முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 20, 2017

முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் வெளியீடு!!

No comments :

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்ற நிலை உள்ளது. 

இந்த நிலையில், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயாராகும் வகையில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தினை இன்று வெளியிட்டார்.


புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னரும் புதிய பாடம் இருக்கும்.

புதிய வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை கூறலாம்.
   
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தீரன் - அதிகாரம் ஒன்று – தமிழ் திரை விமர்சனம்!!

No comments :


தமிழ் சினிமாவில் 'Heist' ஜானரில் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் கூட, இயக்குனர் H.வினோத்தின் 'சதுரங்க வேட்டை' அவற்றில் ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு திரைப்படம். தனது முதல் படத்திலேயே ஊடகங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வினோத், தனது இரண்டாவது திரைப்படத்தை ஒரு 'க்ரைம் த்ரில்லர்' ஆக எடுத்துள்ளார்.

1990களில் தமிழகத்தையே அச்சுறுத்திய ஒரு வடநாட்டு கொள்ளைக்கூட்டத்தை தமிழக அதிகாரிகள் அயராது உழைத்து தேடிப் பிடிக்க முயன்ற உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பரபரப்பான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். கொள்ளை நடக்கும் வீடுகளில் இருப்பவர்களை கொடூரமாக அடித்துக் கொல்லும் ஒரே மாதிரியான கொலைகள் மற்றும் குற்றவாளிகளின் கைரேகையைத் தவிர வேறு எந்த தடயங்களுமே இல்லாத நிலையில், தமிழக காவல் அதிகாரிகளின் முயற்சிகளையும் குற்றவாளிகள் பிடிபட்டனரா இல்லையா என்பதையும் விறுவிறுப்பாக சொல்கிறது 'தீரன் - அதிகாரம் ஒன்று'.


தமிழ் சினிமாவில் காவல் அதிகாரிகளை முழுக்க முழுக்க நல்லவர்களாகவோ அல்லது முழுக்க முழுக்க கெட்டவர்களாகவோ மட்டுமே சித்தரித்த திரைப்படங்களே மிக அதிகம். அவர்களது இயல்பு வாழ்க்கையையும், அவர்கள் நேர்மையாக இருக்க முடியாமல் போவதற்கான காரணங்களையும், அவர்களை தங்கள் கடமைகளிலிருந்து தவற செய்யும் விஷயங்களையும், அவர்கள் தரப்பு நியாயத்தையும் பேசிய திரைப்படங்களை எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில், 'தீரன் - அதிகாரம் ஒன்று' சற்றே ஸ்பெஷல் ஆன ஒரு போலீஸ் திரைப்படம். இது ஒரு வழக்கமான கமர்ஷியல் போலீஸ் திரைப்படம் அல்ல என்பதே இத்திரைப்படத்தின் தனித்துவம்.

காவல் அதிகாரிகள் தங்கள் தினசரி வேலைகளில் சந்திக்கும் நடைமுறை பிரச்சினைகளையும், காவல்துறைக்குள்ளேயே இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதையும் காட்டிய விதமே மிகவும் புதிதாக இருந்தது. 'அக்யூஸ்டுக்கு சாப்பாடு, ஸ்டேஷனுக்கு தேவையான எழுதுபொருட்கள், பெட்ரோல் காசுன்னு அதுவே 2, 3 லட்சம் ஆகுது. அதுக்கு ஒரு வழியை சொல்லிட்டீங்கன்னா, இனிமே லஞ்சமே வாங்கமாட்டோம்' என ஒரு போலீஸ் சொல்ல 'இருக்கவங்ககிட்ட வாங்கிக்குங்க.. இல்லாதவங்களுக்காக வேலை பாருங்க' என சொல்வது, ஆரம்பத்திலிருந்தே 'இந்த கேஸில் குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது' என தொடர்ந்து மட்டம் தட்டும் ஒரு காவல் அதிகாரியிடம் 'பிடிச்சிடலாம், சார்... உங்களை மாதிரி ஒரு முக்கியமான ஆளை போட்டுத்தள்ளுனா, சீக்கிரமே பிடிச்சிடலாம்' 'அக்யூஸ்ட்கிட்ட இருந்த பப்ளிக்கை காப்பாத்துற போலீஸ் வேலையைப் பார்க்காம, பப்ளிக் கிட்ட இருந்து அக்யூஸ்ட்டை தப்பிக்க வைக்குற அடியாள் வேலையைத்தானே பார்க்குறோம்' என சொல்வது என எல்லா விதமான போலீஸ் முகங்களையும் நமக்கு காட்டுகிறார் வினோத்.



அவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்த குற்றவாளியிடம் வாக்குமூலம் வாங்க முடியாததால், 'எம்.எல்.ஏ கொலை கேஸ்ல குற்றவாளியை பிடிச்சாச்சுன்னு யாராச்சும் 2 பேரை சரண்டர் ஆக வெச்சு கேஸை முடிங்க' என உயராதிகாரி சொல்வது போன்ற காட்சிகளில் நிஜம் சுடுகிறது. படம் முடிந்த பின், இறுதியில் வரும் 'இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகள் யாருக்கும் எந்த வித பதவி உயர்வோ விருதுகளோ வழங்கப்படவில்லை' என்கிற உண்மை இதயத்தை கனக்க செய்கிறது.

அதிகம் தொடப்படாத, ரொம்பவே புதிய கதைக்களம் என்பதால் இயல்பாகவே ஒரு சுவாராஸ்யம் தொற்றிக்கொள்கிறது. படத்தின் இறுதி வரையிலுமே, அந்த பரபரப்பு நீடிக்கிறது. 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் இருந்த ஒரு தெளிவும், சின்ன சின்ன விஷயங்களில் கூட குறைகளின்றி விரிவாக சொல்ல வேண்டும் என்கிற முனைப்பும் இந்த படத்தின் திரைக்கதையிலும் காணப்பட்டது. கொள்ளைகள் நடக்கும் விதம், கொள்ளை கும்பலின் நெட்வொர்க் மற்றும் அவர்கள் தப்பிக்கும் விதம் என ஒவ்வொரு விஷயத்தையும் திரையில் காட்டியதன் பின்னணியில் எக்கச்சக்க ஆராய்ச்சி இருந்திருக்கிறது. ஒரு குறையற்ற திரைப்படத்தைக் கொடுக்க வேண்டுமென முயற்சித்த இயக்குனர் மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்கள்! கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட மக்களை 'குற்றப் பரம்பரை' என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது முதல், ராஜ்புட் போர்களில் அம்மக்களின் பங்களிப்பு பற்றியும், 'மூட்டைப்பூச்சி' ட்ரீட்மென்டிற்கு கூட அசராமல் தாக்குபிடிப்பது பற்றியும், குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொல்வதைப் பற்றியும் காட்டிய விதத்திலேயே மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களை வலுவாக படைத்துவிட்டார் இயக்குனர்.

படம் முழுக்கவே பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகள் சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டுவந்துவிடுகிறது. குறிப்பாக, இடைவேளைக்கு முன்னால் வரும் காட்சிகளும், இரண்டாம் பாதியில் பனே சிங்கை பிடிக்க முயற்சிக்கையில் பேருந்தில் வரும் துரத்தல் காட்சியும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது (பனே சிங்கின் கிராமத்திலிருந்து கார்த்தியும் மற்ற அதிகாரிகளும் தப்பிப்பது போன்ற, சில நம்ப முடியாத ஸ்டண்ட்களும் படத்தில் உண்டு). பனே சிங்கிடம் உண்மையை வரவழைப்பது போன்ற, நல்ல மாஸ் ஹீரோயிஸ காட்சிகளும் ஆங்காங்கே உண்டு.

நடிகர் கார்த்தியின் கேரியரில் 'பருத்திவீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்' போன்ற தரமான படங்களின் வரிசையில் 'தீரன் - அதிகாரம் ஒன்று' திரைப்படமும் நிச்சயமாக இடம்பிடிக்கும்! மிடுக்கான காவல் அதிகாரி வேடத்தில், கார்த்தி படம் நெடுக கம்பீரமாக வலம் வருகிறார். 'சிறுத்தை' என்கிற திரைப்படத்தில் ரத்தினவேல் பாண்டியன் என்கிற ரொம்பவே சினிமாத்தனமான போலீஸ் வேடத்தில் நடித்த கார்த்திக்கும், இந்த படத்தில் போலீஸாக நடித்திருக்கும் கார்த்திக்கும் நூறு வித்தியாசங்களை சொல்லலாம். எந்தவொரு சின்ன குறையும் கூட சொல்ல முடியாத அளவிற்கு, பிரமாதமாக நடித்திருக்கிறார் கார்த்தி. ராகுல் ப்ரீத்தி சிங் அழகு சிலை போல இருக்கிறார், தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கே உரிய அப்பாவித்தனமான பாவனைகளோடு குறும்புத்தனங்கள் செய்கிறார். அவர் வரும் ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, படத்தின் வேகத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. போஸ் வெங்கட் உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர நடிகர்களும், வடநாட்டு நடிகர்களும் நன்றாக நடித்திருக்கின்றனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், சிவநந்தீஸ்வரனின் படத்தொகுப்பும், கிப்ரான் அவர்களின் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு தோள் கொடுக்கும் வகையில் பக்கபலமாக அமைந்துள்ளது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, பல காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது.

எந்த அவசியமுமே இல்லாமல் இரண்டாம் பாதியில் வரும் தேவையற்ற ஐட்டம் சாங், சற்றே தொய்வடையும் கடைசி இருபது நிமிடங்கள், இரண்டாம் பாதியின் நீளம் உள்ளிட்ட ஒரு சில குறைகளைத் தாண்டி, 'தீரன் - அதிகாரம் ஒன்று' இந்த ஆண்டின் தரமான பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்று!


விமர்சனம்: எண்டிடிவி மூவீஸ்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களான
நிலம் மேம்பாட்டு திட்டம்,
நிலம் வாங்குதல் (பெண்கள் மட்டும்),
தொழில் முனைவோர் திட்டங்கள்,
பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், மருத்துவ மையம்,
மருந்தியல்.
கண் கண்ணாடியகம்,
முடநீக்கு மையம்,
ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், (எம்.பி.பி.எஸ். பி.எஸ்.எம்.எஸ், பி.டி.எஸ், பி.பார்ம், டிபார்ம், லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் பிரிவு படித்திருக்கவேண்டும்)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான
சுழல்நிதி,
பொருளாதார கடனுதவி,
மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி,
மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி,
தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி



ஆகிய பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும்.
18 முதல் 65 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சுயவேலை வாய்ப்பு திட்டத்திற்கு மட்டும் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விபரங்களுடன் குடும்ப அட்டை,  இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை,  மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் டின் நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம், மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களை பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக
மாவட்ட மேலாளர்,
தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)