(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 14, 2015

டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு

No comments :
டெல்லியின் 8 வது முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் துணை முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவும், 5 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67ல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் வெற்றிக்கு பின் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் டெல்லியில் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதன்படி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் முன்னிலையில் டெல்லியின் 8 வது முதலமைச்சராக பதவி ஏற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் அவருடன் துணை முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா பதவியேற்றார்.
மேலும் இவர்களுடன் சத்யேந்தர் ஜெயின், ஜிதேந்தரா தோமர், கோபால் ராய், சந்தீப் குமார் மற்றும் ஆசிம் அகமத் ஆகிய 5 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் அனைவருமே இளம் வயதினர் என்பதால் இந்தியாவிலேயே மிகவும் இளமையான அமைச்சரவையாக கெஜ்ரிவாலின் அரசு அமைந்துள்ளது. 
பதவியேற்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்ததும், ராம் லீலா மைதானத்தில் இருந்து டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலகத்திற்கு சென்ற கெஜ்ரிவால், தனக்கான அறைக்கு சென்று முதல்வர் பதவிக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் ராம் லீலா மைதானத்தில் பேசிய கெஜ்ரிவால் "அடுத்த 5 ஆண்டுகள் டெல்லி மக்களுக்காக நான் சேவை செய்வேன். டெல்லி மக்கள் என்னை நேசித்தார்கள் என அறிவேன். ஆனால், இவ்வளவு தூரம் என்னை நேசிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. 70-க்கு 67 என்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி. வாக்கு மழையில் எங்களை மக்கள் நனைய வைத்திருக்கின்றனர். இது ஒரு அற்புதம். இதன் மூலம் இறைவன் எங்களுக்கு எதோ ஒரு சேதி சொல்லியிருக்கிறார்.
நாங்கள் ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றும் ஊடாக இருப்போம். பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம். 

டெல்லியை ஊழல் இல்லாத முதல் மாநிலமாக உருவாக்குவேன் என அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் பேசும்போது, "கடந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதும் டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தோம். அப்போது லட்சியம் மட்டுமே இருந்தது. இப்போது எங்களுக்குத் தெரியும், டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவது எப்படி என்பது தெரியும்.

டெல்லியில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எந்தக் கட்சி தொப்பியை தலையில் தாங்கியிருந்தாலும் சரி, கட்சி பேதமின்றி நடவடிக்கை பாயும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, "கடந்த டிசம்பர் 28-ம் தேதி நான் கூறியதையே இன்று மீண்டும் தெரிவிக்கிறேன். யாராவது லஞ்சம் கேட்டால் மறுக்காமல், லஞ்சம் கொடுங்கள். அதை அப்படியே உங்கள் மொபைலில் போட்டோ பிடித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். 

பிரதமரை சந்தித்தபோது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வேண்டுமென பிரதமரிடம் வேண்டியுள்ளேன். ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை இருக்கிற்து. இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறும் காலம் வந்துவிட்டது" என்றார். 


No comments :

Post a Comment