முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 26, 2019

ராமநாதபுரத்தில் வரும் 28 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம். இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Tuesday, June 25, 2019

ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்; போலீஸ் விசாரணைக்கு உத்தரவு!!

No comments :
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சுமார் 100 பேர் நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். இவர்களது சம்பளத்தில் தொழிலாளர் சேமநல நிதியாக ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு ஸ்டேட் வங்கியில் அதற்கான கணக்கில் செலுத்தப்படுவது வழக்கம்.

இவ்வாறு கோவில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக குறைவான தொகை செலுத்தப்படுவதாகவும், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் கேட்டு வருங்கால வைப்பு நிதித்துறை அதிகாரிகள் கோவில் இணை ஆணையருக்கு தபால் அனுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இணை ஆணையர் கல்யாணி சம்பந்தப்பட்ட அலுவலரை அழைத்து விளக்கம் கேட்டபோது மாதந்தோறும் அந்த தொகையை செலுத்தியதற்கான ரசீது இணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஸ்டேட் வங்கியில் விசாரித்தபோது, சுமார் 3½ ஆண்டுகளாக ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் செலுத்துவதற்கு பதிலாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த ரசீதுகளை சரிபார்த்த போது அது போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கோவில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தற்காலிக ஊழியர் சிவன் அருள்குமார் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவரது தந்தை இக்கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்தம் ரூ.78 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இணை ஆணையர் கல்யாணி இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

அவர் இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.


செய்தி: தினசரிகள்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Monday, June 10, 2019

ராமநாதபுரத்தில் வரும் 15-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 15-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக வரும் 15.06.2019 சனிக்கிழமை அன்று ராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்; காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் கலந்துகொண்டு வேலை நாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. 

இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார்துறை நிறுவனங்கள், இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

எனவே, தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

இந்த முகாம் மூலம் பணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட்டால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் இரத்து செய்யப்படமாட்டாது.  அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தங்கள் பெயர் பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.


இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;