(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 14, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதலுக்காக சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை முதல் தொடங்க இருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: 

சாலையோர வியாபாரிகள் நலன் கருதி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கல், பரப்பளவிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்தல், மாற்று இடம் ஒதுக்குதல், தகுதியற்ற இடங்களில் வியாபாரம் செய்வதை கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இதற்கான சட்டம் மற்றும் விதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி விதிகளை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. கணக்கெடுப்புக்கு வரும் உள்ளாட்சிப் பணியாளர்களிடம் சாலையோரத்தில் வியாபாரிகள் தங்களது பெயர், நிரந்தர முகவரி, பிறந்த தேதி, வகுப்பு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் எண், செய்யும் தொழில், வியாபாரம் செய்யும் இடத்தின் அமைவிடம் முதலான விவரங்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். 

இக்கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது என ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment