(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 29, 2015

அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா!!

No comments :
ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், முதலாவது புத்தகத் திருவிழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அதே ஆண்டில் (2014 இல்) செப்டம்பரில் 2 ஆவது புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது.


இவ்விரு புத்தகத் திருவிழாக்களையும் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு, பயனுள்ள ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரத்தில் 3 ஆவது புத்தகத் திருவிழா, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கின்றன. 

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கு, அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இதை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் மற்றும் பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில், 100-க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்பிலான பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும் இதில், மூலிகைத் திருவிழா, பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுவதுடன், கோளரங்கம், தொலைநோக்கி ஆகியனவும் அமைக்கப்படும். தினசரி பகல் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும், மாலையில் எழுத்தாளர்கள் சந்திப்பு, அறிஞர்களின் சிறப்புரை, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment