முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 9, 2015

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் உள்ள ஐந்திணை மரபணுப் பூங்காவில் டிசம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை தோட்டக்கலைக் கண்காட்சி!!

No comments :
ராமநாதபுரம் அருகேயுள்ள ஐந்திணை மரபணுப் பூங்காவில் இம்மாதம் 25 முதல் 27 ஆம் தேதி வரை தோட்டக்கலைக் கண்காட்சி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

ராமநாதபுரம மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிப்பிரம்பு கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்திணை மரபணுப் பூங்கா கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. 10 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவிற்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவ, மாணவிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் வரும் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாள்கள் தோட்டக்கலைக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. 

இக்கண்காட்சியில் பல வகையான ரோஜா மலர்கள், கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், லில்லி, ஆர்கிட்ஸ், கிளாடியோலஸ், ஆல்ஸ்ட்ரோமீரியா மற்றும் டெய்சி போன்ற மலர்களாலான உருவகங்களும், மலர் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

பல்வேறு காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காய்கறி சிற்பங்களும், இயற்கை காட்சிகளும் உருவாக்கப்பட்டு சிறப்பான முறையில் அமைத்திட தோட்டக்கலைத்துறையின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இக்கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் டிசம்பர் 21, 22 தேதிகளில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள்

No comments :
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் இம்மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட இறகுப் பந்துக் கழக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இறகுப்பந்து விளையாட்டினை மேம்படுத்திட, மாவட்ட இறகுப் பந்துக் கழகம் மாவட்ட அளவிலான இறகுப் பந்துப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகள் இம்மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.



முதற்கட்டமாக 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் கையெழுத்துடன் வயதுச் சான்றிதழ்களை அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதே போல ஆண், பெண்களுக்கான பொதுப்பிரிவு போட்டிகள் இம்மாதம் 26, 27 ஆம் தேதிகளில் நடத்தப்படும். மாவட்டத்தில் இயங்கும் இறகுப் பந்து கிளப்புகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே இதில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.


போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலுமாக பழுது!!

No comments :
ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் காலனியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலுமாக பழுதடைந்து விட்டதாக அப்பகுதி மக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை திங்கள்கிழமை சந்தித்து புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாநகரில் வசிப்போர், கௌரிநாதன் என்பவரது தலைமையில் ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:


அண்ணாநகர் ரயில்வே குட்செட் தெருவில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதிகளில் தேங்கி நின்று கொசுக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் என பலரும் காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சாலைகள் பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

குட்செட் தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சாலை முழுவதுமாக பழுதாகி விட்டது. பாதாளச் சாக்கடை வசதியும் இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இது குறித்து கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சாலை வசதியும், சாக்கடை வசதியும் செய்து தருமாறு அதில் தெரிவித்துள்ளனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)