முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 27, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 3000 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பண்ணைக்குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினை அணுகி பயனடையலாம்.


மேலும் மழையளவு குறைவின் காரணமாக வறட்சி ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இதற்கு தீர்வாக வயல் வெளிகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம். இதனால் பெய்யும் மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலம் உரிய நேரத்தில் பயிர்களுக்கு உயிர்நீர் அளித்து, நல்ல மகசூல் பெறலாம். அதே வேளையில் பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளர்த்து அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம்.


அத்துடன் மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது மாவட்ட கருவூல கட்டடம் முதல் தளத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் அல்லது பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அலுவலகம் ஆகியவற்றில் தங்களது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, June 26, 2018

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசுவதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்துதல், பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கிய முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


குடும்பத்தில் தாய் ஒரே ஒரு பெண் குழந்தையுடன் கருத்தடை செய்துள்ளார் எனில் அப்பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்துள்ளார் எனில் 2 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டு அக்குழந்தைகளின் 18 வயது முடிவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த பின் முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கருத்தடை செய்து கொள்ளும் தாயின் வயது 35-க்குள் அல்லது இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, குழந்தைகளின் பிறப்புச் சான்று, தாய், தந்தை வயதுச் சான்று அல்லது கல்விச் சான்று, தாய் கருத்தடைச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, 10 ஆண்டு வசிப்பிடச் சான்று, குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பங்களை அவர்கள் சார்ந்துள்ள வட்டார, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விரிவாக்க அலுவலர்களிடம் தரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்வி நிறுவன கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்க செப்.,13 கடைசி நாள்!!

No comments :

அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு செப்.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 1.1.2011க்கு முன் செயல்பட்டு வரும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற வேண்டும். வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், ஜூன் 14ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய ஒருமுறை கட்டணம், சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், அனுசரிக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் விதிகள், விண்ணப்பிக்க அவகாசம் போன்ற விவரங்கள் அரசாணையில் தெளிவாக உள்ளன. www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் அரசாணை நகல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் வழியாக விண்ணப்பித்து, உரிய கட்டணத்தையும் செலுத்தலாம். செப்.,13 விண்ணப்பிக்க கடைசி நாள்.

இதனை பயன்படுத்த வேண்டும், என சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதே போல், கட்டட வடிவமைப்பாளர், கட்டமைப்பு பொறியாளர் மற்றும் கட்டட உரிமம் பெற்ற வரைவாளர்கள், பணி முடிவு சான்று வழங்கும் குழுவில் உறுப்பினராக ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 24, 2018

ராமநாதபுரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்: 268 பேருக்கு பணி நியமன ஆணை!!

No comments :

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்களுக்கு 258 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் இம்முகாமை நடத்தின.



இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து பல்வேறு நிறுவனங்களின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 268 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், தொழிற்கல்வி மற்றும் பட்டயக்கல்வி முடித்தவர்கள் என பலரையும் 44 வேலையளிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்தன.

முகாமிற்கு வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் மு.கருணாகரன், முகம்மது சதக் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாத்துரை வரவேற்றார். நிறைவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, June 21, 2018

தையல் இயந்திரம் பெற விரும்பும் பயனாளிகள் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விரும்பும் பயனாளிகள் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.



ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, தையல் பயிற்சி சான்று (6மாத கால பயிற்சி), வயதுச்சான்று (20 முதல் 40 வயது வரை)கல்விச்சான்று, பிறப்புச்சான்று, சாதிச்சான்று. மனுதாரின் கலர் புகைப்படம்-2, விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர். ஆதரவற்றோர் மற்றும் - மாற்றுத்திறனாளி பெண் போன்றவர்களாக இருந்தால் அதற்கான சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகியனவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
ராமநாதபுரம்

என்ற முகவரிக்கு வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவ நிலங்களை குத்தகைக்கு வழங்கலாம்!!

No comments :


சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவத் தேவையான இடங்களை வைத்திருப்போர் அதனை குத்தகைக்கு வழங்க விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 500 மெகாவாட் அளவுக்கு ஒருங்கிணைந்த சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பூங்காக்கள் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். அதற்கும் குறைவான திறன் கொண்ட பூங்காக்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும், சிறு, குறு விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுப் பெண்கள், ஊராட்சிகள், விவசாய சங்கங்கள் ஆகியன இதற்குத் தேவையான நிலங்களைக் குத்தகைக்கு வழங்கலாம்.



இவர்கள் தனியாகவோ அல்லது இணைந்தோ நிலத்தை வழங்குவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கிட வேண்டும். சூரிய எரிசக்தி பூங்கா அமைக்க தங்கள் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நிலையான ஆண்டு வருவாய் பெற முடியும்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு சூரிய எரிசக்தி பூங்கா அபிவிருத்தியாளர்களிடம் தங்களது பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பூங்காக்கள் அமைவதன் மூலம் அந்தந்த வட்டாரங்களில் நிலவும் வறுமையை ஒழிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிக்க முடியும். திறன் உள்ள மற்றும் திறன் இல்லாதவர்களுக்கும் தற்காலிக மற்றும் நிரந்தர  வேலைவாய்ப்புகளை உருவாக்கிடலாம். தனியார் மற்றும் பொது பொருளாதார முதலீடுகளையும் ஈர்க்கலாம்.
அமையும் இடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்புகளான சாலைவசதி,சுகாதாரம், மின்சார வசதி, தண்ணீர்வசதி மேம்பாடு, ஆற்றல் பாதுகாப்பு விரிவாக்கம் என்ற சமூக வளர்ச்சியையும் எட்ட முடியும்.

இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் இது குறித்த விருப்பக் கருத்துக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவிப் பொறியாளர் தொலைபேசி எண் 7708064717 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, June 20, 2018

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.72.27 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல!!

No comments :



ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 72.27 லட்சம் ரொக்கம், 135 கிராம் தங்கம் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றுள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 



இதில்,  ரூ.72 லட்சத்து, 27 ஆயிரத்து 307 ரொக்கம், 135 கிராம் தங்கம், 4.150 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், சிவகங்கை இணை ஆணையர் ஜெகநாதன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கோயில் பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியுடைய பெண்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 21) விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் தமிழகத்தில் வீரதீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2018 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. 



இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது சுய விவர அறிக்கை, புகைப்படம், பத்திரிகை செய்திகள், சான்றிதழ்கள் மற்றும் வீரதீர சாதனைகள் பற்றிய விவரங்களை மூன்று ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து,

சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம்,
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், ராமநாதபுரம்

என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வரும் 21 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மேலும், விவரங்களுக்கு 04567-230238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மணிகண்டன் அனைத்து துறை அதிகாரிகளுடன் பங்கேற்ற ஆய்வுகூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் நிவேற்றப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரிக்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் பிரதமரிடம் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்கவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதி மக்களின் தேவை கருதி பேய்கரும்பு பகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக 5 ஏக்கர் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கல்லூரி தொடங்கப்படும்.
ராமநாதபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.

அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை ரூ.25 கோடியில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது. ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி கோவிலை சுற்றிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் நகர் போக்குவரத்து பணிமனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அந்த இடம் புதிய பஸ்நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும். திருவாடானையில் புதிய பஸ் பணிமனை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் புதிய போக்குவரத்து மண்டலமாக தரம் உயரும்.

இ–சேவை மையங்களின் அவசியம் கருதி முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் 600 இ–சேவை மையங்கள் தனியாருக்கு புதிதாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட வளர்ச்சி கருதியும், சுற்றுலா பயணிகள் வருகை கருதியும் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. உதான் திட்டத்தின்கீழ் இந்த விமான நிலைய ஓடுதளம் 8 ஆயிரம் அடி நீளமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 17, 2018

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அதி நவீன சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள்!!

No comments :
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில்  பொது சுகாதாரத் துறையின் சார்பாக,  புதியதாக அதி நவீன வசதியுடன்கூடிய  சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தாய்ப்பால் சேமிப்பு வங்கி ஆகியவைகள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மருத்துமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவா் நடராஜன் தலைமை வகித்தார். 

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் முன்னிலை வகித்து சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தாய்ப்பால் சேமிப்பு வங்கி ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநா்  (நலப்பணிகள்) (பொ)  சகாயஸ்டீபன்ராஜ், மருத்துவமனை கண்கானிப்பாளா் ஜவகா்லால், நிலைய மருத்துவா் ஞானக்குமா் உட்பட அரசு மருத்துவா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தது:
  
தமிழக அரசு பொதுமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள் நவீன முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அதனடிப்படையில்  நேற்று இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருந்து வாணிபக் கழகம் சார்பில் ரூ1.3 கோடி செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென்று புதியதாக சி.டி ஸ்கேன் மையம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் சி.டி ஸ்கேன் நான்கு அடுக்கு முறையில் உள்ளது.

மருத்துவக்கல்லுரிக்கு இணையான மருத்துவம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலும்  இந்த  சி.டி.ஸ்கேன் 16 அடுக்கு முறையில் உள்ளது. இதன் மூலம் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளில் உள்ள தமனிகளில் ஆஞ்சியோகிராம் எடுக்க முடியும்.

மேலும் இது வேகமாகவும் சிறந்த தெளிவான படங்களையும் தரவல்லது. மேலும் ரூ.50 இலட்சம் செலவில் 5 புதிய செயற்கை சுவாச கருவிகள் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர பிhpவு முறை சிறப்பாக செயல்படுவதற்காக நிறுவப்பட்டுள்ளன.

இதன்மூலம் இயற்கையான சுவாசம் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு அவா;களை காப்பாற்ற முடியும். மேலும் இதன்மூலம் உயா; மருத்துவ சிகிச்சைக்காக பிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதுதவிர இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கா்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ காலத்தில் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் சிசுக்களுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலை ஏற்பட்டால் அந்த சிசுக்களுக்கு தாய்ப்பால் தருவதற்காக கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி என ரூ.6 இலட்சம் மதிப்பில் தமிழக அரசால் வழங்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வத் தொண்டு முறையில் தாய்ப்பால் பெறப்பட்டு அதன்பின் அது சுத்திகரிக்கப்பட்டு உறை நிலையில் 6 மாதம் வரை சேமித்து வைக்கப்படுகிறது. சேமித்து வைக்கப்பட்ட பால் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

புட்டிப்பாலைக் காட்டிலும் தாய்ப்பாலில் உள்ள நன்மைகள் இதன்மூலம் விளக்கப்பட்டு வரும் இந்த புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

இது தவிர இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என  அமைச்சா் மணிகண்டன் தெரிவத்தார்.


செய்தி; தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை, சிறப்பு தொழுகை!!

No comments :
ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ராமநாதபுரம் மதுரை ரோட்டில், ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள ஈத்கா மைதானத்தில், காலை 9:00 மணிக்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பின் ரம்ஜான் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
பின், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதே போல், நகரில் சில இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை, சாத்தான்குளம், பெருங்குளம், கீழக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

கீழக்கரை: கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல், கடற்கரைப்பள்ளி, மின்ஹாஜியார் பள்ளி, ஜும்மா பள்ளி, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு புதுப்பள்ளி,ஓடைக்கரைப்பள்ளி, உள்ளிட்ட இடங்களில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.திடல் தொழுகை காலை 7:30 முதல் 10:30 வரை நடந்தது.


பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில்நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிக்கல்: சிக்கல் ஜாமியா மஸ்ஜித் பள்ளியில்மவுலவிமுகம்மது சம்சு மீரான் தலைமையில் சிறப்பு தொழுகையில்பங்கேற்றனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, உலக நன்மைக்காகவும், சிக்கல் பள்ளிவாசலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் வரை தேசியக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம்: ரம்ஜானை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்ற முஸ்லிம் ஜமாத்தார்கள் பெரிய கண்மாய் பாலம் அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, June 13, 2018

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்!!

No comments :
குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையினை முழுவதுமாக அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி நாள் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.



அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த பேரணி அரண்மனை சாலையில் தொடங்கி சாலைத்தெரு வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குனர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, June 10, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 113 இடங்களில் உப்பு நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் 75 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் உட்பட 557 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியது: பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய 355 புதிய குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 113 இடங்களில் உப்புநீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து புகார் வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ஜெகஜோதி உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல்!!

No comments :
ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கழிவு குப்பைக்கு தொடர்ந்து தினமும் தீ வைப்பதால் நோயாளிகள் மூச்சு திணறலில் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக 500 க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பிணவறைக்கு பின் புறம் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தி வந்தனர்.

சமீப காலமாக இந்த குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் வருவதில்லை. இதன் காரணமாக தினசரி மருந்து கழிவு, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பிணவறை பின் புறம் சுகாதார பணியாளர்கள் கொட்டுகின்றனர்.



இந்த குப்பை தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு அருகிலேயே காச நோய் பிரிவு வார்டு, மகப்பேறு சிகிச்சை வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு வார்டுகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், குப்பை எரிக்கப்படுவதால் வரும் புகையை சுவாசிக்கின்றனர். காச நோயாளிகள் இருமலால் கடும் அவதிப்பட்டு, மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.

திறந்த வெளியில் குப்பை எரிக்கப்படுவதால், அப்பகுதியில் நடமாடும் மக்கள் கண் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதால் வரும் புகையை அங்குள்ள டாக்டர்கள், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்திற்குள் குப்பைக்கு தீவைப்பதை நிறுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாப்பாக குப்பைகளை அகற்றம் செய்ய முன் வர வேண்டும்.

செய்தி; தினமலர்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, June 4, 2018

ஜூன் 5 முதல் 7 வரை நில ஆவணங்களில் கணினி திருத்த சிறப்பு முகாம்: கலெக்டர்!!

No comments :

நில ஆவணங்களில் கணினி திருத்தம் செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு சிறப்பு முகாம் இம்மாதம் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்டங்களில் கடந்த 15.5.2018 முதல் 24.5.2018 வரையிலான பணி நாள்களில் துணை ஆட்சியர் நிலை மற்றும் அதற்கு கூடுதலான நிலை அலுவலர்கள் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை முகாம் நடந்தது. இம்முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இதில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக அதிக அளவிலான மனுக்கள் வரப்பெற்றது.



திருவாடானையில் நடந்த வருவாய் தீர்வாய் தணிக்கை முகாமில் பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக கடந்த 31.5.2018 வரை கோரிக்கை மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு வழங்கப்பட்டு அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே திருவாடானை வட்டம் நீங்கலாக மீதமுள்ள 7 வருவாய் வட்டங்களிலும் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நில ஆவணம் 10{1}சிட்டாவில் கணினி திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையிலும், முதுகுளத்தூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.கமுதியில் பரமக்குடி சார் ஆட்சியர் பா.விஷ் ணு சந்திரனும் கீழக்கரையில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சுஜிபிரமிளாவும்,கடலாடியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மு.மதியழகனும் சிறப்பு | முகாமுக்கு தலைமை வகிக்கின்றனர். பரமக்குடிக்கு சமூகப் பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் காளிமுத்துவும்,ராமேசுவரத்தில் நில அளவைப்பிரிவ உதவி இயக்குநர் சி.ஜெயக்குமார் தலைமையிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் வருவாய் கோட்டங்கள் வாரியாக பரமக்குடி சார் ஆட்சியர் மற்றும் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஆகியோர் மூலமாக உடனடியாக தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் இம்முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பட்டா ஆவணங்களில் கணினி திருத்தம் தொடர்பாக உடனடி தீர்வு பெற்று பயனடையுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)