முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 30, 2016

இறுதிச்சுற்று – தமிழ், சாலா கடூஸ் – ஹிந்தி, திரை விமர்சனம்!!

No comments :

தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று!
குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக்  கோச்சாக இருக்கிறார் மாதவன். 

நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷ‌ன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே.

சென்னையில் ஜுனியர் கோச்சாராக இருக்கும் நாசரால் கைகாட்டப்படுகிற மும்தாஜ் சொர்க்காரை விட அவள் தங்கை ரித்தீகா சிங்கிடம்,  தன்னிடம் இருக்கும் வேகமும், வெறியும், பாக்ஸிங் ஆர்வமும் இருப்பதைக் காண்கிறார் மாதவன். அக்காவை போல் பாக்சிங் ஆர்வத்தினால் அல்லாமல் மாதவன் தரச் சம்மதித்த  பணத்துக்காக பயிற்சிக்கு செல்கிறார் ரித்திகா. 

கோபமும் திமிரும் தன்னைவிட இரண்டு மடங்கு இருக்கும் ரித்திகாவை கட்டுக்குள் கொண்டு வந்து அவருக்கு பயிற்சி அளிக்கிறார் மாதவன். ஆனால், அவரை சாம்பியன் பாக்ஸர் ஆக்கும் லட்சியத்துக்கு ரித்திகாவின் முரட்டுப் பிடிவாதம், அவள் அக்காவின் பொறாமை,  அஸோசியேஷன் அரசியல் எனப் பல தடைக் கற்கள்.  இதையெல்லாம் மீறி அவர் வென்றாரா இல்லையா என்பதே இறுதிசுற்று.

கலைந்த கேசம், இரும்பு தேகம், முரட்டு கோபம்... வாவ்... இது மேடி வெர்ஷன் 2.0. எள்ளலும் முரட்டுப் பிடிவாதமும் கொண்ட கோச்சாக. திடமான, தெளிவான, திமிரான வீரனாக அட்டகாசம். ரிங்கில் சண்டை நடக்கும்போது கீழேயிருந்து வெறியுடன் ஊக்கப்படுத்துவது, நடப்பதையெல்லாம் மிக அமைதியாகப் பார்த்துக்கொண்டே மூர்க்க ரியாக்ஷன் கொடுப்பது, ரித்திகாவின் வேகத்தைக் கண்டு அவர் செய்யும் சேட்டைகளை மிகஅலட்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அவருடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காகப் போராடுவது என 'சக்தே' ஷாருக்கையே சமயங்களில் லெஃப்டில் அடித்து எகிறுகிறார். படம் முழுக்க அவ்வளவு எகிறிவிட்டு, க்ளைமாக்சில் சட்டென பணியும்போது வெளிப்படும் ஒரு இயலாமை... க்ளாஸிக். அப்போதும் '***** நீ அவ்ளோதான்டா' என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எகிறுவது..... ஆவ்ஸம்... ஹேண்ட்ஸம் மேடி!



பிரியாணி, தனுஷ் படம், அம்மாவுக்கு புது சேலை என‌ இவைகளில் திருப்திய‌டைகிற பெண்ணாக அறிமுகமாகும் ரித்திகா, க்ளைமாக்சில் சர்வதேச சாம்பியனாக பிரமாண்ட பிரமிப்பூட்டுவது... மெஸ்மரிச மேஜிக்! 'நீ கொடுத்த காசுக்கு ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருச்சு.. அவ்ளோதான்' என மாதவனை தெறிக்க விடுவதும், மாதவனை வெறுப்பேற்ற போட்டியில் வேண்டுமென்றே ஃபவுல் செய்துவிட்டு ரிங் கார்னரில் கெத்தாக நிற்பதாகட்டும், 'முதல் தடவை காதல் சொன்ன எனக்கே அந்தர் ஆகலை. உனக்கு என்ன?' என சேலையில் செமத்தி கெத்து காட்டுவதும், கடைசிப் போட்டி முடிந்ததும் குரங்குக் குட்டியாக மாதவன் இடுப்பில் தாவிக் கொள்வதும்... செல்லம் பின்னிட்டடா..! ஒவ்வொரு அரை மணி நேரங்களிலும் தன் கேரக்டரின் வெயிட் ஏற்றிக் கொண்டே செல்லும் ரித்திகா, இறுதியில் பன்ச் வெடிக்கும்போது... அதகளம். லவ் யூ ஆங்ரி ஏஞ்சல்! 

ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என‌ வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங். 

இயக்குநர் சுதா கொங்க்ரா மணிரத்னம் பட்டறையிலிருந்து வந்தவர் என்பத‌ பளிச் விசுவல்களில் நிரூபிக்கிறார். 2011 செம்ப்டம்பரில் மாதவனிடம் சொல்லபட்ட இந்த கதைக்காக ஷீட்டிங், போஸ்ட் புரொடக்ஷ‌ன் போக இரண்டரை ஆண்டுகள் பெண்கள் குத்துசண்டை குறித்த விபரங்களுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுற்றி இருக்கிறார் என்பது படத்தின் டிடெய்லிங்கில் தெரிகிறது. க்யூடோஸ் சுதா!

ஒரே சமயத்தில் இந்தி, தமிழ் பேசும் சினிமாவில் அந்நியத்தன்மை வந்துவிடக் கூடாது, சென்னை குப்பத்துப் பெண் எப்படி இவ்வளவு பளிச்சென இருப்பார்.. இவற்றை சமாளிக்க  குப்பத்தில் சேட்டுப் பெண் என கோர்த்திருப்பது... குட்! 

ச‌ந்தோஷ் நாராயணனின் இசை விவேக் மற்றும் முத்தழிழின் பாடல் வரிகளை அழகாக படத்துடன் பொருத்துகிறது. கதைக்கு பொருந்தி அமைந்துள்ளது. 'வா மச்சானே...' பாடல் மெட்டு மட்டும் எங்கேயோ கேட்ட ரகம். 'பேன்ட் கழட்டிட்டு ஆள் செலக்ட் பண்ற ஆள் இல்லை நான்', 'அவ உன்ன மாதிரி இல்ல... உன்னையே தூக்கிச் சாப்டுருவா!', 
'
ஆயிரம் பேருக்கு என் அப்பன் வயசு. எல்லார்கிட்டயுமா லவ் யூ சொல்லிட்டு இருக்கேன்' பட்டாசு வெடிக்கின்றன அருண் மாதேஸ்வரனின் வசனங்கள். 

ஐந்தில் நான்கு பாடல்க‌ள் இடைவேளைக்கு முன்பே முடிந்து விட ஒரே ஒரு  பாடல் மட்டும் இடைவேளைக்கு பின். அதுமட்டுமின்றி இடைவேளைக்குப் பின் பட‌ம் சீரீயஸாகவே செல்வதால் முதல் பாதியிலிருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை.  மற்றும் எளிதில் கணிக்கக்கூடிய திரைக்கதை. எப்போதும் விளையாட்டு பின்னணி சினிமாவில் எதிர்பார்க்கக் கூடிய முடிவுதான். ஆனால், அதிலும் செங்கிஸ்கான் ட்விஸ்ட் வைத்து, ரித்திகா எதிராளியை வீழ்த்துவாரா என்று எதிர்பார்க்க வைத்தது... சூப்பர்ப்!

பெண்கள் குத்துச்சண்டை உல‌கில் நடக்கும் அரசியலை, அதை முறியடிக்க பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரஸ்யமாக திரைக்கதையின் பிணைத்து, அதை வெற்றிகரமாக படமாக்கியதற்காக இயக்குனர் சுதாவின் கைகளை உயர்த்தி "அண்ட்,   வின்னர் ஈஸ்...." என‌ அறிவிக்கலாம்!
டெயில்பீஸ்: 'அனைத்தும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல' எனப் போடாமல், 'உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என்று போட்ட இயக்குனரின் 'பெண்மை'க்கு சபாஷ்!

விகடன் விமர்சனம்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும் நாளையும், பிப்ரவரி 6 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது

No comments :
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கவும், நீக்கவும் நாளையும், பிப்ரவரி 6 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016ன் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள மற்றும் புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும், இடம் மாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். அதற்கு ஏதுவாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நாளை மற்றும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஆகிய வார இறுதி நாட்களில் இரண்டு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் தொடர்புடைய பாகத்தின் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



வாக்காளர் பட்டியல்களை பிழையின்றி தயாரிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கி இருக்கிறோம். போலி வாக்காளர்கள் இல்லாத பட்டியலை வெளியிட உள்ளோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். கடந்த தேர்தலில் 75 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போது 11 ஆயிரத்து 800 மின்னணு வாக்கு எந்திரங்கள் வந்து உள்ளன. பெல் நிறுவன பொறியாளர்கள் அந்த எந்திரங்களை இன்று முதல் சேலத்தில் சரிபார்க்க உள்ளனர். ஏற்கனவே வந்துள்ள மின்னணு எந்திரங்கள் போக பீகாரில் இருந்து 50 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் வர உள்ளன. அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் வந்துவிடும்.

வாக்காளர்கள் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தால் அவற்றை ஒரு இடத்தில் நீக்க மனு கொடுக்கவேண்டும். சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

செய்தி: ஒண் இண்டியா



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடி பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது!!

No comments :
 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வெடி பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கார்மேகம் (40). இவர், வெடிபொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாழக்கிழமை போலீஸார் கார்மேகம் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.




 அங்கு அனுமதியின்றி 25 ஜெலட்டின் குச்சிகள், 49 டெட்டனேட்டர்கள் ஆகிய வெடி பொருள்களை கார்மேகம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, வெடிபொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், கார்மேகத்தை கைது செய்தனர். மேலும் வெடிபொருள் வைத்திருந்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, January 28, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இசேவை மையங்களுக்கு சென்று மின்கட்டணம் செலுத்தலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இசேவை மையங்களுக்கு சென்று மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை  ஆகிய 8 தாசில்தார் அலுவலகங்களில் பொது இசேவை மையங்களை அமைத்துள்ளது.  இந்த மையங்கள் ஞாயிறு, இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.  பொதுமக்கள் இந்த மையங்களுக்கு சென்று வருமானம், ஜாதி சான்றிதல், திருமண நிதியுதவி, பாஸ்போர்ட் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெறலாம். 

தற்போது இசேவை மையத்தில் புதிதாக மின்கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கட்ட முடியும். 
மின்கட்டண தொகை ரூ 1 முதல் ஆயிரம் வரை இருந்தால் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும். 
மேலும் ரூ ஆயிரத்து ஒன்று முதல் 3ஆயிரம் வரை கட்டணமாக ரூ. 20 ம்
ரூ 3 ஆயிரத்து ஒன்று முதல் 5 ஆயிரம் வரை  கட்டணமாக ரூ. 30 ம்
ரூ 5 ஆயிரத்து ஒன்று முதல் 10 ஆயிரம் வரை கட்டணமாக ரூ. 40 ம்
ரூ 10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் கட்டணமாக ரூ. 50 ம் செலுத்த வேண்டும்.மின்கட்டணத்துடன் சேர்த்து சேவை கட்டணத்தை  பொதுமக்கள் கட்ட வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி!!

No comments :
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 365 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 17 பரிசுகளை வென்று முதலிடத்தை பிடித்தனர். 


கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 7 பரிசுகளை வென்று 2 வது இடத்தையும், முகைதீனியா மெட்ரிக் பள்ளி மற்றும் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தலா 5 பரிசுகளை பெற்று 3 வது இடத்தையும் பிடித்தனர். 

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர் டாக்டர் சம்சுதீன் ஆலிம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் கலந்து கொண்டார். முன்னதாக இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகீம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியை நவ்சாத் பேகம், நிர்வாக அலுவலர் மலைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டி நடைபெற உள்ளது என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது:

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 14,17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். ஆந்திரா- 34, ஜம்மு, காஷ்மீர்- 24, மத்தியப் பிரதேசம்- 36, மகாராஷ்டிரம்- 36, தமிழ்நாடு- 36, சத்தீஷ்கர்- 24, குஜராத்- 23, ஹரியானா- 12, தெலுங்கானா- 10, பாண்டிச்சேரி- 10 மற்றும் வித்தியாபாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் 24 பேர் உள்பட 259 பேர் பங்கேற்க  உள்ளனர்.

தமிழக அணி வீரர்களுக்கு ஜன.21 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.


போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு தலைமையில் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். என அவர் தெரிவித்தார்.

செய்தி : தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 25, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2ஏ தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன, 12, 712 பேர் தேர்வு எழுதினர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ராமேசுவரத்தில் தேர்வு நடைபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களை ஆட்சியர் எஸ்.நடராஜன் ஆய்வு செய்தார். பின்னர் ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.


அதன்பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2ஏ தேர்வு 48 மையங்களில் நடைபெறுகிறது.
15, 812 பேர் விண்ணப்பித்து 12, 712 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3100 பேர் வரவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை விரிவுபடுத்தவும், ராமேசுவரம் மருத்துமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமேசுவரம் பகுதியை பசுமை ராமேசுவரமாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கை போல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பசுமை திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, January 24, 2016

ISRO வேலை வாய்ப்புகள்!!

No comments :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்(இஸ்ரோ) வேலை பார்ப்பதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இஸ்ரோவில் ஜூனியர் பர்சனல் அசிஸ்டண்ட், ஸ்டெனோகிராபர், அசிஸ்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 185 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவுப்பு செய்யப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் இஸ்ரோ பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தகுந்த ஆவணங்களுடன் விம்ணப்பங்களை அஞ்சல் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பவேண்டும்.



இஸ்ரோவானது, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு வருகிறது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இஸ்ரோ உள்ளது. அறிவியல் ஆராய்ச்சி, கிரக ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1962-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முயற்சியால் அமைக்கப்பட்டது இஸ்ரோ.

கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோவின் இணையதளமான www.isro.gov.in -ல் தொடர்புகொள்ளலாம்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ரயில் ஏறும் போது தவறி விழுந்து முதியவர் இறப்பு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது !!

No comments :
ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தது.  அப்போது முதியவர் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அவர் மீது ரயில் ஏறிச் சென்றது.  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 




ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் ரயில் நிலையம் சென்று முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  இறந்தவர் குறித்து தகவல் தெரியவில்லை.  மஞ்சள் கலரில் அரைக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார். 

இவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, January 23, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது , 102 பவுன் தங்க நகைகள் மீட்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பகல் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 102 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டில் பல்வேறு இடங்களில் வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். இதற்காக கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுவரி தலைமையில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன், கீழக்கரை சப்இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், தங்கச்சாமி மற்றும் போலீசாரைக்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ரோந்து சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கீழக்கரை பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்குமுன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி அருகே உள்ள மாயாகுளம் பகுதியை சேர்ந்த சுல்தான் இப்ராகிம் என்பவருடைய மகன் முகம்மது தஸ்லீம் (வயது 34), கமாலுதீன் மகன் ஷாஜகான்(24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.



இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் 2 பேரும் திருச்சி அண்ணாமலை நகர் முகம்மது குட்டி என்பவருடைய மகன் இஸ்மாயில்(32), மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் சரவணன்(42) ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முகம்மது தஸ்லீம், ஷாஜகான் 2 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இஸ்மாயில், சரவணன் ஆகியோரை கீழக்கரை இந்து பஜார் பகுதியில் வைத்து நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் 9 திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு 102 பவுன் நகைகள், 3 கிராம் வெள்ளி பொருட்களை திருடியதுடன், ஒரு மோட்டார் சைக்கிள், லேப்டாப் போன்றவற்றையும் திருடி உள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின்பேரில் 102 பவுன் நகை மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி மீட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்லாமல் இஸ்மாயில் தலைமையில் 2 பேராக மட்டும் சென்று திருடி வந்துள்ளனர். பெரும்பாலும் பூட்டி உள்ள வீடுகளை நோட்டமிட்டு பகல் நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி வெளியில் மோட்டார் சைக்கிளில் ஒருவரை நிறுத்தி வைத்துவிட்டு உளி போன்ற கூர்மையான ஆயுதத்தால் இஸ்மாயில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடி வந்துள்ளார். திருச்சியை சேர்ந்த இஸ்மாயில், திண்டுக்கல் சிறையில் வைத்து சரவணனுடன் ஏற்பட்ட பழக்கத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இஸ்மாயில் ஏர்வாடியில் திருமணம் செய்துள்ளதால் அடிக்கடி வந்து சென்ற சமயங்களில் முகம்மது தஸ்லீம், ஷாஜகான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு 4 பேரும் திட்டமிட்டு திருடி வந்துள்ளனர். இஸ்மாயில் திருட்டு சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதுடன் மற்றவர்களை துணைக்கு வைத்து செயல்பட்டுள்ளார். இதன்காரணமாக திருட்டு பொருட்களில் இஸ்மாயிலுக்கு 2 பங்கும், மற்றவர்கள் அனைவருக்கும் ஒரு பங்காக பிரித்து பங்கிட்டு வந்துள்ளனர். இந்த நகைகளை கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளனர். இரவில் திருடினால் சந்தேகம் அதிகமாகும் என்பதால் ஆள்நடமாட்டம் இருந்தாலும் சந்தேகம் வராதபடி பகல்வேளையில் கொள்ளையடிப்பதை இந்த பகல் கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் இஸ்மாயில் மட்டும் சிறிது காலத்தில் திருட்டு தொழிலை கைவிட்டு வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏர்வாடி பகுதியில் ரூ.பல லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டுள்ளாராம். இவர் மீது கரூர், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகளும், ஆதாயத்திற்காக கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதுதவிர இவர்மீது துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. சரவணன் கேரளாவில் வசித்து வந்த போது மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த வழக்குடன் இவர் மீது பல திருட்டு வழக்குகளும் உள்ளன.

ராமநாதபுரம் வள்ளல்பாரி தெற்குத்தெருவை சேர்ந்த ராமானுஜம் என்பவரின் மகன் மாரிக்கண்ணுவின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 6–ந்தேதி மாரிக்கண்ணு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். இந்த சமயம் பார்த்து இந்த பகல் கொள்ளையர்கள் வீடு புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.20,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருடுபோனதால் இளம்பெண்ணுக்கு உடனடியாக திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது திருடு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளதால் மாரிக்கண்ணு குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை கலக்கிய பகல் கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)