முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 30, 2023

வக்பு வாரியத்தின் கீழ் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

 


வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.

 

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.