முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 27, 2019

ராமநாதபுரம் அருகே துப்பாக்கி பதுக்கிய சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன், உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் மீது திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவில் வசித்து வரும் வள்ளி (வயது 42) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வள்ளி வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வள்ளியை போலீசார் கைது செய்ததுடன், இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்தன.



இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன்(28), கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கர்ராஜா(36), மணிகண்டன்(32) ஆகியோர் என்பதும், இவர்கள் தான் துப்பாக்கியை கோவையில் இருந்து வாங்கி வந்து பூமிநாதனிடம் விற்றுத்தரும்படிகூறி கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து வள்ளி உள்பட 4 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் வள்ளி பரமக்குடியில் உள்ள பெண்கள் சிறையிலும், மற்ற 3 பேரும் ராமநாதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Monday, August 26, 2019

ராமநாதபுரம் அருகே கைத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது!!

No comments :
தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. எனவே ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுள்ளார். எனவே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



அவர் ராமேசுவரத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மீது திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், அவருக்கும் பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளி (வயது 42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவியாக அவர்கள் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வள்ளியின் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் வள்ளி இருந்தார். அங்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அங்கு உள்ளதா? என்பதை அறிய மேலும் தீவிர சோதனை நடந்தது.

பின்னர் துப்பாக்கி, 32 தோட்டாக்களை பறிமுதல் செய்ததுடன் வள்ளியை உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பின்னர் மறுவிற்பனை செய்யப்பட்டது என்றும், குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். வள்ளி கைது செய்யப்பட்டார். பூமிநாதன், வள்ளிக்கு துப்பாக்கி கிடைத்தது இதுதான் முதல்முறையா? அவர்கள் ஏற்கனவே பலமுறை துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கள்ளத்தனமாக விற்றுள்ளார்களா, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கடத்தி உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமத்தில் பெண்ணின் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Saturday, August 24, 2019

ராமநாதபுத்தில் வரும் 28 ஆம் தேதி சமையல் எரிவாயு விநியோக குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுத்தில் சமையல் எரிவாயு விநியோக குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவுள்ளது. குறைதீர்க்கும் கூட்டமானது வரும் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடத்தப்படவுள்ளது.


கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Wednesday, August 21, 2019

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்ட்ர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் யாரும் இடைத்தரகரை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் செயல்படு f ப்பட்டு வரும் பிரதமரின் "அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.



இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பயனாளிகளுக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும் பயனாளியின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளியின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பின் பரப்பளவு குறைந்தது 300 சதுரடியிலிருந்து 500 சதுரடி வரை இருக்க வேண்டும். வீடு கட்டிக்கொள்ள மானியமாக ரூ.2.10 லட்சம் நான்கு நிலைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் யாரும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி பொறியாளர்கள்
(ராமநாதபுரம்) 9443183194,
(கீழக்கரை) 6380654852,
(பரமக்குடி) 9488883638,
(ராமேசுவரம்) 9487390981


ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Monday, August 19, 2019

விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம், சிறு / குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான வாழ்நாள் வரையிலான ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதுமை காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு வாழ்நாள் வரை ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களது வயதுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பொது இ-சேவை மையத்தில் 60-வது வயது வரை பணம் செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசும் சந்தாதாரர் கணக்கில் செலுத்தும்.




ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். சந்தாதாரர் இத்திட்டத்தை தொடர விருப்பமில்லையெனில் அவர் செலுத்திய தொகை 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கி வட்டி விகிதத்தில் வட்டியுடன் திரும்ப தரப்படும். திட்ட காலத்திற்கு பிறகு சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் அவர்களது இறுதிக்காலம் வரை கிடைக்கும்.

ஏற்கனவே பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அதே வங்கி கணக்கு வாயிலாக ஓய்வூதிய திட்டத் தொகையினை செலுத்தலாம். எனவே இத்திட்டத்தில் இணைய விரும்பும் சிறு, குறு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்தை உடனே அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ராமநாதபுர நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்தவர்கள் கைது!!

No comments :
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மர்ம கும்பல் வழிமறித்து பணம், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொள்வதுடன் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் மக்கள் இந்த பகுதிகளில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த வழிப்பறி சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தின்போது போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு துத்திவலசையை சேர்ந்த குருசரண் என்பவரிடம் மர்ம கும்பல் வழிப்பறி செய்தபோது அந்த கும்பலிடம் இருந்த செல்போனை குருசரண் தற்செயலாக பறித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கேணிக்கரை இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, குகனேஸ்வரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.


இதன்படி குருசரண் கொடுத்த செல்போன் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மர்ம நபர்கள் கடந்த சில நாட்களாக சென்றுவந்த பகுதிகளில் அந்த வழியாக சென்றவர்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்த பெருங்குளம் மேற்குத்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் இளையராஜா (வயது 24), அழகன் குளம் செட்டிமடை செல்வம் மகன் ரஞ்சித்(20) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் குருசரண் மற்றும் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் அப்துல்சுக்கூர் உள்ளிட்ட 3 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அரிவாளால் தாக்கியும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது இவர்கள் தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களின்போது உடனிருந்த ஆற்றங்கரை காலனியை சேர்ந்த முனீஸ் என்பவரையும் போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த கும்பல் பிடிபட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Wednesday, August 14, 2019

ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் மாற்றம்; புதிய கமிஷனராக திரு. விஸ்வநாதன் நியமனம்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் சுப்பையா நேற்று திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி பயிற்சி மைய அதிகாரி விஸ்வநாதன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை திருநகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் உசிலம்பட்டி நகராட்சி கமிஷனராக இருந்த போது கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் கமிஷனராக பதயேற்ற போது முதல்நிலை நகராட்சியாக இருந்த ராமநாதபுரம் நகராட்சி 60 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது.



தரம் உயர்த்தப்பட்ட ராமநாதபுரம் நகராட்சிக்கு தகுதியான நிலையில் புதிய கமிஷனர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.இந்நிலையில், நகராட்சி பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றாதது, பஸ்ஸ்டாண்டில் கடைகளை வாடகைக்கு விட்டது. சில கட்சியினர் நகராட்சி ஆணையர் சுப்பையாவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் நகராட்சி ஆணையர் சுப்பையா விமர்சிக்கப்பட்டார்.


இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுப்பையா இடம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பயிற்சி மைய அதிகாரி விஸ்வநாதன் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Monday, August 5, 2019

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தர்ணா; 40 பேர் கைது!!

No comments :
கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றின் அருகில் 2 டாஸ்மாக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்கெட்டிற்கு செல்லும் பெண்கள் அச்சத்தோடு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை.




இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் பத்மநாதன், தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர்கனி, கீழக்கரை நகர் செயலாளர் ஹபீல் ரகுமான் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து 40 பேரை போலீசார் கைது செய்து திருப்புல்லாணியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Sunday, August 4, 2019

ஜோரான விற்பனையில் போதை மிட்டாய்; பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி!!

No comments :
ராமநாதபுர மாவட்ட பரமக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பான்பராக், குட்கா, புகையிலை ஆகியவை பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை பதுக்கி வைத்து விற்கின்றனர். அதை வாங்க வருபவர்கள் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் நேரடியாக அதனை கேட்காமல் ரகசிய வார்த்தைகள் மூலம் சொல்லி அந்த போதை பாக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். இதை மிஞ்சும் வகையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பரமக்குடியில் வைகை ஆறு, எமனேசுவரம், காக்காதோப்பு, வேந்தோணி ரெயில்வே கேட் உள்பட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை வாங்கி பயன்படுத்துபவர்கள் போதை ஏறியதும் சாலையில் செல்பவர்களிடம் தகராறு செய்வதும், பெண்களை கேலி செய்வதும், பொது இடங்களில் நிர்வாணத்துடன் படுத்துக்கிடப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினரும் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.


இந்த நிலையில் தற்போது பரமக்குடி பகுதியில் விற்பனையாகி வரும் போதை மிட்டாய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சிறிய அளவு கஞ்சாவை வைத்து அதன் மேல் மிட்டாய் போல் உருண்டையாக வடிவமைத்து ஒரு மிட்டாய் ரூ.10 என பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைக்கும்பல் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்களும் அதை வெறும் மிட்டாய் என நினைத்து வாங்கி சாப்பிடுகின்றனராம். சிறிது நேரம் சென்றதும் அவர்களுக்கு போதை ஏறி ஒழுங்கினச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தினமும் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் தங்களது நண்பர்களுக்கும் அதை வாங்கிக்கொடுத்து பழக்கி விடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் பள்ளிகளில் பரவி வருகிறது. சில மாணவர்கள் மாலையிலும் இதை பயன்படுத்தி வருவதால் வீடுகளில் மயங்கி கிடக்கின்றனராம். பெற்றோர்கள் அலறியடித்து என்ன செய்வது என புரியாமல் அவர்களுடன் மன்றாடி விசாரித்தால் மிட்டாய் விவரத்தை கூறுகின்றனராம்.

இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்ற அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் படிக்கும் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் விவரத்தை கூறி பெற்றோர்கள் புலம்புகின்றனராம். இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களையும், வெளியூர்களில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு வருபவர்களையும் குறிவைத்து தான் அந்த போதை மிட்டாய் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் மாணவ சமுதாயத்தின் நிலை மோசமாகி விடும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும், புலம்புகின்றனர். எனவே மாவட்ட காவல்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

Saturday, August 3, 2019

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதியின்மை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகள் தவிக்கின்றனர்.


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் 800க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகளுக்கு உதவியாளர்களாக உறவினர்கள் உடன் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.


இதனை முறையாக பாராமரிக்காததால் பழுதடைந்து செயல்படாமல்உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினமும் வெளியில் உள்ள கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். வேறு வழியின்றி ஏழை மக்கள் பணம் கொடுத்து மினரல் வாட்டர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் வீரராகவ ராவ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மூடப்பட்ட கட்டண கழிப்பறை:

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும்வெளி நோயாளிகள், உள் நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், நோயாளிகளை பார்க்க வருவோர் பயன்படுத்துவதற்காக மருத்துவமனை வளாகத்தில் நவீன கட்டண கழிப்பறை செயல்பட்டு வந்தது. இது கடந்த ஆறு மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் அவசரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதில் பெண்களின் நிலை பரிதாபம்.


இயங்காத பேட்டரி கார்:


முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா தொகுதி வளர்ச்சி திட்ட நிதியில் பேட்டரி கார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நடக்க முடியாமல் வரும் நோயாளிகளை அவர்களுக்கு உரிய வார்டுகளின் வாசல் வரை இதில் கொண்டு விட்டனர். இந்த பேட்டரி காரும் பல மாதங்களாக பழுதாகி பயன்பாடில்லாத நிலையில் உள்ளது. இதனால் வயதான, நடக்க முடியாத நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் இது போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினமலர்

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ஏர்வாடி சந்தனக்கூடு விழா, கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது!!

No comments :
ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவின் 845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு துவங்கியது. ஜூலை 13 (சனி) அடிமரம் ஊன்றப்பட்டும், ஜூலை 14 மறுநாள் (ஞாயிறு) மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

மதநல்லிணக்க சந்தனக்கூடு கடந்த ஜூலை 26 (வெள்ளி) மாலை மவுலீதுடன் துவங்கி மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. ஜூலை 27 அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். 


நேற்று மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது. பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் கொடி வைக்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். 

கொடியிறக்கத்திற்கு பின் இரவு 7:00 மணிக்கு நெய்சோறு வழங்கப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ராமநாதபுரம் நகரில் போலி பீடி விற்பனை; 2 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் நகரில் போலீசார் சோதனையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 28போலி பீடி பண்டல்களை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.



ராமநாதபுரம் நகரில் பிரபல பீடி நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி பீடிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகியான ஓம்சக்தி நகரை சேர்ந்த அப்துல் நஜீத் போலீஸ்உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள கடையில் போலி பீடி கட்டுகள் இருப்பதாக புகார் அளித்தவரின் தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது 20 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஞானசேகரன் 42, என்பவரைபோலீசார் கைது செய்தனர். இதே போல் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியில் உள்ள கடையிலும் 8 போலி பீடி பண்டல்களை கைப்பற்றி கடை உரிமையாளர் அப்துல் பாசித் 38, என்பவரை கைது செய்தனர். 

இந்த போலி பீடி பண்டல்களை ராமநாதபுரத்திற்கு வந்த கேரளாவை சேர்ந்தவரிடம் இருந்து வாங்கியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அதனடிப்படையில் போலீசார் போலி பீடியை ராமநாதபுரத்தில் விற்பனை செய்யும் கேரள நபர்களை பிடிக்க விசாரணையை துவக்கியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;