முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 1, 2019

முதல்வர் மீது செருப்பு வீசி தாக்க முயற்சி; பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீசி தாக்க முயற்சி!!

No comments :

தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் வாகனம் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது முதல்வர் மீது படவில்லை. செருப்பு வீசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.





இந்த நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மீது பெரியப்பட்டினம் பகுதியில் பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பாட்டில் பட்டு அவர் காயமடைந்துள்ளார்.


இதெல்லாம் ஓட்டுக்காக தாங்களாகவே திட்டமிட்டு நடத்திக்கொள்ளக்கூடிய நாடகம் என்றும் ஒரு சாரார் கூறிக்கொள்கின்றனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகள்!!

No comments :

நான் வெற்றி பெற்றால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்களி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி கமுதி அருகே அபிராமத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, இப்பகுதி பெண்களுக்கு சுய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாநிலச் சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க எனது சொந்த பணத்தில் உதவி செய்வேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான மக்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இதனால் உச்சிப்புளியில் உள்ள ராணுவ விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். பரமக்குடியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மீண்டும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.





பின்னர், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார்  பேசுகையில், அபிராமத்தில் பேருந்து நிலைய வளாகம், குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வேட்பாளர்கள் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடாது!!

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களை மேற்கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவராவ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திரசிங் பர்மார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும். தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்துவதற்காக பிரத்யேக வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலமாக மட்டுமே அனைத்து செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் செலவினங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கின் வாயிலாக காசோலை அல்லது வங்கி வரைவோலை உள்ளிட்ட வங்கி பரிமாற்றம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.


ரொக்கமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் வருவாய் விவரங்கள், செலவின விவரங்களை முறையே பராமரித்து தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பொதுவான தேர்தல் பரப்புரை செலவினங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். அதேவேளையில் அத்தகைய பரப்புரைகளின் வேட்பாளரின் பெயர், புகைப்படங்கள் அல்லது மேடையை பகிர்ந்து கொண்டாலோ அத்தகைய தேர்தல் செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும்.
வேட்பாளர்கள் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த சுவிதா செயலி மூலம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றையும் முறையே முன் அனுமதி பெற்ற பின்னரே அச்சிட வேண்டும்.
வாக்காளர்களுக்கு கையூட்டு அளிப்பது, வேட்பாளரின் அனுமதி இன்றி அவரது வெற்றி வாய்ப்பு நிலையை கைப்பற்றுவது அல்லது மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் செலவின இறுதி அறிக்கையினை முறையே தொகுத்து உரிய படிவங்களில் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)