முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 29, 2016

அதிமுக பொதுச்செயலாளராகிறார் திருமதி. சசிகலா, ராமநாதபுர மாவட்ட அதிமுக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

No comments :
கண்களில் நீர் கசிய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவ வேண்டும். உலக அமைதிக்கான நோபல் பரிசு, மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தும், அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேறியது.

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஓ. பன்னீர்ச் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை உள்பட முக்கிய நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சத்தித்தனர். அப்போது பொதுக்குழு தீர்மானத்தை சசிகலாவிடம் வழங்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஜெயலலிதாவின் புகைப்படத்தின் முன்பு பொதுக்குழுவிற்கான தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது கண்ணீர் மல்க ஜெயலலிதா படத்தின் முன்பு பெற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்தார்.

சசிகலா சம்மதம் கூறிவிட்டதாக பொதுக்குழுவில் திண்டுகல் சீனிவாசன் அறிவித்தார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு அ.தி.மு.க. தலைமை கழகம் சென்று பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த செய்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட கீழக்க்ரையில், அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 


இதில் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் இம்பாலா சுல்த்தான் நகர் அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி, , சிவா, மாணவரணி செயலாளர் சுரேஷ், நகர் துணை செயலாளர் குமரன் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

50 நாட்கள் கடந்தும் சோகம் தீரவில்லை!!

No comments :

 

பிரதமர் கடந்த நவ.8ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த நாள் முதல் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய்களை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் வங்கிகளுக்கு போதிய அளவு புதிய ரூ.500, ரூ.ஆயிரம்  நோட்டுகள் வந்து சேராததாலும்ரூ.100, ரூ.50 நோட்டுக்கள் போதிய அளவில் இருப்பில் இல்லாததாலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் தடுமாறி வருகின்றன. 

நாட்களில் இப்பிரச்னை சரியாகி விடும் என்று தெரிவித்த ரிசர்வு வங்கி தற்போது நாளுக்கு நாள் பணம் எடுக்க மற்றும் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. இதனால் கையில் செலவுக்கு வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கியில் செலுத்தி விட்டு தற்போது அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.



வருகிற 30ம் தேதி வரையே பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற முடியும் என்பதால் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்கு ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஆண்கள், பெண்கள் என பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகரில் 50 நாட்களாகியும் ஏடிஎம்கள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
 

ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் நிரப்பப்பட்ட பணம் உடன் தீர்ந்து போவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். பிற இடங்களை காட்டிலும் வணிகம், கடைவீதிகள் அதிகமுள்ள வங்கி கிளைகளில் பொதுமக்கள், வணிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

வாடிக்கையாளர்கள் கூறுகையில், தனியார் வங்கிகளை காட்டிலும் அரசு வங்கிகளின் முன்புதான் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கால்கடுக்க நின்றாலும் புதிய நோட்டுகளை போதிய அளவு பெற முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. தேசிய வங்கிகளில், அரசு அறிவித்தவாறு வங்கி கணக்கில் முன்பு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.24 ஆயிரத்தை தர மறுக்கின்றனர்.
 ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் மட்டுமே தருகின்றனர்.

கருப்பு பணத்தை அடியோடு ஒழிப்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறைந்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளில் போதிய அளவு பணத்தை இருப்பு வைத்து அதிகளவில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :


நலிந்த விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற ஜன.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளி, கல்லுாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சங்கங்கள் நடத்திய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களாக இருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியில்லை.

2016 ஏப்.,1ல் 58 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது.



விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து, தற்போது வருமானம் இன்றி சிரமப்படும் தமிழகத்தில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு மானிய உதவித்தொகை வழங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ராமநாதபுரம் சீதக்காதி சேதிபதி விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் 10 ரூபாய் செலுத்தி பெறலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.,31க்குள் இதே அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படுபவை பரிசீலிக்கப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, December 28, 2016

அரசு மருத்துவனை நிறுத்தத்தில் நின்று செல்லாத பேருந்துகள்!!

No comments :

உயர்நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத போக்குவரத்து துறை...

வெளியரிலிருந்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற வசதியாக மருத்துவமனை வாசலில் பேருந்துகள் நின்று செல்ல வழக்கறிஞர் திருமுருகன் பொதுநல வழக்கு போட்டதன் பிரதிபலனாக பேருந்துகள் அரசு மருத்துவனையில் நின்று செல்ல இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்திரவிட்டும் இன்று வரையிலும் பேருந்துகள் ஏதும் அரசு மருத்துவனையில் நின்று செல்வதில்லை.


உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு மதிப்பில்லையா..?

ஆஸ்பத்திரி வாசலில் பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகள் ஆவன செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை.


- அ.சேக் அப்துல்லா, இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குவைத்தில் நாளை டிச-30 ஸீரத் மாநாடு!!

No comments :

குவைத்தில் நாளை டிச-30 ஸீரத் மாநாடு!!


தகவல்: திரு அப்துல் ரஜாக், குவைத்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, December 27, 2016

ராமநாதபுரத்தில் டிச.,29ல் வேலைவாய்ப்பு சந்தை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.,29ல் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியிருப்பதாவது:

தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு வேலை வாய்ப்புத்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு சந்தை நடத்தப்படுகிறது.


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

அதன்படி, டிச.,29 பகல் 11:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நடக்கிறது.

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பம், ஐந்து மார்பளவு புகைப்படம், , அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இதில் வேலை பெற்றாலும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.இவ்வாறு கூறியுள்ளார்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

டங்கல் - திரை விமர்சனம்!!

No comments :
இந்திய சினிமாவின் பெருமிதப் பதிவுகளில் ஒன்றாக  டங்கல்படம் இடம் பிடித்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் இந்திய தேசத்தை பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு வெற்றிக்காக இரண்டு தலைமுறைகளின் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம்... இவையே படத்தின் பிரதான களம். படம் பார்த்து வெளிவருவோரின் சில துளி கண்ணீரும், சில நிமிட  அமைதியும் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான சாட்சி... அப்படி ஓர் அழுத்தமான படைப்பை நம் முன் வைத்திருக்கிறார்கள் இயக்குநர் நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்/நடிகர் அமீர்கான். 


இந்தியாவுக்காக சர்வதேச மல்யுத்தக் களத்தில் ஒரு தங்க மெடலையேனும் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது நனவாகும் சமயம் உண்டாகும் சிக்கல்களை அமீர் கானால்  சமாளிக்க முடிகிறதா என்பதே  படம். 2010- ல் காமல்வெல்த் விளையாட்டில் பதக்கங்கள் வென்ற கீதா - பபிதா சகோதரிகள் வாழ்வில்,  உண்மையாகவே நடந்த நிகழ்வை, திரைக்கதையாக்கி, படமாக நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

1988 காலகட்டம்... அமீர்கான் பணிபுரியும் அலுவலகத்தின் டிவியில் ஒலிம்பிக் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தின் டேபிள், சேர்கள் ஓரம் வைக்கப்படுகின்றன. ஒலிம்பிக்கின் பின்னணி வர்ணனையில் அமீர்கானும், சக ஊழியரும் மல்யுத்தம் போடும் அந்த முதல் காட்சியிலேயே நம்மைப் படத்திற்குள் இழுத்துவிடுகிறார்கள். அங்கு தொடங்கும் லயிப்பு படத்தின் இறுதி நொடி வரை பற்றிப் பரவுகிறது. 


படம் ஒரு நாவல் வாசிப்பு போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது. ஹரியானா நமக்கு அந்நியம் தான் என்றாலும், அந்த வீடும், அவர்கள் சாப்பிடும் அந்த ரொட்டியும் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. தனக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறப்பதில் விரக்தியாக அமீர்கான் இருக்கும் காட்சிகள் நம்மையும் கனக்க வைக்கின்றன. ஏன் ஆண்தான் வேண்டும்?  பெண்களையே மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுகிறேன் என அமீரின் அந்த முடிவு... அந்த நேரத்தில் இறுக்கமான முகத்தில் இருந்து அவர் வெளிப்படுத்தும் ஒரு சின்ன சிரிப்பு படத்தின் உணர்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறது.

அமீர்கானின் நடிப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. உறுதியான உடல், பார்வையிலேயே மிரட்டுவது, வயோதிகத்தின் காரணமாக களத்தில் தடுமாறும்போது வெளியிடும் அந்தப் பெருமூச்சு என கிளாசிக்கல் நடிப்பு. தன்னை முன்னிலைப்படுத்தாமல், மகள்களின் கதாபாத்திரத்தையும் கதையையும் முன்னிறுத்தியதிலேயே நம் மனதில் விஸ்வரூபமாய் நின்று பிரமிக்க வைக்கிறார் அமீர்கான். ஒரு சூப்பர் ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள எந்த ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியையும் வைக்கவில்லை. மிகக் குறைந்த நிமிடங்களே வருகிற ஒரு காட்சிதான் இருக்கிறது. அதே சமயம் அமீர் கான் மட்டுமே படத்தின் கவன ஈர்ப்பு மையம் அல்ல. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்ரூப வார்ப்பு. 

கீதா, பபிதாவாக சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்ரா வாஸிம், சுஹானி பட்நாயகருக்கும் சரி, சிறிது வளர்ந்த கீதா, பபிதாவாக நடித்திருக்கும் ஃபாத்திமா சானா, சான்யா மல்ஹோத்ராவுக்கும் சரி, வேறுபாடுகளே தெரியாத உடல்மொழி. ஃபாத்திமா சனா, பயிற்சி பெறும் காட்சிகள், இளவயதுக்கே உரிய ஆர்வங்கள், அப்பாவுடனான உரசல் என்று ஒவ்வொன்றும் ஒருவித நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். நேஷனல் அகாடமி கோச்சாக வரும் கிரீஷ் குல்கர்னி கண்ணசைவிலேயே தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். 

மணலில் போடும் யுத்தத்திலும், போட்டியில் சிந்தெடிக் மேட்டில் நடக்கும் போட்டியின் போது அந்த மேட்டில் உரசி வரும் கிறீச்...சத்தங்கள் உட்பட பின்னணி இசையில் அத்தனை நுணுக்கம். டங்கல் டங்கல்...பாட்டில் நம் நரம்புகள் சூடேறுகின்றன. இசை ப்ரீத்தம்!!! படம் முழுக்க உணர்வுபூர்வமாக காட்சிகள் பல. ஆனால், அவற்றில் முழ நீள வசனங்கள் எதுவும் இல்லை. ட்விட்டர் ஸ்டேட்டஸ் போன்ற பியூஷ் குப்தா, ஷ்ரேயாஸ் ஜெய்ன், நிகில் மல்ஹோத்ரா மற்றும் நிதேஷ் திவாரி குழுவின் வசனங்கள், அழுத்தமாக விதைக்கப்படுகின்றன! 

பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டங்கள், வறுமைச் சூழ்நிலையில் உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான அடித்தளம், பயிற்சியும் முயற்சியும் தாண்டி மனதிடம் எவ்வளவு அவசியம் என பலப்பல அத்தியாயங்களை அதனதன் அழகு, ஆக்ரோஷத்துடன் மனதில் பதித்துச் செல்கிறது படம். அதிலும் மல்யுத்தக் காட்சிகளின் காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவும் உலகத் தரம். இரண்டே நிமிடங்களில் நடக்கும் அந்தப் போட்டிகளின் உக்கிரத்தை ஒரு கீற்று கூட குறையாமல் கடத்துகிறார்கள். சர்வதேச போட்டிகளின் அரை இறுதி, இறுதி போட்டிகளுக்கு வித்தியாசமான சவால்கள் வைத்து அதை கீதா எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு ரசிகரும் பதறுவது... ஆவ்ஸம் டங்கல்மேஜிக்! இதற்காக  உழைப்பைக் கொட்டிய ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராம் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் கிருபா ஷங்கர் படேல், சண்டைப் பயிற்சியாளர் ஷ்யாம் கௌஷல் ஆகியோருக்கு சிறப்பு சபாஷ்!   

இவ்வளவு சிறந்த விஷயங்களைக் கடந்து ஒரு  சின்ன உறுத்தல் படம் பார்க்கும் போது எழுகின்றது. தான் அடைய விரும்பிய ஒரு லட்சியத்தை தன் பெண்கள் அடைய வேண்டும் என்ற வெறியில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரியாகவே காட்சியளிக்கிறார் அமீர்கான். அந்தப் பெண்களின் சின்ன, சின்ன சிறிய ஆசைகள் கூட இரும்புக் கூண்டில் பூட்டி வைக்கப்படுகின்றன. முதலில் எந்தவொரு மோட்டிவேஷனுமே இல்லாமல் இருக்கும் கீதாவும், பபிதாவும் தங்கள் தோழியின் திருமணத்தின் போது, “ உங்கப்பா மாதிரி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்... அவர் உங்களுக்காக சிந்திக்கிறாரே...என்று சொல்வதன் மூலம் தான் விளையாட்டில் தன்னார்வம் காட்டத் தொடங்குகிறார்கள். அப்போதும் அப்பா...என்ற உணர்வில் தான். 

ஒரு பெற்றோரின் விருப்பங்களைத் திணிக்காமல்,பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும் என்ற கருத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கி வந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதற்கு முரண்பட்டவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக் காட்டிற்கு தன்னுடைய விருப்பமான போட்டோகிராபியைபடிக்க விரும்பும் ஒரு பிள்ளை இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்... அவரின் அப்பா அவரை எஞ்சினியரிங்படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள். படம் முடிந்து அப்பா, அவர் மகனைப் பார்க்கும் பார்வையில் பார்... நான் சொல்வது, நீ செய்வது எல்லாம் உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் உனக்கு அது தான் நல்லது. நான் சொல்வதைக் கேள்...என்பது போல் இருக்கும். ஏனென்றால், எல்லாப் பிரச்சினைகளுக்கும், போராட்டங்களுக்கும், புழுக்கங்களுக்கும் இறுதி விடையாக வெற்றிநிற்கிறது. இன்னொன்றையும் சொல்லலாம், டாக்டர் வீரர், எஞ்சினியரிங் வீரர் என்றெல்லாம் சொல்வதில்லையே.. விளையாட்டு வீரர் என்ற பதத்தைப் பெற வேண்டுமனால், சிறு வயதுமுதலே இப்படியான மனக்கட்டுப்பாடுகளோடுகூடிய பயிற்சிகளைப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதும் உண்மை. ஒருவர், தன் 18 வயதில் கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று நினைத்தால் ஆகமுடியுமா? அதற்கெல்லாம் சிறுவயதுமுதலே அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது. அதையே படம் உணர்த்துகிறது.
ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இழைத்துச் செதுக்கியிருக்கும் படக்குழுவுக்கு எத்தனை பூங்கொத்துகள் பரிசாய் அளித்தாலும் தகும்.

படத்தில் அமீர் கேட்கும், 'நாட்டுக்கு ஏதாவது செய்யணும்னு ஒவ்வொரு வீரனும் நெனைக்கறான். ஆனா அந்த வீரனுக்கு எதாவது செய்யணும்னு நாடு நெனைக்கறதில்ல' என்ற ஆதங்கத்திற்கு இனியாவது பதில் கிடைத்தால் நலம்.  
படத்தில், சிறுவயது கீதாவை முதன்முதலில் மல்யுத்தக் களத்தில் இறக்குவார் அமீர். நான்கு ஆண்கள் நின்று கொண்டிருக்க, 'இருப்பதிலேயே ஒல்லியாக இருக்கும் ஒருவரை தேர்வு செய்தால் இந்தப் பெண் கொஞ்சம் வலியோடு தப்பிக்கலாம்' என்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் பேசிக்கொள்வார்கள். கீதாவோ, இருப்பதிலேயே வலிமையான ஒரு வீரனை தேர்வு செய்வார். 
கிட்டதட்ட அமீர்கானும் அப்படித்தான். பலரும் நோஞ்சான் கதைகளையே எடுத்துக் கொண்டிருக்க, ஆழமான கதையைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். சினிமா ரசிகர்களுக்குப் பரவசமளிக்கும் இந்தப் பயணம் பன்னெடுங்காலம் தொடரட்டும்! 

இந்த இடத்தில் அமீர் கானுக்கு 4 கேள்விகள். நான்கு தரப்பினரின் கேள்விகளாகவும் இதைக் கொள்ளலாம். சொல்லப் போனால், அவர்கள் அமீர் கானின் சட்டையைப் பிடித்துக் கூட கேட்க விரும்புவார்கள். அவை இங்கே..!  

1) இந்தியப் பெற்றோர்கள் - உன் வாழ்க்கை... உன் கையில்னு சொல்லிட்டு பசங்க அவங்களா முன்னேறிக்கணும்னு இருந்துட்டு இருக்கோம். ஆனால், பசங்க எதிர்காலத்துல பெத்தவங்களோட பங்கு எவ்வளவு முக்கியம், அதுக்காக காலம் முழுக்க என்னலாம் பண்ண வேண்டியிருக்கும்னு பொளேர்னு புரிய வைச்சுட்டீங்க. எங்க பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாம பண்ணிட்டீங்களே அமீர்?

2)  பாலிவுட்டின் சின்சியர் நடிகர்கள் - ஒரு ஏழைக் குடும்பஸ்தனாக தொந்தியும் தொப்பையுமாக நடித்தது சரி. ஆனால், அதன்பின் படத்துக்காக இறுக்கி முறுக்கி செமத்தியான சிக்ஸ் பேக்ஃபிட் உடம்பைக் கொண்டு வந்தீர்கள். ஆனால், அந்த ஃபிட் உடலுனான மல்யுத்தக் காட்சிகள் திரையில் வருவதென்னவோ... மிகச் சில நொடிகள்... அதிகபட்சம் சில நிமிடங்கள். இப்படி சில நிமிடங்களுக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்தால், பின்னர் நாங்கள் என்ன செய்வது அமீர்?
3) இந்தியப் பொதுமக்கள் - அமீர் கான் நாட்டுப் பற்று இல்லாதவர்என்று கோஷம் போட்ட மக்கள், டங்கல் படத்திற்கு முன் திரையரங்குகளில் கட்டாயமாக ஒலிபரப்படும்  தேசிய கீதத்திற்கு உண்மையான உணர்வோடு எழுந்து நின்றார்களோ இல்லையோ, படத்தின் இறுதிக் காட்சியில் பாடப்படும் தேசிய கீதத்திற்கு தானாக எழுந்து நின்றார்கள். அவர்கள், ‘நாங்க என்ன பண்ணாலும், ஏதோ பண்ணி ஸ்கோர் பண்ணிடுறீங்களே அமீர்?’ 

4) பாலிவுட்டின் மசாலா இயக்குநர்கள் - ஹீரோயிஸம்தான் சினிமா... டைட்டில் கார்டுல இருந்து க்ளைமாக்ஸ் ஃப்ளூப்பர்ஸ் வரை ஹீரோ பெர்ஃபார்ம் பண்ணிட்டே இருந்தாதான் அது படம்னு நம்ப வைச்சிருக்கோம். ஆனா, க்ளைமாக்ஸ் இறுதிப் போட்டில இப்படி பண்ணிட்டீங்களே அமீர்...?’


Well Done Aamir..! 


-    விகடன் விமர்சனம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, December 26, 2016

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 3 நபர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற 3 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராம பகுதியில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக்(30), வினோத்குமார்(28), ஆற்றாங்கரையை சேர்ந்த சரவணன்(30) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 25, 2016

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

No comments :

உச்சிப்புளி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிப்புளி கடைவீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை இடம் மாற்றக்கோரி கடந்த ஜூலை மாதம் 27–ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் அதிகாரிகள், மண்டல துணை தாசில்தார், கோட்ட ஆய அலுவலர், உச்சிப்புளி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர், மண்டபம் வருவாய் ஆய்வாளர், என்மனங்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விரைவில் இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட கடையை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். முனியசாமி, கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் ராஜ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம், உச்சிப்புளி வர்த்தக சங்க தலைவர் அசரியா, செயலாளர் வேணுகோபால், பொருளாளர் ராமச்சந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மாதர் சங்க தாலுகா செயலாளர் மாலதி, வாலிபர் சங்க தாலுகா செயலாளர் சத்தியேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சாத்தக்கோன்வலசை அழகுடையான், நொச்சியூருணி பெரியகருப்பன், அரங்கன்வலசை சந்திரன், சாத்தக்கோன்வலசை பரமேசுவரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சீமைக் கருவேல மரங்களை ஜன. 4-க்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நடராஜன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள், வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் போன்றவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும்.


அவ்வாறு அகற்றவில்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, December 22, 2016

கீழக்கரையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து இறப்பு!!

No comments :
கீழக்கரை வங்கி முன்பு நீண்ட வரிசையில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் சொந்தப்பணத்தை எடுப்பதற்கே, வங்கிகளின் வாசலிலும், மூடியே கிடக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் தவம் கிடக்கிறார்கள்.

50 நாளில் பிரச்சினை தீரும் என்று மத்திய அரசு சமாதானம் சொன்னாலும், நேற்றோடு 43 நாட்கள் கடந்தும் நிலைமை சீரடைய வில்லை. மாறாக நாளுக்கு நாள் பணத்தட்டுப்பாடு அதிகரித்து மக்களின் துயரம் கூடிக்கொண்டே போகிறது.

தினமும் காலை விடிந்ததும் வங்கிகளை நோக்கி ஓடுவதே மக்களின் பிழைப்பாகி விட்டது. அங்கு வரிசையில் நின்று பணம் எடுக்கும்போதும், காத்திருக்கும்போதும் மனஉளைச்சலாலும், உடல் உபாதைகளாலும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.



நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வங்கியில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சோக சம்பவம் நடந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் முகமது நைனார். இருடைய மகன் சித்திக்அலி(வயது 67). இவர் நேற்று காலை கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்தார். நீண்ட வரிசையை பார்த்தவுடன் சித்திக்அலிக்கு இதில் கடந்து சென்று எப்போது பணம் எடுக்கப் போகிறோம் என்ற கவலை ஏற்பட்டது.

இருப்பினும் பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் வேறு வழியின்றி வரிசையில் நின்றார். சிறிதுநேரத்தில் சித்திக்அலிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அதையும் சமாளித்து நின்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் பதற்றமடைந்து அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.

ஆனால், அவருடைய உடலில் எந்த அசைவும் இல்லை. எனவே அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சித்திக்அலி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதபடி அவருடைய உடலை பெற்றுச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்கப்படுவதே இல்லை. ஒரு சில வங்கிகள் மட்டும் தங்களின் தலைமை அலுவலக வளாக வாசலில் உள்ள மையத்தில் பணம் வைக்கின்றன. இதர இடங்களில் உள்ள மையங்களில் ஒருநாள் கூட பணம் வைப்பதில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட ஓரிரு நாட்கள் பணம் வைக்கின்றன. ஆனால் தனியார் வங்கிகள் தங்களின் எந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்கவே இல்லை. வங்கியில் சென்று பணம் கேட்டாலும் பணம் வரவில்லை என்று பதில் அளிக்கின்றனர்.
மதுரையில் ஒப்பாரி
மதுரையில் ஒன்றிரண்டு ஏ.டி.எம். மையங்களில் மட்டுமே பணம் வைக்கப்படுகிறது. அதுவும் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது.
இதனால் ஏ.டி.எம். மையங்களின் மீது மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மதுரை ஞானஒளிவுபுரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இவை மூடியே கிடக்கின்றன. இதனால் கோபம் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று அவற்றின் முன் மவுன அஞ்சலி போராட்டம் நடத்தினர். ஏ.டி.எம். மையங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் அங்கு உட்கார்ந்து ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

காலாவதியான விசா வழங்கி 7 பேரிடம் மோசடி, டிராவல்ஸ் உரிமையாளர் கைது!!

No comments :

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக்கூறி 7 பேரிடம் ரூ.3.35 லட்சம் முறைகேடு செய்ததாக டிராவல்ஸ் உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் சொலகான் பேட்டை பகுதியை சேர்ந்த வேலுவின் மகன் மோகன்ராஜ் (39). இவர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.  இவரிடம் தேனி மாவட்டம் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் வசிக்கும் பாத்திமா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான அபுபக்கர் மகன் அகமது என்பவர் உள்பட அப்பகுதியை சேர்ந்த 7 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ரூ.3.35 லட்சம் கொடுத்தனராம்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட மோகன்ராஜ் 7 பேருக்கும் காலாவதியான விசாவைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.  

இது குறித்து ராமநாதபுரம்  காவல் கண்காணிப்பாளர் ந.மணிவண்ணனிடம் அகமது கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், மோகன்ராஜ் அறந்தாங்கியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்.   விசாரணையில், மோகன்ராஜ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி 87 பேரிடம் மொத்தம் ரூ.49 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)