முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 21, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியது: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க 800 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கிராமங்கள் தோறும் சென்று வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பதையும் கண்காணிப்பார்கள்.

இக்குழுவில் நேருயுவகேந்திரா அமைப்பினர், ஆசிரியர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் ஆகியோரும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதிப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,84,817 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3406 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

8881 பேர் இறந்துவிட்டது தெரியவந்து, பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 1307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 73 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அவற்றில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்ட 334 பேர் மீது குற்றவியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 82 புகார்கள் வரப்பட்டு அதில் 80 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன. மேலும் இரு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர். 

பேட்டியின் போது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உடன் இருந்தார்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

நான் வைத்த கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - பேராசிரியர் ஜவாஹிருல்லா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்திற்காக சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார். 

அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாருல்லா போட்டியிடுகிறார். இதையடுத்து ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளரும் திருவாடானை தொகுதி தி.மு.க. வேட்பாளருமான சுப.திவாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பிமுன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாகிர்உசேன் வரவேற்று பேசினார். 




கூட்டத்தில் வேட்பாளர் ஜவாருல்லா ஆதரவு கேட்டு பேசினார். கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், நகர் செயலாளர்கள் ராமநாதபுரம் கார்மேகம், கீழக்கரை பசீர்அகமது, ராமேசுவரம் நாசர்கான், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, பி.டி.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, மண்டபம் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் அப்பாஸ்கனி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அன்வர், பாக்கர், சிராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முகம்மது பைசல், புதிய தமிழகம் பாபு, காங்கிரஸ் கட்சி நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், வேட்பாளர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- 


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக மதுவிலக்கு அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. மதுவிலக்கு கோரி அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கட்சிகளும் தொடர் போராட்டங்கள் நடத்தியபோது அதற்கான சாத்தியமில்லை என்று கூறிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அறிவிப்பிற்கு மக்களிடம் வரவேற்பு ஏற்பட்டதும் தானும் வெற்றி பெற்றால் படிப்படியாக கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பால்விலை குறைப்பு மக்கள் மனதை குளிரச்செய்துள்ளது. 

சட்டமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்தின் தேவைகளுக்காக நான் சட்டசபையில் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. எனது கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக இந்த மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி கொண்டுவரவேண்டும் என்ற எனது கோரிக்கையை, தி.மு.க. அறிவித்தது என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார். அதேபோல ராமேசுவரத்தில் கலாமின் நினைவாக கலைக்கல்லூரி, ராமேசுவரம் புண்ணிய தலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற எதையும் நிறைவேற்றித்தரவில்லை. 110 விதியில் கூறப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றால் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

கதாநாயகன்

பின்னர் திருவாடானை தொகுதி வேட்பாளர் சுப.திவாகரன் கூறியதாவது:- 


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கிய அம்சமாக திகழும். அதேபோல, இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகனாக திகழ்கிறது. அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்து தி.மு.க.வின் பக்கம் அலை வீசுகிறது. கலைஞர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையால் தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவதற்கு தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படவில்லை. அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பணபட்டுவாடா அதிகஅளவில் நடைபெறுகிறது. இதனை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மே முதல் வாரத்தில் ராமநாதபுரம் வருகிறார். 

இவ்வாறு அவர் கூறினார். 


செய்தி: தினசரிகள்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)