித்து கொண்டிருந்தவரை விசாரிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் கீழக்கரை புது கிழக்குத்தெரு  யூசுப் சுலைமான் (வயது 36) என்பது தெரிந்தது. 


 


மேலும் சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த துணிப்பையில் சிறிய கற்கள் போன்று இருந்தது. மேலும் சிறிய கருவி போல் ஒன்றும் வைத்திருந்தார். அதுகுறித்து கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

 

இந்த விசாரணையில் அவை வைரகற்கள் என்றும், கீழக்கரையில் இருந்து வாங்கி வந்துள்ளதாகவும், தான் ஒரு வியாபாரி என்றும் தெரிவித்துள்ளார். வியாபாரிக்கான ஆவணத்தை கேட்டபோது இல்லை என்றதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 

பின்னர் அந்த கற்களை ஒரு நகை கடையில் சோதித்தபோது அது வைரம் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். 2 கவர்களில் மொத்தம் 160.9 கிராம் வைர கற்கள் இருந்தது. அவர் வைத்திருந்த சிறிய கருவி வைரத்தை தரம் பரிசோதிக்கும் கருவி என்பது தெரிந்தது.

 

இதையடுத்து திருச்சியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அந்த  வைர கற்களை பரிசோதித்ததில் தோண்டி எடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத சுத்தமான வைரம் என்று அறிக்கை பெறப்பட்டது. இந்த வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

 

யூசுப் சுலைமானிடம் விசாரித்தபோது கீழக்கரையில் கோழிக்கறி கடை வைத்து வியாபாரம் செய்யும் சுல்தான் மற்றும் அசார் ஆகியோரிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இவரை வைத்தே அவர்களிடம் பேசியபோது சர்புதீன் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித் துள்ளார். இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தேடி சென்றுள்ளனர். 

 

இவர்களிடம் பெறும் தகவலின் அடிப்படையிலேயே இந்த வைரம் உண்மையில் யார் கொடுத்து அனுப்பியது, அவர்களுக்கு எங்கிருந்து வந்தது, இதனை யாருக்காக கொடுத்து அனுப்பினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.

 

முதல்கட்ட விசாரணையில் இந்த வைரம் ரஷியா பகுதியில் இருந்து வாங்கி வந்திருக்கலாம் என்றும், அங்கு போர் நடந்து வருவதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த வைரம் கொடுத்தனுப்பப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பொதுவாக ரஷியாவில் தான் அதிக அளவிலான வைரம் வெட்டி எடுக்கப்படுவதாகவும் அந்த வைரத்திற்கு தான் மதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

வைரம் வைத்திருப்பதற்கு உரிய ஆவணங்களை காட்டினால் ஒப்படைத்து விடுவதாகவும், இல்லாவிட்டால் இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

ராமநாதபுரத்தில் ரூ.1 கோடி வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.