(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 5, 2015

கீழக்கரை வங்கியில் கள்ள நோட்டுக்கள் டெபாசிட், இதுவரை 12 பேர் கைது!!

No comments :
ஏர்வாடியைச் சேர்ந்தவர் நூர்தீன்(32). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் நல்லஇபுராகீம்(35) மூலம் கீழக்கரையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தனது கணக்கில் ரூ.20 ஆயிரம் டெபாசிட் செய்ய கொடுத்துவிட்டார்.
அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5 கள்ள நோட்டுக்களாக இருந்துள்ளன. இதுகுறித்து வங்கி மேலாளர் ரமேஷ் கீழக்கரை போலீசுக்கு புகார் தெரிவித்தார்.

கீழக்கரை டி.எஸ்.பி., மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நூர்தீன் மற்றும் நல்ல இபுராகீமை நான்கு தினங்களுக்கு முன்பு கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் நூர்தீன் ஏர்வாடியைச் சேர்ந்த சபூர் இபுராகீமிற்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அவர் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5ஐ கடனாக திருப்பிக் கொடுத்தார்.



அந்த நோட்டுகள் கள்ள நோட்டுக்களாக இருக்கலாம் என தெரிவித்தார். 

அதன் பின் போலீஸ் விசாரணையில் இலங்கை நபர் மூலம் ஒரு கும்பல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட்ட ஏர்வாடியைச் சேர்ந்த சபூர்இபுராகீம்(45),
முகமதுமிலாஜ்(24),
யாசர்அராபத்,
இபுராகீம்
ஆகிய 4 பேரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று கீழக்கரை போலீசார் மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற வெங்கடேஷ்(23), மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த வீரமுருகன்(23),

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முனீஸ் என்ற முருகேசன்(39), வத்தலக்குண்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ராஜன்(42), சிவா(31), பாம்பனைச் சேர்ந்த ராபர்ட்(42) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி: தினகரன்

No comments :

Post a Comment