முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 30, 2021

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரை குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!!

No comments :

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள 21 வார்டுகளும் மறுவரையறைக்கு உள்படுத்தப்பட்டு சமீபத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நகராட்சியில் மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 47,730 பேர் உள்ளனர். ஆனால் வார்டுகள் மறுவரையில் முறையாக வாடுகளில் தெருக்கள் சேர்க்கப்படாத நிலையே உள்ளது. மேலும் வாக்காளர்களை சேர்ப்பதிலும் குளறுபடி காணப்படுகிறது. அதன்படி 598 பேர் தங்களது எதிர்ப்புகளை மனுக்களாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் அளித்துள்ளனர்.

 





இந்நிலையில், கீழக்கரை வார்டு மறுவரையறை குளறுபடிகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

 

அப்போது அவர்கள் கூறியது:

 

நகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடியை சீர்படுத்திய பிறகே தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வார்டு குளறுபடிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றனர்.


செய்தி:
கீழை ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 21, 2021

பெரியார் விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!!

No comments :

பெரியார் விருதுக்கு ராமநாதபுரத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளர் மாநில முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். நடப்பு 2021 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

 


எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பணிகள் செய்தவர்கள், சாதனைகள் படைத்தவர்கள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டும்.

 

விண்ணப்பதாரரின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்கான பணிகள் விவரம் உள்ளிட்டக்கியதாக இருக்கவேண்டும்.

 

விண்ணப்பங்கள் வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் வந்த சேர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 17, 2021

ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி திறன் போட்டிகள்!!

No comments :

 

நூலக வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நவ. 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.

 

இதுகுறித்து மாவட்ட நூலகர் ஜி.ஞானஅற்புத ருக்மணி தெரிவித்ததாவது:

 

ராமநாதபுரம் மாவட்ட நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) பகலில் நடைபெறுகிறது.



விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

இதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.

 

விழாவில் நூலக வாசகர் வட்ட பிரமுகர்கள் மற்றும் நூலக அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

சென்னை பட்டாளம் பகுதியில் முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக வெள்ள நிவாரணப்பணி!!

No comments :

 

சென்னை பட்டாளம் பகுதி கனகராய தோட்டம் (காவா மோடு) என்ற பகுதியில் சுமார் 75 க்கும்  மேற்பட்ட குடும்பத்திற்கு எந்த ஒரு நிவாரணப் பொருட்களும் வரவில்லை என்ற செய்தியை அறிந்து சென்னை மண்டலம் சென்னை மண்டல #முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக நேற்றைய தினம் உரிய நேரத்தில் அனைத்து  சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 

 


பயனாளிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் *KAM முஹம்மது அபூபக்கர்* Ex.MLA. அவர்கள் நிவாரண பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்

 

இந்த நிவாரணப்ணியில் ஏராளமான சமூக அர்வலர்கள் பங்கு கொண்டனர்.

 

தகவல்: கீழை ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, November 16, 2021

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

நாட்டின் வளர்ச்சி பணி மற்றும் சமுதாய சேவை பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

கடந்த ஆண்டிற்கான விருது விரைவில் வழங்கப்பட உள்ளது. விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களும் இவ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.விருது பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 


My Govt portal என்ற இணையதளம் மூலம் 

https://innovate.mygov.in/national-youth-award-2020

 

என்ற இணைப்பு மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

அதற்கான கடைசி தேதி 19-11-2021.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரை மூலம் மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக 2 விண்ணப்ப நகல்களை 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கு அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்கலாம். 

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, November 11, 2021

ராமநாதபுரத்தில் நவ.12ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.12) நடத்தப்படுகிறது.

 


முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன. முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம்.

 

தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் 2 புகைப்படங்களுடன் அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவேண்டும்

 

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரையில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் மாவட்டத்தில் உள்ள 1,691 வேளாண்மைக் கண்மாய்களில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகின்றன. கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் உள்ள வேளாண்மைக் கண்மாய்களில் பெரும்பாலானவை 40 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளன.

 


இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்):

 

ராமநாதபுரம் 3,

மண்டபம் 17.60,

ராமேசுவரம் 23.40,

பாம்பன் 25.40,

தங்கச்சிமடம் 22.20,

பள்ளமோர்க்குளம் 5.,

திருவாடானை 13.80,

தீர்த்தாண்டதானம் 19.8,

தொண்டி 16.50,

வட்டாணம் 21.30,

ஆர்.எஸ்.மங்கலம் 9.10,

பரமக்குடி 5,

முதுகுளத்தூர் 2.20,

கமுதி 4.40,

கடலாடி 2.40

 

என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதன்படி 15 இடங்களில் சராசரியாக 11.94 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

புதன்கிழமை காலை மற்றும் பகலில் ஓரிரு இடங்களில் சாரல் மழையே பெய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 10, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகளை உடனுக்குடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

 


இயற்கை இடர்பாடுகள் தொடர்பான பாதிப்புகளை தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 

அதன்படி, பொதுமக்கள் தகவல்களை உடனுக்குடன்

இலவச தொலைபேசி எண் 1077, 04567-230060 மற்றும்

கைபேசி எண் 7708711334

 

ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 7, 2021

நவ. 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி!!

No comments :

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் நவ. 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ம. சுசிலா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் 12 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 


அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தொழிற் பயிற்சி மைய மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

 

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு

முதல் பரிசு ரூ.5 ஆயிரம்,

இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம்,

மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

 

போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தனியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, November 2, 2021

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கு சிறப்பு முகாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சங்கர்லால் குமாவத் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

 

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 77 ஆயிரத்து 750 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 84 ஆயிரத்து 47 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 

 

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 908 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 85 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 160 பேர் வாக்காளர்களாக இருந்தனர். 

 


இதன் பின்னர் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 2 ஆயிரத்து 145 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 351 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 499 நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இதே காலத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 303 ஆண் வாக்காளர்களும், 3 ஆயிரத்து 493 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 800 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார்கள், நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் எதிர்வரும் 13 மற்றும் 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.