முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 1, 2023

விவசாயிகளுக்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு; எப்படி பெறுவது?!!

No comments :

தமிழக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர் சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1.65 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

வேளாண் உழவர் நலத்துறை மூலம் முழு மானியத்தில் மரக்கன்றுகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு முறையில் நடவு செய்வதாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டேர் பரப்புக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

 


இத்திட்டத்தின் மூலம் 29 வகையான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

செம்மரம், புங்கம், வேங்கை, குடம்புளி, மகோகனி, கொடுக்காபுளி, மருதம், பூவரசு, நாவல், இலுப்பை, நெல்லி ஆகிய மரக்கன்றுகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டத்தினை பெற்று பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் நிலத்தை அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்கப்படும்.

 

விவசாயிகளுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.