(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 25, 2016

ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க கோரிக்கை!!

No comments :
ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை, திறக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் நீண்டகாலமாக தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில், இந்து அறநிலையத்துறை சமய நூலகம் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் ஒரு பகுதியில் இயங்கி வந்த இந்த நூலகத்தில் மதம் சார்ந்த நூல்கள், புராண, வரலாற்று நூல்கள், ராமேஸ்வரம் தொடர்புடைய பழமையான நூல்கள், ஏடுகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

ஆன்மிகம் சார்ந்த மாதாந்திர புத்தகங்களும் இருந்தது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் இந்த நூலகத்தை பார்வையிட்டு பயன்படுத்தி வந்தனர். நூலகத்தை பராமரித்து, பார்வையிட வருபவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ் புலமையில் பட்டம் பெற்ற நபரும் கோயில் நிர்வாகத்தினால் பணி அமர்த்தப்பட்டார்.

சிறப்பாக இயங்கி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வந்த நூலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் கிழக்குரத வீதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் நூலகத்திலிருந்த புத்தகங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பூட்டி வைக்கப்பட்டது. 

தற்போது பூட்டப்படட அறைக்குள் பழமையான புத்தகங்கள் உட்பட அனைத்து நூல்கள் தூசு படிந்து கேட்பாரற்று யாருக்கும் பயன்படாமல் உள்ளது. மேலும் நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கிரந்தம், சமஸ்கிருதம் மொழி சார்ந்த பழமையான அரிய நூல்கள் பலவும் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களுக்கும், கல்வியாளர்களும் பயன்படுத்தி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் நூலகத்திற்கென்று பணி அமர்த்தப்பட்ட தமிழ் புலவர் டிக்கெட் கவுண்டரில் பக்தர்கள் தீர்த்தமாட டிக்கெட் கொடுப்பது, சுவாமி சன்னதியில் தரிசன டிக்கெட் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார். 


இதில் கூடுதல் வருவாய் கிடைப்பதால் நூலகத்தை திறப்பதை மறந்து டிக்கெட் கொடுக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். 
இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாத சுவாமி கோயிலில் இயங்கி வந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலகம் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் பட்டியலில் நூலகம் சிறப்பாக இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. பூட்டப்பட்ட நூலகத்தை திறந்து அனைவரும் பயன்பெறும் வகையில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment