(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 14, 2019

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின்கீழ் மானியத்தில் ஸ்கூட்டர் பெற்றிட ஜனவரி 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2017–18–ம் ஆண்டில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின்கீழ் 1,920 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர்.

இதேபோல தற்போது 2018–19–ம் ஆண்டிற்கும், 1,920 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பணிபுரியும் 8–ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களது தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தங்களது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரியும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளர்களாக தங்களை பதிவு செய்துள்ள பெண்கள், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில், சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக நிறுவனங்களான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பு ஊதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
விண்ணப்பிக்கும் பயனாளிகளில் தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்கள், மலைப்பாங்கான பகுதிகள், பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சார்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனுடைய மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதிதாக வாங்கும் ஸ்கூட்டரின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். வாகனம் 1.1.2018–க்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.



வாங்கப்படும் வாகனம் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம் 1988–ன்கீழ் வட்டார போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

வயது, முகவரி, ஓட்டுனர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கும் பயனாளிகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட அளவிலான பரிசீலனைக்குழு ஆய்வு செய்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும்.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று வருகிற 18–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment