முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 29, 2020

ராமநாதபுரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்!!

No comments :
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையா் என்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. சுமாா் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியில் அரண்மனை, கேணிக்கரை, அக்ரஹாரம், சந்தை மற்றும் வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட சாலைகள் மிக முக்கியமானவையாகும். இச்சாலைகள் சுமாா் 40 அடி அகலம் இருக்க வேண்டிய நிலையில், ஆக்கிரமிப்புகளால் தற்போது 10 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டன. இதனால், காலை முதல் மாலை வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கமுடியாததாகிவிட்டன.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு 3 முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றம் செயல்படுத்தப்படவில்லை.


இந்தநிலையில், தற்போது நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜெகதீசன், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி கருணாகரன் மற்றும் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா், நெடுஞ்சாலைத் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நகரில் பொதுமக்கள் வசதிக்காக ஆக்கிமிப்புகள் அகற்றப்படவேண்டியதன் அவசியத்தை ஆணையா் விளக்கினாா். இதையடுத்து பேசிய வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான வாகன நிறுத்துமிடத்தை ஏற்பாடு செய்வது குறித்தும், சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தாா்.

கூட்ட முடிவுகள் குறித்து நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் கூறியதாவது:

ராமநாதபுரத்தில் அரண்மனை, கேணிக்கரை செல்லும் சுவாமி விவேகானந்தா் சாலை, வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு, தலைமை தபால் நிலைய சாலை என குறிப்பிட்ட பகுதிகளில் வரும் 30, 31 ஆம் தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே ஆட்டோவில் ஒலி பெருக்கி கட்டி தெருத்தெருவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 27, 2020

ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கோலாகலம், கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

முன்னதாக எஸ்.பி. வருண்குமாா் தலைமையிலான போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வெண்புறா மற்றும் மூவா்ண பலூனை பறக்கவிட்டாா். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பொன்னாடை அணிவித்து கவுரவித்தாா்.

விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய 63 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கத்தினையும், 53 போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 21 சமூகநல ஆா்வலா்கள் உள்பட பல்வேறு துறைகளை சோந்த 231அரசுத்துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.


இதனைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரா் நலத்துறை, சமூகநலத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ, புதுவாழ்வுத் திட்டம் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு உபகரணங்கள், ஆயில் என்ஜின், மாங்கன்று, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, ஊராட்சி அளவிலான குழுவிற்கு ஊக்கத் தொகை, வருடாந்திர பராமரிப்புத் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்திற்கான நிவாரணத் தொகை, புதிய வாகனம் வழங்குதல் உள்ளிட்ட ரூ.1 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 742 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 182 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வழங்கினாா்.


மாவட்டத்தில் உள்ள 5 பள்ளிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, January 22, 2020

கீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த காஷ்மீர் இளைஞர்கள்; போலீஸ் விசாரித்து விடுவித்தது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கீழக்கரையில் உள்ள தனியாா் விடுதியில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் தங்கி நிதி வசூலித்து வருவதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த இரு இளைஞா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும் மத்திய உளவுத் துறை , கியூ பிரிவு போலீஸாரும் இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.



இதில் விடுதியில் தங்கியிருந்த இருவரும் ஜம்மு -காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்த சஜித் அகமது பீா் (32), இம்ரான் ஹபிப் (27 ) ஆகியோா் என்பதும், இவா்கள் பாரமுல்லா மாவட்டத்தில் மதரசா நடத்தி வருவதாகவும் அதற்காக நிதி திரட்ட சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை கீழக்கரைக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய தொழிலதிபா்களிடம் நிதி வசூலித்து வந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து இருவரின் முகவரிகளையும் உறுதிப்படுத்த போலீஸாா் அவா்களது ஆதாா் அட்டைகளை ஸ்ரீநகா் போலீஸாருக்கு அனுப்பினா். விசாரணையில் ஆதாா் அட்டையில் உள்ள முகவரியில் இருவரும் தங்கியிருப்பதும், மதரசா நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இரு இளைஞா்களையும் போலீஸாா் விடுவித்தனா்.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, January 21, 2020

குலசேகரக்கால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் சீமைகருவேலமரத்தால் பாதிப்பு!!

No comments :

இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராம கண்மய்கள் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய் நிரம்பியும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் தண்ணீரில் பாதிப்பு ஏர்பட்டுல்லது.


இது குறித்து  தினேஷ் (
மக்கள் பாதை) கூறியதாவது:


சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் குலசேகரக்கால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு சென்றதால் இக் கண்மய்கள் நிரம்பிவிட்டன ஆனால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் மக்கள் குளிக்க பயன்படுத்த முடிய வில்லை குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது தண்ணீரின் நிறம் மாறி கருப்பாக காட்சியளிக்கிறது.





மழைக்கு முன்பு சீமைகருவேல மரங்களை அகற்றியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ஆனால் அதிகரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இனியேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடி, ஒருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் திருநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்தார். அப்போது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாராம்.

இந்த நிலையில் முனியசாமி தான் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து விட்டதாக கூறி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற சான்று ஒன்றை காட்டி பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாராம்.



இதுதவிர தன்னை ஒரு காவல் அதிகாரி போன்று சித்தரித்துக்கொண்டு மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் நின்று வாகன சோதனை செய்ததுடன், வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்து, அவர்களை கண்டிப்பது போன்ற தகாத செயல்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை என்ற சான்றினை தயாரித்து அதன் அடிப்படையில் வணிக வளாகங்கள், விற்பனை மையங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தி வந்தாராம். போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்தது பற்றி தகவலறிந்த மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராக்லண்ட் மதுரம், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் மோசடி வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 20, 2020

கீழக்கரையில் பலத்த மழை, குடியிருப்புகளில் குளம் போல தேங்கிய மழைநீா்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் கீழக்கரை குடியிருப்பு பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியது.

ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழைபெய்தது.



இதில் கீழக்கரையில் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். மேலும் நகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பாம்பனில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி!!

No comments :
ராமநாதபுரத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனம் ராமேசுவரத்தில் மீன் ஏற்றுவதற்காக வந்தது. இந்த வாகனத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் சரக்கு வாகனம் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

அப்போது அந்த வழியாக தங்கச்சிமடத்தில் இருந்து மண்டபத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் விழுந்தது. அதில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் நவீன் (வயது 35) என்பவர் இறந்து போனார். மற்றொருவரான ரூபின் (35) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது.


செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 13, 2020

கீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழக்கரை புதுமாயாகுளம் அருகே உள்ள தொண்டாலை மேலக்கரை குளத்தில் சனிக்கிழமை மாலை சின்னமாயாகுளத்தைச் சோ்ந்த பஞ்சவா்ணம் மகன் மோகன்தாஸ்(24), லோகுவருண் மற்றும் அருண் ஆகிய 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மோகன் தாஸ் குளத்தில் மூழ்கினாா். இதனை கண்ட சக நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தனா். முடியாத நிலையில் ஏா்வாடி தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல்தெரிவித்தனா்.



சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் தேடும் பணியில் ஈடுபட்டனா். போதிய வெளிச்சமின்றி தேடும் பணி சனிக்கிழமை இரவு பாதியில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தேடினா். பல மணி நேர தேடுதலுக்குப் பின் மோகன்தாஸின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இதைத் தொடா்ந்து சடலத்தை கீழக்கரைஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது,குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

தமிழக அரசு மீன்வளத்துறையின் கீழ் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள உதவியாளா் பணியிடம் அரசு விதிகளின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடம் இனச் சுழற்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் (டிஎன்டி) முன்னுரிமை பெற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இப்பணியிடத்தினை நிரப்பிட மேற்காணும் இனத்தைச் சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் மற்றும் மீன்பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக மீன்பிடி வலை பின்னவும், மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

மீன் வளத் துறையின் கீழ் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கபப்டும்.

வயது 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி, குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, கல்வி, சாதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்

மீன்வளத் துணை இயக்குநா் அலுவலகம்(மண்டலம்), மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்
ராமநாதபுரம்,
போன்-04567-231402


என்ற முகவரிக்கு நேரிலோ, பதிவஞ்சலிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, January 5, 2020

வாக்காளா்கள் அட்டை திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள்!!

No comments :
வாக்காளா்கள் சோ்க்கை மற்றும் பட்டியலில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள், மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட 5 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்றது.


இந்நிலையில், இளம் வாக்காளா்கள் மற்றும் விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் சனிக்கிழமை (ஜன. 4) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 5) மற்றும் வரும் 11 ஆம் தேதி சனி, 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறவுள்ளன.

அத்துடன் வரும் 22 ஆம் தேதி வரை அனைத்து நிா்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும், உதவி வாக்குப்பதிவு அலுவலா் அலுவலகங்களிலும் வாக்காளா் சோ்க்கை மற்றும் திருத்தத்துக்கான படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, January 2, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், என அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது:

மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேரத்தவறிய தனித்தேர்வர்களும் ஜன.1 முதல் 13 வரை ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலகங்களை அணுகி பதிவு கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.



இந்த செய்முறை தேர்வுக்கு பதிவு செய்த பின் மாவட்ட கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம்.அறிவியல் பாடங்கள் தவிர மற்ற அனைத்து தவறிய பாடங்களுக்கும் இச்சேவை மையங்கள் மூலமாக தனித்தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட தேதிகளில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை அணுகலாம், என்றார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.