(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 16, 2016

குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவையா, அழையுங்கள் சைல்டுலைன் 1098!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளில் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் சைல்டுலைன் அமைப்பினரை  1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், சைல்டுலைன் இயக்குநர் எஸ்.கருப்புச்சாமி ஆகியோர் கூறியது:

ஆதரவற்ற குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், வன்முறையாலும், பல்வேறு கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.  



முக்கியமாக மருத்துவ உதவி தேவைப்படுவோர் சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். சைல்டுலைன் அமைப்பின் உதவியால் மொத்தம் 6 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். வாய்பேச முடியாத செவித்திறன் குறைபாடுடைய இரு குழந்தைகளுக்கு அரசின் நிதியுதவியை பெற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டில் மட்டும் 94 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேரும், பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளாக 75 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.  பிச்சையெடுத்த குழந்தைகள் 28 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு ஓடிப்போனதாக 10 பேரும், காணாமல் போனதாக 18 குழந்தைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சைல்டுலைன் அமைப்பின் மூலம் மருத்துவ உதவி 36 பேருக்கும், கல்வி உதவி 139 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

பேட்டியின் போது சைல்டுலைன் மையத்தின் துணை இயக்குநர் எஸ்.தேவராஜ் உடனிருந்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment