முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 19, 2020

துபாய் - தெய்ரா வில் வரும் அக்-23ம் தேதி ரத்ததான முகாம்!!

No comments :

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் 23.10.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது.

இந்த ரத்ததான முகாம் துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரத்தத்தின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. இந்த சேவையில் பங்கு கொண்டு தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்ய முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர்

நிஜாம் :  050 352 5305

ஹிதாயத் :  050 51 96 433

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 


குறிப்பு:

ரத்ததானம் செய்ய வருபவர்கள்

கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு வர வேண்டும்.

வெளிநாடு சென்று வந்த ஒரு மாதம் ஆகியிருக்க வேண்டும்.

விசிட் விசாவில் இருப்பவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதியில்லை. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 18, 2020

ராமநாதபுரம் மாவடட்த்தில் 'ஹலோ போலீஸ்' அலைபேசி எண் அறிமுகம்!!

No comments :

ராமநாதபுரத்தில் பொது மக்கள் தங்களின் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க வசதியாக 'ஹலோ போலீஸ்' 83000 31100 என்ற அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த எண்ணில் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப்பொருட்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் பிற ரகசிய தகவல்களை தெரிவிக்கலாம்.



 

மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனுக்களை பெற மறுத்தாலோ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருந்தாலோ, குற்றவாளியை கைது செய்யாமல் இருப்பது, விசாரணையில் திருப்தி இல்லாமல் இருந்தாலும் ஹலோ போலீஸ் எண்ணில் தெரிவிக்கலாம்.

 

மேலும் மாவட்ட எஸ்.பி., யை 87782 47265 எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என எஸ்.பி., கார்த்திக் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 15, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி; நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மற்றும் தனியாருக்குச் சொந்தமான மழலையர், தொடக்க மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதனடிப்படையில் 156 பள்ளிகளில் 1,999 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. விதிமுறைப்படி நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் 1173 பேர் மட்டுமே நுழைவு வகுப்பில் சேர்ந்துள்ளனர். ஆகவே, தற்போது 118 பள்ளிகளில் 826 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டியுள்ளது.




காலியிடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு, சிறப்புப் பிரிவு, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தொழில் செய்வோரது குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிவடைந்தோர் குழந்தைகள் ஆகியோர் சேர்க்கப்படுவர். இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (அக்.12) தொடங்கியுள்ள நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை வரையில் 11 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

 

எல்கேஜியில் சேர கடந்த ஜூலையில் 3 வயது முடிவடைந்தும், ஒன்றாம் வகுப்பில் சேர கடந்த ஜூலையில் 5 வயது நிரம்பியவராகவும் இருத்தல் அவசியம். மாவட்ட முதன்மைக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் வட்டார வளமையத்திலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெற அக்-23க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தீபாவளிப் பண்டிகைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு விற்பனை கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 


விண்ணப்பம் செய்வோர் வெடிபொருள் சட்டம், விதிகளை முறையாகக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களின் பிரதிகள்-5,

கடையின் வரைபடம், மனுதாரரின் மார்பளவு வண்ண புகைப்படங்கள்-2,

மனுதாரர் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும்

நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்தியதற்கான நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

 

பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும்

வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும்

உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது

ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் வரும் 23 ஆம் தேதி மாலைக்குள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 8, 2020

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை!!

No comments :

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 


தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவோா் ஆண்டு தோறும் பணியில் இல்லை என தெரிவிக்கும் சுய உறுதி மொழி ஆவணம் சமா்ப்பிப்பது அவசியம். கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மாா்ச் இறுதி முதல் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தை அளிக்கமுடியவில்லை.

 

அதனால், சுயஉறுதி மொழி ஆவணம் சமா்ப்பிக்க கடந்த ஆகஸ்ட் வரை 3 மாதத்திற்கு ஏற்கெனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது சுய உறுதிமொழி ஆவணம் வழங்குவதற்கு செப்டம்பா் (2020) முதல் பிப்ரவரி (2021) வரை மேலும் 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஆகவே, சுயஉறுதிமொழி ஆவணத்தை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 7, 2020

காரில் கடத்திய 288 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது!!

No comments :


ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையின்போது காரில் கடத்திவரப்பட்ட 288 மதுப்பாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.

 

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி-ஏா்வாடி சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். 



அப்போது, காரில் மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 288 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த புதுமாயாகுளத்தைச் சோ்ந்த சக்திவேல் (40), முத்துகுமாா் (31) ஆகியோரை கைது செய்தனா்.

 

இதனால், திருப்புல்லாணி காவல் நிலைய காவலா் செய்யது அல்பானை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பாராட்டி வாழ்த்தி பரிசளித்தாா்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 6, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குறைகிறது, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் முதல் குறைந்து தற்போது ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தது.சுகாதாரத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் தற்போதைய நிலையில் தொற்று எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ளது.


மாவட்டத்தில் இதுவரை 5629 பேர் பாதிக்கப்பட்டதில் 5346 பேர் குணமடைந்துள்ளனர். 120 பேர் பலியாகினர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 14 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

 


 

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 ஒன்றியங்களில் தலா இரண்டு வீதம் 22 நடமாடும் பரிசோதனை முகாம் மூலம் தினமும் 850 முதல் 900 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.இதில் ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை உள்ளது. 


மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது.ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு அங்குள்ள சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். தினமும் குறைந்தது 40 பரிசோதனை நடக்கிறது, என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 1, 2020

நாளை அக்-2 முதல் சென்னை-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து!!

No comments :

ராமேஸ்வரம்- சென்னை இடையே 6 மாதத்திற்கு பின் அக்.,2ல் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.


மார்ச் 24ல் துவங்கிய ஊரடங்கினால் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. செப்.,1 முதல் பொது போக்குவரத்து துவங்கியும், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லை.இந்நிலையில் 6 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம், சென்னை இடையே அக்., 2 முதல் 5ம் தேதி வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. 



இந்த ரயில் அக்.,2 ல் சென்னை எழும்பூரில் மாலை 5:45க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அக்.,3 அதிகாலை 4:25க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

 

 

அக்.,3 இரவு 8:25க்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு அக்.,4 காலை 7:15க்கு சேரும் என தென்னக ரயில்வே தெரிவித்துஉள்ளது. இதனையடுத்து நேற்று பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி போக்குவரத்தை மாற்றம் செய்ய திட்டம்!!

No comments :

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிய சாலை மேம்பாலம் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.5 கோடியே 14 லட்சம், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலமானது, மொத்தம் 720 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது.

 

தற்போது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 7 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் நடைபெற தொடங்கினால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.இதன்காரணமாக வாகனங்களை மாற்றுவழியில் திருப்பி விடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பி வரும் புறநகர் பஸ்களை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று தேவிபட்டினம் விலக்கு வழியாக பேராவூர் சாலையில் வந்து புதிய பஸ்நிலையத்தை அடையும் வகையில் மாற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


இதே மார்க்கமாக இருவழிகளிலும் சென்றுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டவுன் பஸ்கள் சென்றுவருவதற்கு மாற்றுவழி குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

நகர் பஸ்கள் பழைய பஸ் நிலையம், குமரையாகோவில், பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், பட்டணம்காத்தான் பகுதிகளுக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளதால் அதற்கேற்ப வழித்தடங்களை மாற்றிஅமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேணிக்கரையில் இருந்து செட்டியதெரு, அரண்மனை சாலை வழியாகவும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னக்கடை சாலை வழியாக குமரையா கோவில் விலக்கு பகுதிக்கு சென்றுவருவது உள்ளிட்ட பல வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 

40 முதல் 50 நாட்களில் மேம்பால தூண்கள் அமைக்கப்படும் என்றும் அதன்பின் மேற்பகுதியில் மட்டுமே வேலை நடக்கும் என்பதால் கீழே சாலையில் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.