முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 31, 2019

லோக்சபா தேர்தல் - மொத்த தொகுதிகளின் முக்கிய வேட்பாளர்கள்!!

No comments :
லோக்சபா தேர்தல் திருவிழா!!

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் முக்கியவேட்பாளர்களின் மொத்த விபரம்



(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, March 30, 2019

கீழக்கரையில் போலீஸ் வேலைக்கான பயிற்சி!!

No comments :
கீழக்கரையில் போலீஸ் வேலைக்கான பயிற்சி!!



தகவல் பகிர்வு: கீழக்கரை டைம்ஸ்



(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

"சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்" ராமநாதபுரம் பொதுகூட்டத்தில் திரு.ஸ்டாலின் முழக்கம்!!

No comments :
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சம்பத் குமார் ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலை வகித்தார்.




கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க.வின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு வேட்பாளர் நவாஸ் கனியை வெற்றி பெறச் செய்திட வேண்டும். 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள கையாலாகாத அரசு அப்புறப்படுத்தப்படும். அதற்கு பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் சம்பத்குமாரை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.



கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அவரது மகனான ஸ்டாலின் கேட்கிறேன். வெற்றியை தாருங்கள். மத்திய, மாநில அரசுகளை மாற்றிட அனைவரும் துணை நிற்க வேண்டுகிறேன். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய இந்த தேர்தலில் அனைவரும் சிந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் தங்களது ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்யாமல் ஏதோ மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சி நடத்துவது போல எங்களை விமர்சித்து பேசுகின்றனர். நாங்கள் உரிமையோடு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறோம்.



ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தை அடியோடு போக்க ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றினோம். கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து நானே தொடங்கி வைத்தேன். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை போக்கியது தி.மு.க. தான். இதனால் தண்ணீரில்லா காடு ராமநாதபுரம் என்ற அவப்பெயர் மறைந்தது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அவர்களுக்கு வாக்களித்தால் பொற்கால ஆட்சியை தருவோம் என்கின்றனர். அப்படி என்றால் தற்போது பொல்லாத, கொலைகார ஆட்சி என்பதை ஒப்புக்கொள்கின்றார்களா? அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்துக்கு பொள்ளாச்சியும், கோடநாடு சம்பவங்களே சாட்சி. ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலகியவர் ஜெயலலிதா. அதுவே தமிழ்நாட்டிற்கு அவமானம். அதை காட்டிலும் மோசமாக கோடநாடு விவகாரம் அமைந்துள்ளது. இது பற்றி பேசக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை சந்திக்க தயாராக உள்ளேன். பிரதமர் தன்னை நாட்டிற்கு காவலாளி என்கிறார். ஆனால் கொலைகார எடப்பாடி பழனிச்சாமிக்கு காவலாளியாக உள்ளார்.


மீனவர்கள் கொடுமையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை காக்க முடியாத மோடி எடப்பாடிக்கு காவலாளியாக உள்ளார். பலமுறை தமிழகம் வந்த மோடி பல உறுதிமொழிகளை அளித்தார். எதையும் நிறைவேற்றவில்லை. இனி ஒரு மீனவர் கூட கொல்லப்பட மாட்டார் என்றார். ஆனால் இன்றுவரை பலர் சிறையில் உள்ளனர். இலங்கை சென்ற போது கூட மீனவர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2017–ல் இலங்கை அரசு மீனவர்களுக்கு எதிராக கொடுமையான சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதனை தட்டி கேட்க நாதியில்லை. இந்த நிலையில் மோடியின் நண்பரான சுப்பிரமணியசாமி மீனவர்களை அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படிப்பட்ட பா.ஜ.க.வை ராமநாதபுரத்தில் ஓட, ஓட விரட்ட வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தன்னை நினைத்துக் கொண்டு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டமில்லாத இடங்களில் பேசுகிறார். பூத கண்ணாடியால் கூட ஊழலை கண்டுபிடிக்க முடியாது என்கிறார். அவர்களது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இவர்களின் ஊழலை பட்டியலிட்டு புத்தகமாவே வெளியிட்டுள்ளார். அதில் ரூ.70 லட்சம் கோடி ஊழல் நடந்ததாகவும், அதனால் முதல்–அமைச்சர், துணை முதல்– அமைச்சரிடம் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்–அமைச்சர் பேசுகிறார். பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள், கோவை சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை போன்ற சம்பவங்களால் சட்டம், ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. சென்னையில் கொள்ளைக்காரர்கள் போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் போல உடையணிந்து கடத்தல், கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதற்கு இதுவே உதாரணம்.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் பா.ஜ.க. அரசு கார்பரேட் கடன்களை மட்டும் ரத்து செய்கிறது. மத்தியில் சர்வாதிகார போக்கு, மாநிலத்தில் உதவாக்கரை அரசு என்கிறோம். ஏனென்றால் கலைஞர் முதல்–அமைச்சராக இருந்த போது அனைவருக்கும் உதவும் கரமாக இருந்தார். விருதுநகரில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூரில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தியதால் 4 மாதத்தில் 15 பெண்கள் சாவு என பத்திரிகையில் செய்து வந்துள்ளது. இது அக்கிரமமான ஆட்சி.

இதற்கு பதில் சொல்லும் வகையில் வாக்களியுங்கள். பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆனது? இந்திய பொருளாதாரம் முன்னேறியதா, கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டதா, சுப்ரீம் கோர்ட்டு போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரம் என்ன ஆனது? இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். மீண்டும் மத்தியில் தி.மு.க. பங்களிப்புடன் மதச்சார்பற்ற ஆட்சியையும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான நல்லாட்சியையும் அமைத்து அந்த வெற்றிகளை கலைஞரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தில் பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரைக்கு செல்வதாக தகவல்கள் இருந்தன. ஆனால் மு.க.ஸ்டாலின் திடீரென பரமக்குடி அருகே அரியனேந்தல் நான்கு வழிச்சாலையில் இருந்து பரமக்குடிக்கு உள்ளே வரும் சாலையில் வாகனத்தை ஓட்டச் சொன்னார். பின்னர் பரமக்குடிக்குள் வந்த ஸ்டாலின் திடீரென கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சாலையில் திரண்டு மு.க.ஸ்டாலினை பார்த்து ஆரவாரத்துடன் கை அசைத்தனர். பதிலுக்கு அவரும் சிரித்தபடி கை தூக்கியும், கும்பிட்டும், நடந்து சென்று வாக்குகள் சேகரித்துக் கொண்டு சுமார் 1 கி.மீ. தூரம் 20 நிமிடம் நடந்து வந்தார். பின்பு அங்கிருந்து மீண்டும் வேனில் ஏறி புறப்பட்டு சென்றார்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, March 28, 2019

ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன!!

No comments :

ராமநாதபுரம் லோக் சபா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது.

முக்கிய கட்சிகள், மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி,
நாம் தமிழர் புவனேஸ்வரி,
மக்கள் நீதி மய்யம் விஜயபாஸ்கர்,
அ.ம.மு.க., வ.து.ந. ஆனந்த்
பா.ஜ., நயினார் நாகேந்திரன்,
பகுஜன் சமாஜ் கட்சி பஞ்சாட்சரம்
பூர்வாஞ்சல் ஜனதா கட்சி கேசவ்யாதவ்,
சமாஜ்வாதி கட்சி லோகநாதன்,
மாற்று வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சி கலைஜோதி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷாஜகான்,
அ.ம.மு.க., வ.து., நடராஜன்,

உள்ளிட்டோர் மனுக்களுடன் 18 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது.



சுயேச்சை வேட்பாளர்களான அல்லா பிச்சை, முத்து, பாலமுருகன், மணி, முத்துவேல், கிருஷ்ணசாமி, வைரசீமான், ஆனந்தன் ஆகிய 8 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நாளை (மார்ச் 29) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, March 27, 2019

ராமநாதபுரம் நாடாளமன்ற தொகுதியில் 36 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்!!

No comments :




முன்னதாக திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர், திரு. நவாஸ்கனி, அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் திரு.நெய்னார் நாகேந்திரன் உட்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில்;

நேற்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜய பாஸ்கர், அ.ம.மு.க., வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே 15 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான நேற்று மட்டும் 21 பேர் என இதுவரை 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏராளமானோரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதி மேலக்கோட்டை இளமனூரைச் சேர்ந்த மாரி உள்ளிட்ட ஏராளமானோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பது:
கீழக்கரையைச் சேர்ந்த அகமது அப்துல்காதர், வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பல லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும் பணம் கொடுத்தவர்களிடம் பெறப்பட்ட கடவுச்சீட்டுகளையும் திருப்பித் தரவில்லை . இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 25, 2019

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி!!

No comments :


பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தற்போது திருச்சி கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில்
பிட்டர் பணிக்கு 150 இடங்களும்,
வெல்டர் பணிக்கு 110 இடங்களும்,
டர்னர் பணிக்கு 11 இடங்களும்,
மெஷினிஸ்ட் பணிக்கு 16 இடங்களும்,
எலக்ட்ரீசியன் பணிக்கு 35 இடங்களும்,
சிஸ்டம் அட்மின் பணிக்கு 20 இடங்களும் உள்ளன.

இவை தவிர வயர்மேன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெட்டல் ஒர்க்கர், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன்பாக முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 30-3-2019-ந் தேதியாகும்.
ஏப்ரல் 4-ந்தேதி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். தகுதியானவர்கள் 11-4-2019 முதல் பயிற்சி பணியில் சேரலாம்.


இது பற்றிய விவரங்களை www.bheltry.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, March 23, 2019

ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஷ்வரி வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 4 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.




ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டி.புவனேஸ்வரி (38) தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவராவிடம் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். பி.எஸ்.சி வேதியியல் பட்டதாரியான இவர் திருவாடானை அருகே பட்டமங்களம் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் ஆர்.திருநாவுக்கரசு. இவர்களுக்கு தேவதர்ஷன், ஜனனி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அவர் நாம் தமிழர் கட்சியின் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலராகவும் உள்ளார். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் எம்.பி வீட்டில் சிபிஐ விசாரணை!!

No comments :
மதுரை வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி. ஏ.அன்வர்ராஜாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரத்தில் உள்ள ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏ. அன்வர்ராஜா. இவர் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் உள்ளார்.
மதுரையில் உள்ள வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரை சிபிஐ பிரிவைச் சேர்ந்த அதிகாரி கார்த்திகைசாமி, ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் கொண்ட 7 பேர் குழு அன்வர்ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.



சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.


தேர்தல் நேரத்தில் மக்களவை உறுப்பினர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு அன்வர்ராஜா கட்சி மேலிடத்தை வலியுறுத்திய நிலையில், கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளராக எஸ்.சம்பத்குமாரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர்.




கேணிக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மைதீன் பேசுகையில், தமிழகத்தில்தான் பாஜகவுக்கு எதிராக முக்கிய கட்சிகள் இணைக்கப்பட்டு பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, அதன் மாவட்டச் செயலர் காசிநாத்துரை, காங்கிரஸ் பிரமுகர் தெய்வேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சுப.த. திவாகரன், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி கலைவேந்தன், பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக நகரச் செயலர் கார்மேகம் வரவேற்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 18, 2019

SBI வங்கிகளில் ஏ.டி.எம். அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!!

No comments :
பாரத ஸ்டேட் வங்களிகளில் இனி ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய குறியீட்டு எண் மூலம் பணம் எடுக்கும் முறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, கமுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு செயல்விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

இதுவரை ஏ.டி.எம். இயந்திரங்களில் ஏ.டி.எம். அட்டை மூலம் மட்டுமே பணம் எடுக்கும் முறை அமலில் இருந்தது. தற்போது ஒருவர் தனக்கு வேண்டிய நபருக்கு பணத்தை அனுப்ப ஏ.டி.எம். இயந்திரத்தில் வங்கிக் கணக்கு எண், தொகை மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பதிவு செய்து, இந்த ரகசிய எண்ணை நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவரிடம் கூறிவிட்டால் அந்த எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை ஏ.டி.எம். அட்டை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.



இவ்வசதி இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமுதி பாரத ஸ்டேட் வங்கியில் இத்திட்டத்தின் அறிமுக விழா திருச்சி மண்டல தலைமை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கமுதி கிளை மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய எண் மூலம் பணம் எடுக்கும் முறை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டப்பட்டது.


செய்தி: தினசரிகள்

(செய்திகள், விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்.)

Sunday, March 17, 2019

ராமநாதபுர மாவட்டத்ட்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட தணிக்கையின்போது முறையான ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:- 

இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அரசு பொது கட்டிடங்களில் உள்ள அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரச் சின்னங்களையும், தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் போன்றவற்றை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 17,945 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


இதில் அரசு பொதுக் கட்டிடங்களில் 12,677 விளம்பரங்களும், தனியார் கட்டிடங்களில் 5,268 விளம்பரங்களும் அடங்கும். உரிய கால அவகாசம் வழங்கியும் முறையே விளம்பரங்களை அகற்றாமல் இருந்த வகையில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் மேற்கொண்ட தணிக்கையின் மூலம் 15 நிகழ்வுகளில் மொத்தம் ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம், பொருட்கள் முறையான ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

குறிப்பாக ரூ.15 லட்சத்து 9 ஆயிரத்து 850 மதிப்பிலான இந்திய பணமும், ரூ.28 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் வெளிநாட்டு பணமும் அடங்கும். இதுதொடர்பாக சுங்கத்துறை மற்றும் வருமானவரி துறை ஆகிய துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நிதி விடுவிப்பு குழு முறையே ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணமானது சம்பந்தப்பட்ட நபரிடம் திரும்ப வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, March 12, 2019

தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் ‘சுவிதா’ செயலி அறிமுக விளக்க கூட்டம்!!

No comments :
இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முறையே கடைபிடிப்பது அவசியமாகும். குறிப்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பயன்படுத்தும் வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தற்காலிக தேர்தல் அலுவலகங்கள், ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்குதளம் உட்பட அனைத்து விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.




மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுக்குரிய பிற இடங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.

தேர்தல் பிரசாரத்தின் போது சாதி, சமய, மொழி அல்லது வகுப்பினரிடையே வேறுபாடுகளை தூண்டுகிற விதமாகவோ, பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிற விதமாகவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது. மேலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு வீடாக நேரிடையாகவோ, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-ஆப் செயலி உள்ளிட்ட குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி அழைப்பு மூலமாகவோ என எந்தவிதத்திலும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. மீறினால் தேர்தல் நன்னடத்தை விதிமீறலாக கருதப்பட்டு சட்டப்படி முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்படும்.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சிரமமின்றி முன்அனுமதி பெற ஏதுவாகவும், தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையிலும் சுவிதா என்ற செயலி நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இந்த செயலி மூலமாக மட்டுமே முன்அனுமதி பெற முடியும். அதன்படி இந்த செயலி மூலம் முன்அனுமதி கோரி பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது ஒற்றைச்சாளர முறையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல வாக்காளர்களை கவரும் விதமாக பணமாகவோ, பொருளாகவோ பரிசுப்பொருட்கள் வழங்குதல் கூடாது. மீறினால் வாக்கிற்காக பணம் கொடுப்போர் மற்றும் பெறுவோர் என இருதரப்பினர் மீதும் குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் எந்தவொரு வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் மிரட்டி அடக்கு முறைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதவிர சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை பொறுத்தவரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், சின்னங்கள் ஆகியவற்றை மறைக்கவும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள்ளும் அகற்ற கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதனை முறையே பின்பற்ற வேண்டும்.

மேலும் எந்தவொரு அரசு கட்டிடத்திலும், நகரப்பகுதிகளிலும் சுவர் விளம்பரம் செய்வதற்கு 100 சதவீதம் அனுமதி கிடையாது. ஊரகப்பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் அனுமதியோடு முறையே தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற்று விளம்பரம் மேற்கொள்ளலாம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பிரசார பொருட்களில் தமிழ்நாடு அரசு தடை விதித்து அறிவித்துள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை முறையே பின்பற்றி மக்களவை தேர்தல்-2019 பணிகளை சுமுகமான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 11, 2019

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை!!

No comments :

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் சனிக்கிழமை சோதனையிட்டு சரிபார்க்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதல்கட்டமாக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.

மேலும் இரண்டாம் கட்டமாக, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் இயந்திரங்கள் 1800 ஆகிய வந்தடைந்தன. இந்த இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் குறித்து முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது.



அதன்படி தற்போது 3,295 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 1,771 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,729 வாக்களித்ததை சரிபார்க்கும் தணிக்கை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 300 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 600 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடானது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சோதனை செய்யப்பட்டன, இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சனிக்கிழமை பார்வையிட்டார். 4 நாள்களுக்கு இயந்திர திறன் சோதனை நடத்தப்படும்.


மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது அலுவலர்களோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)