முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 29, 2020

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


கல்பனா சாவ்லா விருது, வீரதீரச் செயல் புரிந்த பெண்களை கௌரவிக்கும் விதமாக நடப்பு ஆண்டின் (2020) சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகரான வீரதீரச் செயல் புரிந்த பெண்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். தாங்கள் செய்த வீரதீரச் செயல்கள் குறித்த உரிய விவரங்கள், அதற்கு சாட்சியாக நிழற்படங்கள், விருது ஏதேனும் பெற்றிருந்தால் அதுபற்றிய விவரங்களையும் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, கல்வித்தகுதி உள்ளிட்ட முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, July 19, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க முன்வைப்பு நிதி வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். 


திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். மேலும், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவராகவும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். 
சொந்தக் கட்டடம் அல்லது சொந்த இடம் வைத்திருக்க வேண்டும். நடப்பு 2020-21 ஆம் நிதியாண்டிற்கு அரசு மானியமாக ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படும். 

ஆகவே, இந்தத் திட்டத்தில் பயனடைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி!!

No comments :

பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இம்மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வை 6,525 மாணவர்கள், 7.506 மாணவியர் என மொத்தம் 14,031 பேர் எழுதினர். அவர்களில் 5,916 மாணவர்கள், 7.149 மாணவியர் என மொத்தம் 13,065 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 93.12 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 90.67 சதவீதம், மாணவியர் 95.24 சதவீதம். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 30 மாற்றுத்திறன் மாணவ, மாணவியரில் 25 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் 83.3 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 92.30 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 18 ஆவது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்தது. 




பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:

மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,019 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில் 4.459 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் மாணவியர் 92.17 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.40 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளியில் 86.08 சதவீதம் பேரும், அரசிடம் பாதி உதவி பெறும் பள்ளிகளில் 95.33 சதவீதம் பேரும், தனியார் பள்ளிகளில் 99.25 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மாவட்டத்தில் 70 அரசுப் பள்ளிகளில் 6 பள்ளிகளில் முழுமையான தேர்ச்சியும், 21 பள்ளிகளில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலான தேர்ச்சியும் உள்ளது. அரசு உதவி பெறும் 18 பள்ளிகளில் 2 பள்ளிகள் முழுத் தேர்ச்சியும், 9 பள்ளிகள் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளன. 

முழுமையான தேர்ச்சி எனும் அடிப்படையில் பாதி அரசு உதவி பெறும் 15 பள்ளிகளில் 3 பள்ளிகளும், 45 தனியார் பள்ளிகளில் 37 பள்ளிகளும் தேர்ச்சியடைந்துள்ளன. தேர்ச்சியில் 95 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையில் பாதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, தனியார் பள்ளிகள் 4 என தேர்ச்சியடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை காலை வெளியிட்டார்.

 அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.புகழேந்தி உடனிருந்தார். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் இணையம் மூலமே அந்தந்தப் பள்ளிகளுக்கும், செல்லிடப்பேசி குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டன.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
கரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி நிவாரணம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: 

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளவர்களுக்கு தலா ரூ. 1000 (ஆயிரம்) நிவாரணமாக அவரவர் வீட்டிலேயே வழங்கப்பட்டு வருகிறது. 



ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 28,937 பேரில் இதுவரை 17,226 பேருக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண நிதி பெறாதவர்கள், தங்களின் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்பு கொள்ளவேண்டும். 

நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி எண் 04567-231410 என்பதைத் தொடர்பு கொள்ளலாம். அங்கும் உதவி மறுக்கப்படும் பட்சத்தில் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மைய தொலைபேசி எண் 1800 425 0111 என்பதைத் தொடர்பு கொள்ளலாம். 

பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் கட்செவியஞ்சல் மற்றும் விடியோ வசதி செல்லிடப்பேசி எண் 97007 99993 என்பதில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, July 9, 2020

கால்நடை இயக்க திட்டத்தில் மானிய விலையில் ஆடுகள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை இயக்கம் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம், தேசிய கால்நடைகள் இயக்கம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வறட்சி பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மாநில திட்டக்குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளன. இதன்மூலம் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை வளர்ப்பு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, கடலாடி மற்றும் போகலூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த திட்டத்திற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 45 பயனாளிகள் வீதம் மொத்தம் 225 பயனாளிகளுக்கு இந்த ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதில் மத்திய அரசின் மானியம் 60 சதவீதமும், மாநில அரசின் மானியம் 30 சதவீதமும், பயனாளியின் பங்குத்தொகை 10 சதவீதமும் ஆகும். இதற்காக ஒரு பயனாளி தனது பங்குத்தொகையாக ரூ.6,600 செலுத்த வேண்டும். நிலமற்ற மற்றும், சிறு-குறு விவசாயிகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இதன்மூலம் பயனாளிகளுக்கு 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள், 5 முதல் 6 மாத வயதுடைய 1 ஆட்டு கிடாய் வழங்கப்படும்.



ஆடுகளுக்கு 3 வருடத்திற்கு காப்பீடு செய்யப்படும். கிடாய் ஆடுகளை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கும், பெட்டை ஆடுகளை 3 வருடங்களுக்கும் விற்கக்கூடாது என பயனாளிகளிடம் இருந்து உறுதிமொழி ஒப்பந்தம் பெறப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் துறைசார்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலோ அல்லது ஆடு வளர்ப்போரிடமோ தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஏஞ்சலா தெரிவித்தார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, July 7, 2020

முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய ராமநாதபுர மாவட்ட மக்கள்!!

No comments :
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒரு நாள் பொது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு அழைப்பை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ் நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜவீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.



பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததால் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. காலை நேரத்தில் பால் வினியோக கடைகள் மட்டும் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளும் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்காக கூட வெளியில் செல்லாமல் மக்கள் தவிர்த்து வந்தனர்.

ஒட்டுமொத்தமாக பாரபட்சமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் வெளியில் தேவையின்றி சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் முகக்கவசம் அணிந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



இதுதவிர கூடுதல் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தே இல்லாத சாலைகளில் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டனர். இதுநாள் வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களை போன்று அல்லாமல் நேற்று வழக்கத்தை விட மக்கள் அதிகஅளவில் ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் வராமல் வீடுகளில் இருந்ததால் சாலைகளில் கால்நடைகளை தவிர மக்கள் நடமாட்டமே கண்ணில்படவில்லை. ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு மக்களின் மிகப்பெரிய ஒத்துழைப்பாகவே நேற்றைய ராமநாதபுரம் மாவட்ட சாலைகள் காட்சியளித்தன.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.