முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 28, 2021

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி (பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியால் ஆன காகிதத் தட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

 


உயர்நீதிமன்றம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை நெகிழிப் பொருள்களுக்கான தடையை அமல்படுத்தவும், மீறிச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனாலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தயாரிப்பதை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுகிறது. அவை உரிய அரசு அனுமதியின்றியே செயல்படுகின்றன.

 

ஆகவே சுற்றுச்சூழல் மீது அக்கறையுடைய பொதுமக்கள், தடை செய்த நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து ராமநாதபுரத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் தகவல் தருவோருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, December 23, 2021

திறப்பு விழாவுக்கு தயாராகும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி!!

No comments :

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழா வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் இரவு-பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மத்தியஅரசின் நிதிஉதவியுடன் ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகபட்டினம், திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. 

 

இதன்படி தமிழகத்தில் தற்போதைய நிலையில் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகள் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் உள்ளதோடு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

 

குறிப்பாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை வருகிற 12-ந் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றும் இந்த விழாவில் முதல்- அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகளை டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திறப்பு விழாவிற்கு ஏற்ப ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் தயார்நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 


இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

 

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற வகையில் 6 மாடிகளில் வகுப் பறை கட்டிடங்கள், சமையலறை, தங்கும் விடுதி, அலுவலக கட்டிடம், நூலகம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஏறத்தாழ 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.

 

இதுதவிர, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தேவையான துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தவிர்க்க முடியாத விபத்து தலைக்காய சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளும் ராமநாதபுரத்திலேயே மேற்கொள்ள தயாராக உள்ளோம். 100 மாணவர் சேர்க்கை பணியிடங்களில் 15 சதவீதம் மத்திய அரசு ஒதுக்கீடும், 85 சதவீதம் மாநிலஅரசு ஒதுக்கீடும் பின்பற்றப்படும். 

 

தற்போதைய நிலையில் 5 அறுவை சிகிச்சை அரங்குகள் தயார்நிலையில் உள்ளன. புதிய பல்நோக்கு கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அறுவை சிகிச்சை அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் செயல்முறை கல்விக்கு ஏற்ற வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 4 மனித உடல்கள் தயார்நிலையில் மதுரையில் உள்ளன. கல்லூரி தொடங்கியதும் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்.

 

மாணவர்கள் செயல்முறை கல்வி நிலைக்கு செல்லும்போது இங்கு அனைத்து வசதிகளும் கட்டமைப்புகளும் உருவாகி விடும். இதுதவிர, ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் கூடுதலாக 11 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு கூறினர்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 12, 2021

கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.

 

இதுகுறித்து மாவட்ட சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட சதுரங்க கழகம் செயல்படுகிறது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 15 முறை சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

 


வரும் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளன. 7, 9, 11, 13, 15 மற்றும் 25 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

 

பதிவுக்கட்டணம் உண்டு. போட்டிக்கான நுழைவுப் படிவங்கள் பெற்றுக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கக் கழகத் தலைவர் எஸ். சுந்தரம் 9443610956,

கீழக்கரை மருந்தகம் 04567-241885,

சதுரங்கக் கழகச் செயலர் எம். ரமேஷ் (சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி) 9443 408 096 ,8248 207 198 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் சிவப்பு ரிப்பன் கழக அலுவலகத்தில் அளிக்கலாம். வரும் 15 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.

 

அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு!!

No comments :

தமிழக ஜூனியர் ஹாக்கி அணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

 

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11வது ஹாக்கி இந்தியா ஜூனியர் (ஆண்கள்) நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிவரும் டிச., 16 முதல் 25 வரை செயற்கை இழை மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

இப்போட்டிக்கான தமிழக வீரர்கள் தேர்வு ராமநாதபுரத்தில் நவ.,1 2ல் நடந்தது. இதில் 30 பேர் தேர்வு செய்து அடுத்தக்கட்ட தேர்வு சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நவ., 15ல் முதல் டிச.9 வரை நடந்தது.



இம்முகாமில் 18 பேருக்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாணவர்கள் பி. முரளிகிருஷ்ணன் மற்றும் ஆர்.மனோஜ் குமார் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.


மாணவர்களை, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் தலைவர் டாக்டர் மதுரம் துணைதலைவர் டாக்டர் அரவிந்த் ராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, வேலுமாணிக்கம் மனோகரன், செயலர் கிழவன்சேதுபதி மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் தினேஷ்குமார் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, December 7, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கவும், மீன் வளர்க்கவும் மானியத் திட்டத்தில் நிதி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் சங்கர்லால்குமாவத் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

மீன்வளர்ப்புக்கு மானியம் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் 100 ஹெக்டேரில் செயல்படுத்திட மத்திய அரசானது ரூ. 69.88 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 0.5 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்து,

அதில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 50 சதவிகித மானியமும் வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

எனவே திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 340 சுகாதார பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தகவல்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற 340 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 


மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்களில் உள்ள

218 இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கும்,
122 பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்,
சுகாதார ஆய்வாளர் பதவிக்கும்

ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இதற்கு தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.12.21 அன்று மாலை 5 மணிக்குள்

செயற்குழு செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்,
சிகில் ராஜவீதி,
கேணிக்கரை,
ராமநாதபுரம்

 

என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

மேலும் விண்ணப்பப் படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும இணையதளம் (https://nhm.tn.gov.in) மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இணையதள (https://ramanathapuram.nic.in) வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் நேரில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 5, 2021

அண்ணா பதக்கம் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

துணிச்சலுடன் உயிரைக் காப்பாற்றுதல், அரசு பொதுச் சொத்துகளைக் காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு முதலமைச்சரால் குடியரசு தினவிழாவன்று அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ராணுவத்தினர் உள்பட அனைத்துத் துறையினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை பெற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 



பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் வீர தீரச் செயல் தொடர்பான கையேடு ஆகியற்றை ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 8 ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) நேரில் வழங்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் தலைமையிடத்துக்கு வரும் 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.