முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 26, 2019

ராமநாதபுரம் அருகே கைத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது!!

No comments :
தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ளன. எனவே ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டுள்ளார். எனவே சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



அவர் ராமேசுவரத்தில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மீது திருட்டு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், அவருக்கும் பிரப்பன்வலசை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளி (வயது 42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவியாக அவர்கள் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வள்ளியின் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் வள்ளி இருந்தார். அங்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்த போது, அதில் கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அங்கு உள்ளதா? என்பதை அறிய மேலும் தீவிர சோதனை நடந்தது.

பின்னர் துப்பாக்கி, 32 தோட்டாக்களை பறிமுதல் செய்ததுடன் வள்ளியை உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பின்னர் மறுவிற்பனை செய்யப்பட்டது என்றும், குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். வள்ளி கைது செய்யப்பட்டார். பூமிநாதன், வள்ளிக்கு துப்பாக்கி கிடைத்தது இதுதான் முதல்முறையா? அவர்கள் ஏற்கனவே பலமுறை துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கள்ளத்தனமாக விற்றுள்ளார்களா, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கடத்தி உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமத்தில் பெண்ணின் வீட்டில் துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;