முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 31, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ராமநாதபுரம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

 


ஆகவே 2021-2022-ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம்.

 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும்,

ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, March 30, 2022

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர்!!

No comments :

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,
ரயில்வே தேர்வுவாரியம்,
பணியாளர் தேர்வு குழுமம்,
வங்கி பணியாளர் சேவைகள் குழுமம் 

உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்காக தயாராகி கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

 


கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு வந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத சூழலில் உள்ளவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே அரசுப்பணிக்கு தயார்படுத்தி கொள்ளும் இளைஞர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தவாறே தங்களை தயார் செய்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

 

கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பாட வகுப்புகளின் ஒளிபரப்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

 

இந்தநிகழ்ச்சி தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு அன்றைய தினம் இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பாகிறது. 

 

போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயன் பெறுமாறு ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, March 29, 2022

கீழக்கரையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்; CVC, MSEC அணிகள் பரிசுகளை வென்றன!!

No comments :
கீழக்கரையில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள்.

மொத்தம் 25 அணிகள் பங்கேற்றதில் CVC (Customs Volley Ball Club) அணி முதலிடத்தையும், MSEC (Mohamed Sathak Engg. College) அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து பரிசுகளை தட்டிச்சென்றனர்.





விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள், முஹம்மது சதக் அறக்கட்டளை நிர்வாகிகள், இராமநாதபுர மாவட்ட கைப்பந்து கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை பகிர்ந்து பரிசுகளை வழங்கினர்.




முன்னதாக நம் இணையத்தில் இந்த போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்றெவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

செய்தி & படங்கள்: கீழை.ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.)

Saturday, March 26, 2022

குப்பை கூடமாக காட்சி தரும் ராமநாதபுரம் மருத்துவமனை வளாகம்!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்த பொருள்கள் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகம் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு தினமும் சுமார் 700 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் 562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவர்களின் எண்ணிக்கை 62 லிருந்து 108 ஆகவும், செவிலியர்களின் எண்ணிக்கை 160 லிருந்து 233 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே பழுதடைந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆங்காங்கே குப்பை போல குவிக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்காததால் தற்போது 350-க்கும் மேற்பட்ட இரும்புக் கட்டில்கள், மெத்தைகள் மற்றும் ஆடைகளைத் தூய்மையாக்கும் நீராவி இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.

 

ரத்தச் சுத்திகரிப்புப் பிரிவு அருகே குவிக்கப்பட்ட பழைய பொருள்களால் சிறுநீரக நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிக்கு அடியில் குவிக்கப்பட்டுள்ள பழைய பொருள்களால் தொட்டியின் தூண்கள் சேதமடைந்துள்ளன. ஆகவே தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இரும்புக் கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் துருப்பிடித்ததால் அவை கழிவு நீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதாகவும், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

தூய்மை இந்தியா திட்டத்தில் மத்திய அரசின் சிறப்பு நிதி ரூ.6 கோடி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நிதியை சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிக்கு செலவிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையே குப்பைகளால் சுகாதாரச்சீர்கேடு அடைந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, பழைய பொருள்களை அப்புறப்படுத்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

செய்தி & படம் : தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, March 23, 2022

தரமற்ற அரிசி விநியோகம்; இருவர் பணியிடை நீக்கம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகித்ததாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சாயல்குடியில், ராமநாதபுரம் மொத்த விற்பனை பண்டகசாலை கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை (எண் 5) உள்ளது. இக்கடையில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.

 


புகார் குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் நியாயவிலைக் கடை நகர்வுப் பணியாளர் மோகன் மற்றும் விற்பனைப் பணியாளர் வில்வதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் மார்ச் 25 ஆம் தேதி ராணுவத்தில் சேர்வதற்கான கருத்தரங்கம்!!

No comments :

ராணுவத்தில் சேர்வதற்கான தகுதி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் மார்ச் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான பல்வேறு வேலைவாய்ப்புகள், தகுதிகள், தேர்வுகள் மற்றும் தயார்படுத்திக் கொள்வதற்கான கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

 


கருத்தரங்கம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் மார்ச் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில், திருச்சி கன்டோன்மென்ட் ராணுவ சேர்க்கை அலுவலகம் சார்பில் ராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அலுவலர்கள் மூலம் விளக்கமளிக்கப்படவுள்ளது.

 

ஆகவே, இந்திய ராணுவ சேவையில் பணியாற்ற ஆர்வமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடையலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, March 21, 2022

ராமநாதபுதில் நாளை (மார்ச் 22ல்) மின்வினியோக குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 22ல்) காலை 11:00மணிக்கு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

 

 

பொதுமக்கள்தங்களது குறைகளை நிவர்த்தி செய்து பயன்பெறலாம். ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மார்ச் 24ல் காலை 11:00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

 


 

பொதுமக்கள் தங்களது குறைகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மன்ற தலைவர், சட்டம் பயின்ற நபர்களிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யலாம்.

 

மேலும் விபரங்களுக்கு 04567-230 577 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்,

 

ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி, செயற்பொறியாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, March 17, 2022

கீழக்கரையில் மார்ச் 27-ந்தேதிமாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கமும், முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து மாவட்ட அளவிலான 20-வது ஆண்டு சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டியை வரும் 27-ந்தேதி நடத்த உள்ளனர்.

 

ஆண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியிலும்,

பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் ராமநாதபுரம் முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும் நடைபெறுகிறது.

 


இதில் கலந்து கொள்ளக்கூடிய அணிகள் தங்களது விவரங்களை

24-ந்தேதிக்குள் 8148259600, 9943755116 ஆகிய எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

போட்டிகள் அனைத்தும் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது.

 

இந்த தகவலை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ரமேஷ்பாபு, சுரேஷ்குமார் உடனிருந்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஏப்.,3 அன்று பரமக்குடியில் மாவட்ட பளுதுாக்கும் போட்டிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட அமெசூர் பளுதுாக்கும் சங்கம் சார்பில், ஏப்.,3 அன்று பரமக்குடியில் மாவட்ட போட்டிகள் நடக்கிறது.

 

2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட சீனியர் போட்டிகள் சவுராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.

 

இதில் 13 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.

 


பெண்கள் 45, 49, 55, 64, 77 கிலோ எடை பிரிவுகளிலும்,

ஆண்கள் போட்டிகளில் 55, 61, 67, 73, 81, 89, 96, 102, 109 மற்றும் 109 கிலோவிற்கு மேல் உள்ளவர்களும் பங்கேற்க முடியும்.

 

மேலும் போட்டிகள் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அன் ஜெர்க் முறையில் நடக்கிறது.

 

தகுதி உள்ளவர்கள் ஏப்.,1 அன்று இரவு 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் பரமக்குடி பாரதியார் உடற்பயிற்சி சாலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அனைத்துப் போட்டிகளுக்கும் உடல் எடை ஏப்.,3 அன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் எடுக்கப்படும் என, மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு 94882 88791ல் தொடர்பு கொள்ளலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, March 12, 2022

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் வெள்ளை கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் வெள்ளை கோட் அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 13-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் முதல்கட்டமாக தற்போது வரை மாநில ஒதுக்கீட்டில் 85 இடங்களும் பூர்த்தியாகி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

 

இதுதவிர அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 இடங்களில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். 

முதலாம் ஆண்டுக்கான பாட வகுப்புகள் அந்தந்த பேராசிரியர்கள் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. மாணவர்களுக்கு விசாலமான அறைகள், பாதுகாப்பு பெட்டக வசதிகள், வகுப்பறைகள் என அனைத்து அம்சங்களும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்.



முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவர்களுக்கான வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி என்பது மருத்துவ கல்லூரி கல்வி நடவடிக்கையில் மிகவும் முக்கிய தருணமாகும். 

 


அந்த சீருடை அணிந்து டாக்டரை போல வலம் வருவதற்காகத்தான் உயர்கல்வியில் கஷ்டப்பட்டு கல்வி கற்பதை லட்சிய கடமையாக கொண்டு மாணவர்கள் செயல்படுவார்கள்.

 

அந்த வகையில் மருத்துவ கல்லூரியில் முதல்முறையாக வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று நடைபெற்றது. 

 

மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முதல்வர் டாக்டர்.அல்லி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். மலர்வண்ணன், மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை கோட் அணிவித்து டாக்டர் ஆகும் மருத்துவ கல்வி பணியில் முதல்படியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில், அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, March 3, 2022

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10 ஆம் தேதி குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகளைத் தீர்க்கும் கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடாபாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

 


வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களும் பங்கேற்கின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

இந்த கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, March 2, 2022

நூறு சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கும்,நிகழ்ச்சி!!

No comments :

ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை துறை சார்பில், பனை மேம்பாட்டு திட்ட இயக்கத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கும்,நிகழ்வு மேட்டு சோழதுாரில் நடைபெற்றது.

 

வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் விவசாயிகளுக்கு பனை விதைகளை வழங்கி, இத்திட்டம் குறித்து கூறியதாவது:

 

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், 15,000 பனை விதைகள், முழு மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்படுகிறது. நடவு குழியில் 2 பனை விதைகள்வீதம், மூன்று மீட்டர் இடைவெளி விட்டு பொருத்தமான ஈரப்பதத்துடன் பனை விதைகள் நடவு செய்ய வேண்டும்.

 


விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகள் மற்றும் பொது இடங்களில் பனை விதைகளை நடவு செய்யலாம். பனை மரங்கள்மூலம், மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. அதிகப்படியான மழை மற்றும் வெள்ள காலங்களில், ஏரி கண்மாய் வாய்க்கால்களில் மண் அரிப்பினை தடுத்து பெரும் விபத்து தடுக்கப்படுகிறது.

 


உள்ளூர் கிராம தொழிலாளர்கள், கைவினை கலைஞர்களுக்கு, வருவாய் தரும் வேலை வாய்ப்பினை அளிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தை அனைவரும் நடவு செய்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

 

இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.