முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 10, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 258 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மதுக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 18 பெண்கள் உள்பட 258 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகேயுள்ள மதுக் கடையை முற்றுகையிடச் செல்வதற்கு முன்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, கட்சியின் மாவட்டச் செயலர் அப்துல் ஜமீல் தலைமை வகித்தார். ஆனால், ராமநாதபுரம் டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் தலைமையில், கேணிக்கரை போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்தனர்.
ஏர்வாடி வெட்டமுனைப் பகுதியில் கட்சியின் மற்றொரு மாவட்டச் செயலரான முகம்மது இஸ்தாக் தலைமையில், மதுக் கடையை முற்றுகையிட முயன்ற 18 பெண்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.


பரமக்குடியில் கிருஷ்ணா திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே மாவட்டச் செயலர் (கிழக்கு) அஸ்கார் அலி தலைமையில், மதுக் கடையை முற்றுகையிட முயன்ற 35 பேர், பரமக்குடி நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்புல்லாணி அருகேயுள்ள கரிச்சான்குண்டு கிராமத்தில் மதுக் கடையை முற்றுகையிட முயன்ற, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி செயலர் அஜ்மல்கான் தலைமையிலும், மாவட்ட துணைத் தலைவர் சோமு முன்னிலையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேவிபட்டினத்தில் நகர் தலைவர் ராவுத்தர் தலைமையில், 32 பேரும், பாம்பனில் நகர் செயலர் மீரான் தலைமையிலும், கிழக்குப் பகுதி நகர் தலைவர் செய்யது இப்ராகிம் முன்னிலையிலும் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரையில் நகர் செயலர் முஜ்புர் ரகுமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் நடந்த மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில், 18 பெண்கள் உள்பட 258 பேர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி: தினசரிகள்