முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 16, 2017

கீழக்கரையில் காட்சிப்பொருளாக “நம்ம டாய்லெட்”, பயன்பாட்டுக்கு வருவது எப்போது?!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் மத்திய அரசு நிதி மற்றும் நகராட்சி பொது நிதியிலிருந்து ஆண், பெண், ஊனமுற்றோர் ஆகியோருக்கான மூன்று செட் (ஒரு செட் விலை ரூ.18 லட்சம் வீதம்) மூன்று செட்டுகள் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் யுனிவர்செல் டாய்லெட் கடந்த 2013ல் வரவழைக்கப்பட்டு தற்போது வரை காட்சி பொருளாகவே உள்ளது,

இதனால் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சியில் 2013ல் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் மத்திய அரசு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியிலிருந்து வரப்பெற்ற யுனிவர்செல் டாய்லெட்டை கடற்கரை பெட்ரோல் பங்க், முத்துசாமிபுரம், பெத்தரி தெரு ஆகிய இடங்களில் வைப்பது என்று நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஒரு ஓரமாக இரண்டு செட்களும், கீழக்கரை புதிய ஜெட்டிபாலத்தில் ஒரு ஓரமாக ஒரு செட்டு டாய்லெட்களையும் காட்சி பொருளாக வைத்திருக்கின்றனர்.

இதனால் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த யுனிவர்செல் டாய்லெட்டுகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ரவுடி என்கவுண்டர் - நீதி விசாரனை கோரி மனு!!

1 comment :
தொண்டி அருகே கடந்த 13–ந்தேதி இரவு உசிலங்கோட்டை டி.புதுக்குடி காலனியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று கோவிந்தனின் மனைவி பவானி (வயது 40), தனது மகள்கள் பாண்டியம்மாள்(19), பவித்ரா(17), தனலட்சுமி(15) மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.


அதில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் கோவிந்தன் விவசாய வேலை செய்து வந்தார். கடந்த    13–ந்தி மாலை எனது கணவரை விசாரணைக்காக ஒரு சிலர் அழைத்து சென்றனர். அன்று இரவு 10 மணி வரை என்னுடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்பு அவரிடம் பேசமுடியவில்லை. நள்ளிரவில் அவரை கொடிபங்கு அருகே போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வந்தது.

அவரை சுட்டுக்கொன்ற போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஏற்கனவே பரமக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடையவர். நீதிபதி சம்பத் கமி‌ஷனால் விசாரிக்கப்பட்டவர். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது கணவர் இறப்புக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்.
மேலும் என்னுடைய மூத்த மகளுக்கு உடனே அரசு வேலை வழங்க வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையினை இரண்டு மடங்காக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 30, 2017 காலாண்டு முதல் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். 

தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு இவ்வுதவிதொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவிதொகை பெறலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவிதொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறக்கூடாது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)