முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 28, 2021

ராமேசுவரத்தில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியை முதல்வர் திறந்துவைத்தார்!!

No comments :

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 

 ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.31 கோடியில் பேருந்து நிலையம் எதிரே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் யாத்ரி நிவாஸ் என்ற தங்கும் விடுதி கட்டும் பணி நிறைவடைந்தது.

 


இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் மொத்தம் 136 அறைகள் உள்ளன. இதுதவிர 100-க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தும் இடமும், 10-க்கும் மேற்பட்ட கடையுடன் வணிக வளாக வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் யாத்ரி நிவாஸ் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, February 11, 2021

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு ஆகஸ்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும், என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

 

 

சுகாதாரத்துறையில் நடைபெற்று வரும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் கட்டமைப்பு, சிகிச்சை பிரிவுகளில் வசதிகள், தேவைகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷில்பா, அஜய் யாதவ், எஸ்.நடராஜன், சிவஞானம், டீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


 

இவர்களில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலரான எஸ்.நடராஜன் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று அவர் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது: கட்டடப்பணிகள் 48 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

 

 

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.பணிகள் நிலைமை குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வேன். மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, February 7, 2021

மார்ச் மாதம் முதல் மதுரை - ராமேஸ்வரம் பயணிகல் ரயில்!!

No comments :

மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் இரு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.

 


மதுரையிலிருந்து பயணிகள் ரயில் தினமும் காலை 5.25 மணிக்கு ராமேசுவரம் நோக்கி புறப்படும். அதேநேரத்தில் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 2020 ஏப்ரல் முதல் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

தற்போது, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கும், திருச்சிக்கும் மட்டுமே தினமும் இரு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன.

 

இது குறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் தெரிவித்தது:

 

மார்ச் முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், மாலையில் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக, தண்டவாளம் கண்காணிப்பு, ஊழியர்கள் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.

 

செய்தி; தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழக்கரையில் மாமியாரை கொன்றதாக மருமகன் கைது!!

No comments :


கீழக்கரையில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றதாக மருமகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாய்கரவாடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி பொன்னம்மாள் (70). இவர்களது மகள் ராமலட்சுமியை, கீழக்கரை லட்சுமிபுரம் இடிந்தகல்புதூரைச் சேர்ந்த மீனவர் முருகன் (39) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

 


இந்நிலையில், முருகன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தனது மகளுக்கு துணையாக இரவில் அவரது வீட்டில் பொன்னம்மாள் தூங்கிவந்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில், முருகன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அதை தடுக்கச் சென்ற பொன்னம்மாளை கத்தியால் முருகன் குத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னம்மாள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

 

இது குறித்து ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி டாக்டரிடம் ரூ.1.29 லட்சம் மோசடி!!

No comments :

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் ரூ.11 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் ஸ்டேபனோ ஜோனதனிடம் 34, ரூ.1.29 லட்சத்தை ஏமாற்றிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


ராமநாதபுரம் பட்டணம்காத்தானைச் சேர்ந்த இவர் தாமரைக்குளம் ஆரம்ப சுகாதாரநிலையத் தில் பணிபுரிகிறார். இவரது அலைபேசிக்கு ஜன., 27 ல் ஒரு அழைப்பு வந்தது. அதில் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் ரூ. 11 லட்சம் பரிசு வென்றுள்ளதாக கூறினர். இது சம்பந்தமாக 09903617242 என்ற எண்ணில் பேசுமாறு கூறியுள்ளனர்.



அந்த எண்ணில் பேசியபோது வரி மற்றும் பரிமாற்ற கட்டணங்களாக ரூ.1,29,300 செலுத்த கூறினர். அவர்கள் கூறியபடி பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியும் பரிசுத்தொகை வரவில்லை.தனக்கு பரிசுதொகை வேண்டாம் பணத்தை திரும்பத்தர டாக்டர் பேசியுள்ளார். அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. பின்னர் அலைபேசி சுவிச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. டாக்டரின் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.

 செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 2, 2021

முகநூலில் அவதூறு பதிவிட்ட வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் நாடார் தெருவை சேர்ந்த மேலமான்குண்டு பாண்டி மகன் வினோத் (31) என்பவரும் 29 வயது பெண்ணும் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள திருமண தகவல் மையத்தில் வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் பற்றி வினோத்  தவறான தகவலை தெரிவித்தாராம். இதுபற்றி அறிந்த அந்த பெண் மற்றும் அவரின் தாய் ஆகியோர் வினோத்திடம் சென்று கேட்டுள்ளனர். அவர்களை வினோத் செல்போனில் படம் எடுத்துள்ளார். 




இதனை கண்ட அவர்கள் ஏன் படம் எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அவர் பேசமால் இருந்ததால் கண்டித்துவிட்டு தாயும் மகளும் வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். இந்தநிலையில் இருவரின் படத்தினையும் முகநூலில் பதிவு செய்த வினோத் செல்போன் பறிக்கும் பெண்கள் என பதிவு செய்துவிட்டாராம். 



இதுகுறித்து வினோத்திடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.